உஸ்மான் கானுக்கு தடை வழங்கிய அமீரக கிரிக்கெட் வாரியம்

47

ஐக்கிய அரபு இராச்சியத்தின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான உஸ்மான் கானுக்கு அமீரக கிரிக்கெட் வாரியம் (Emirates Cricket Board) ஐந்து ஆண்டுகளுக்கு அதனது கிரிக்கெட் தொடர்களில் அனைத்திலும் பங்கேற்க தடை வழங்கியிருக்கின்றது.  

ஜொப்ரா ஆர்ச்சரை களமிறக்குமா இங்கிலாந்து

உஸ்மான் கான் தன்னுடைய கிரிக்கெட் அணியான ஐக்கிய அரபு இராச்சியத்தை (UAE) விட்டுவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு விசுவாசமாக செயற்படுவதாக கூறப்படும் நிலையிலையே அவருக்கு அமீரக கிரிக்கெட் வாரியம் (ECB) ஊடாக ஐந்து ஆண்டுகளுக்கு தடை வழங்கப்பட்டிருக்கின்றது 

உஸ்மான் கான் தனது தடை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அதாவது 2029ஆம் ஆண்டு வரை அபுதாபி T10 லீக் மற்றும் ILT20 அடங்கலாக அமீரக கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்து நடாத்தும் எந்த கிரிக்கெட் தொடர்களிலும் பங்கெடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

உஸ்மான் கானின் தடை தொடர்பில் அமீரக கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் அவர் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் வீரர்களுக்கான விதிமுறைகளை மீறி நடந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட உஸ்மான் கான் இறுதியாக நடைபெற்று முடிந்த ILT20 மற்றும் அபுதாபி T10 லீக் தொடர்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உள்ளூர் வீரராக ஆடியதோடு நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரில் வெளிநாட்டு வீரராக ஆடியிருந்தார் 

அவர் இறுதியாக நடைபெற்ற பாகிஸ்தான் சுபர் லீக் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்களில் ஒருவராக மாறியதோடு தனக்கு பாகிஸ்தான் அணியினை கிரிக்கெட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்ய விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் 

இதனையடுத்து அவர் பாகிஸ்தான் அணியின் பயிற்சிக்குழாத்தில் உள்வாங்கப்பட அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அழைப்பினை ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயங்களே உஸ்மான் கானுக்கு அமீரக கிரிக்கெட் சபை மூலம் தடை விதிக்கப்பட காரணமாகியிருக்கின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<