கோஹ்லி, சர்மாவை தொடர்ந்து மோர்கனுக்கு 12 இலட்சம் அபராதம்

Indian Premier League 2021

123
IPLT20.COM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கனின் போட்டிக்கட்டணத்தில் 12 இலட்சம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

குறித்த இந்தப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்போது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் 20 ஓவர்களை வீசத்தவறிய குற்றச்சாட்டு காரணமாக இயன் மோர்கனுக்கு 12 இலட்சம் அபராத தொகையாக அறவிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தப்போட்டியில், 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததுடன், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது வெற்றியை பதிவுசெய்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதேநேரம், ஐ.பி.எல். தொடரில் அபாரதம் வழங்கும் மூன்றாவது அணித்தலைவராக இயன் மோர்கன் பதிவாகியுள்ளார். இதற்கு முதல் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். விதிமுறையின் படி, முதல் முறையாக இந்த குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்கும் போது, அணித்தலைவருக்கு 12 இலட்சம் அபராதமாக விதிக்கப்படும். இரண்டாவது முறையும் இதே தவறு விடப்படும் நிலையில், அணித்தலைவருக்கு 24 இலட்சமும், வீரர்களுக்கு 6  இலட்சமும் அபராதாமாக விதிக்கப்படும். ஒரே பருவகாலத்தில் மூன்றாவது முறையாக இந்த தவறு விடப்படுமானால், அணித்தலைவருக்கு 30 இலட்சமும், வீரர்களுக்கு 12 இலட்சமும் அபராத தொகையாக நிர்ணயிக்கப்படும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க