இந்திய – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல

198

இந்திய – ஆப்கான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இடம் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக Cricbuzz செய்தி இணையதளம் குறிப்பிட்டிருக்கின்றது.

>>தனது முடிவுக்கு 8-9 மாத கால அவகாசம் எடுத்துள்ள டோனி<<

இந்திய கிரிக்கெட் அணியும், ஆப்கான் அணியும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒன்றில் விளையாடுவதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நடைபெறும் எனக் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணம் என்பவற்றில் விளையாடவிருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட கிரிக்கெட் போட்டிகள் மற்றும் செப்டம்பர் மாத ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் என்பவற்றினை கருத்திற் கொண்டே இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகின்றது.

இதேநேரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் டிஸ்னி நிறுவனத்துடன் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், புதிய தொலைக்காட்சி உரிமம் பெறப்படாததும் ஆப்கான் அணியுடனான கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் உருவாகுவதற்குரிய மற்றுமொரு காரணமாகும்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரான மிர்வயிஸ் அஷ்ரப் தற்போது IPL தொடரின் இறுதிப் போட்டிகளை பார்வையிட இந்தியாவில் காணப்படும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>IPL இறுதிப்போட்டியில் ஆசியக்கிண்ணம் தொடர்பான இறுதி முடிவு<<

இதேநேரம் இந்திய – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் இடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போட்டி அட்டவணை காலக் கிரமத்தில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<