எண்ணம். வசந்தம். மாற்றம்.

என்ன செய்யப் போகிறீர்கள்?

நாளையுடன் பெப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

2021இன் இரண்டு மாதங்கள் நிறைவாகி, 10 மாதங்கள் எஞ்சியிருக்கின்றன.

கடந்து முடிகின்ற இரண்டு மாதங்களில் எதையெல்லாம் உருவாக்கியுள்ளீர்கள்?

எவற்றையெல்லாம் சாதித்துள்ளீர்கள்?

புதிதாகக் எவற்றைப் பற்றியெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்?

இலக்குகள் இருந்தாலும், அந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பொறிமுறைகளை தயார் செய்தீர்களா?

தயார் செய்த பொறிமுறைகளில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய அறிதல் தோன்றியதா?

முறைப்பட்டுக் கொண்டிருக்காமல், படைத்தலின் மூலம் பரவசம் அடைந்து கொள்ள முடிந்ததா?

விரியும் கேள்விகள் ஏராளம்.

உங்களின் அடுத்த நிமிடம் இந்தக் கேள்விகளுக்கான விடைகளோடு தொடங்கட்டும்.

இந்த ஆண்டு தொடங்கிய நாளிலிருந்து, நான் ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும், எழுதியதை உங்களோடு பகிர வேண்டுமென இலக்கைக் கொண்டிருந்தேன்.

2006 ஆம் ஆண்டிலிருந்து நிறம் வலைப்பதிவில் நான் தொடர்ச்சியாக எழுதி வந்தாலும், ஒரேயொரு தடவையே மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் எழுதி பதிவு செய்திருந்தேன்.

அந்த அனுபவத்தை இந்த ஆண்டில் தொடரவே இந்தச் சவாலை எனக்குள் ஏற்றிக் கொண்டேன்.

இந்த இலக்கை அடைவதற்கான பொறிமுறையையும், ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவைகள் என்ன என்பது பற்றிய தெளிவையும் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு நாளும் எழுதினேன். பலதையும் எழுதினேன். அவற்றில் தெரிவு செய்தவைகளைப் பகிர்ந்தேன்.

சமூக ஊடகங்களின் பரப்பில் புதிதாய் பலரினதும் அறிமுகங்கள் கிடைத்தது. புதிய வாய்ப்புக்களை ஈட்டித் தந்தது.

குறிப்பாக, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய தளங்களில் என் எழுத்துக்களின் வருவிளைவுகள் சென்று வசந்தம் கொண்டு தந்தது.

இன்றும் எழுதுகிறேன்.

இப்படி நீங்கள் கொண்ட இலக்குகளை அடைந்து கொள்ள இலகுவான வழி ஒன்றேயொன்றுதான்.

செயலில் வரவேண்டியது இரண்டு சொற்கள் தான்.

“சிறியதாகத் தொடங்குங்கள்.”

எழுத வேண்டுமா? ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 நிமிடங்கள் எதையாவது பற்றி எழுதுங்கள். காலப்போக்கில், எல்லாமே அற்புதமாக நெறியாள்கை செய்யப்படும்.

எழுதுவதென்பது தியானம். நீங்கள் உங்கள் எண்ணங்களோடு பேசுகின்ற தருணம்.

எண்ணங்கள் என்பது நீங்களல்ல. நீங்கள் வேறு. உங்கள் எண்ணங்கள் வேறு.

நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்கள் எண்ணங்களோடு நீங்கள் பேசுகிறீர்கள் என்று அர்த்தம்.

யோசிப்பதை சீரமைப்பதுதான் எழுத்து. எழுதும் போதுதான் உங்கள் எண்ணங்களுக்கு தெளிவு கிடைக்கிறது. ஐயங்கள் அகல்கிறது. புதியவைகளைக் கற்றுக் கொள்வதற்கான அவகாசம் தோன்றுகிறது.

“ஒரு மலையை அசைப்பதற்கு எத்தனிப்பவன், முதலில் சிறிய கற்களை அப்புறப்படுத்துவதில் இருந்தே தொடங்குகிறான்.” என்று கன்பியூசியஸ் சொல்கிறார்.

இங்கு தேவை எண்ணங்களின் சீராக்கம். அதை யாரும் உங்களுக்காக செய்யப் போவதில்லை. வேண்டுமென்றால், மற்றவர்கள் உங்கள் எண்ணங்களுக்குள் குழப்பத்தையே விதைக்கலாம்.

உங்கள் எண்ணங்களை சீராக்குவதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.

இன்று என்ன செய்யப் போகிறீர்கள்? நாளை பெப்ரவரி 28.

தாரிக் அஸீஸ்
27.02.2021

எனது நாளாந்த எழுத்துக்களை இந்த இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம். https://www.facebook.com/tharique.azeez/

Selective Focus Photography of Hour Glass
நேரமே கொஞ்சம் நில்லாயோ?

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்