IPL அறிமுகத்தை பெற்றுக்கொண்ட வனிந்து ஹஸரங்க!

Indian Premier League 2021

193
RCB

இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க, இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL), றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அறிமுகத்தை இன்றைய தினம் (20) பெற்றுக்கொண்டார்.

IPL தொடரில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது கட்டப் போட்டிகள், நேற்றைய தினம் (19) டுபாயில் ஆரம்பமாகியது. முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதியதுடன், சென்னை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தநிலையில், இன்றைய தினம் நடைபெறவுள்ள IPL தொடரின், 31வது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

குறித்த இந்தப் போட்டியில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களமிறங்குவதன்மூலம், IPL அறிமுகத்தை பெற்றுக்கொண்டுள்ளார். பெங்களூர் அணிக்காக அறிமுகத்தை பெற்றுக்கொண்ட வனிந்து ஹஸரங்க, இந்த ஆண்டு IPL தொடரில் விளையாடும் முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், இலங்கை அணியின் மற்றுமொரு வீரரான துஷ்மந்த சமீர, வனிந்து ஹஸரங்க விளையாடும் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்தப்போட்டியில், இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், தொடர்ந்துவரும் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<