அவுஸ்திரேலிய சகலதுறைவீரரான மிச்சல் மார்ஷ் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம்
மார்ஷ் இம்முறை IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் ஆடியிருந்தார். எனினும் தசை உபாதையினை எதிர்கொண்ட அவர் கடந்த 7ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு திரும்பியிருந்தார். விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே மிச்சல் மார்ஷ் IPL தொடரில் இம்முறை எஞ்சியிருக்கும் போட்டிகளில் ஆடுவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதேவேளை மிச்சல் மார்ஷ் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரில் பூரண உடற்தகுதியுடன் தனது தாயக அணியான அவுஸ்திரேலியாவினை பிரதிநிதித்துவம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிச்சல் மார்ஷே T20 உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவினை தலைவராக வழிநடாத்துவார் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை 32 வயது நிரம்பிய மிச்சல் மார்ஷ் 2022ஆம் ஆண்டு டெல்லி கெபிடல்ஸ் அணியினால் வீரர்கள் ஏலத்தில் இந்திய நாணயப்படி 6.5 கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு அவர் மூன்று பருவங்களிலும் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக 21 போட்டிகளில் ஆடி 440 ஓட்டங்களையும், 17 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<