ஆசிய கிண்ணம் மீண்டும் தள்ளிப்போகும் சாத்தியம்

320
Asia Cup to be postponed

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இவ்வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) சந்தேகம் வெளியிட்டுள்ளது 

ஆசிய கிரிக்கெட் பேரவை சார்பில் ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்படி, கடந்த வருடம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது

>> இறுதிநேர மாற்றத்துடன் இந்தியா புறப்பட்ட இலங்கை லெஜன்ட்ஸ் அணி

இந்த நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் மீண்டும் தலைதூக்கியுள்ளதால் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியது

இதுஇவ்வவாறிருக்க, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதில் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டது

தற்போது நடைபெற்று வருகின்ற இந்தியாஇங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்த பிறகு இறுதிப் போட்டியில் களமிறங்கும் இரண்டாவது அணி எது என்பது பற்றி அறிவிக்கப்படவுள்ளது

இதனிடையே, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி தெரிவாகினால் ஜூன் மாதம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை மீண்டும் ஒத்திவைப்பதற்கு நேரிடலாம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது

>> இலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் இயக்குனராக டொம் மூடி

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஈசான் மானி கூறுகையில்

”ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், இம்முறை ஜூன் மாதம் லண்டனில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது

அதேநேரம் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி அட்டவணையில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்பட மாட்டாது என்றே தெரிகிறது. இதனால் இப்போட்டி 2023 ஆண்டுக்கு தள்ளிவைக்கபடலாம்.

>> இம்ரான் கானிடமிருந்து இலங்கை வீரர்களுக்கு முக்கிய அறிவுரை

அதேபோல இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. 

இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் அணி மற்றும் அதிகாரிகளுக்கு பிசிசிஐ இன்னும் விசாவை உறுதி செய்யாததால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உலகக் கிண்ணம் நடத்தப்படலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசிம் கான் கூறுகையில்,

”உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நடந்தால், இந்திய அணியினால் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாது. இதுகுறித்து இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம்” என தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<