கொழும்பு கிங்ஸ் அணி வீரருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

434

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக இணைக்கப்பட்ட கனடா நாட்டு வீரர் ரவீந்திரபோல் சிங், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விடயத்தினை கொழும்பு கிங்ஸ் நிர்வாகத்தின் ஊடகபேச்சாளர் ஒருவர் எமது ThePapare.com இணையத்தளத்துக்கு அறியத்தந்துள்ளார்.

லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்

கனடா தேசிய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ரவீந்திரபோல் சிங், லங்கா ப்ரீமியர் லீக் அணியான கொழும்பு கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இணைக்கப்பட்ட ஒரேயொரு ஐசிசியின் துணை அங்கத்துவ நாட்டு வீரர் என்ற பெருமையை ரவீந்திரபோல் சிங் பெற்றிருந்த போதும், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக அவரால் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமாக பேசப்படாத வீரர் என்றாலும், கனடா அணியின் மிகச்சிறந்த மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராக ரவீந்திரபோல் சிங் உள்ளார். குறிப்பாக வெறும் 12 T20i போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள இவர், 150.28 என்ற வேகத்தில் 266 ஓட்டங்களை குவித்துள்ளார். 

Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

அதுமாத்திமின்றி தனது முதல் T20i போட்டியில் சதம் விளாசிய ஒரேயொரு வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற கெய்மன் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இவர், 48 பந்துகளில் 101 ஓட்டங்களை குவித்து இந்த சாதனையை தன்வசப்படுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும் தற்போது கொழும்பு கிங்ஸ் அணியிலிருந்து ரவீந்திரபோல் சிங் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை நியமிக்கவேண்டிய கட்டயாத்தில் அந்த அணி உள்ளது. எனவே, அடுத்த சில நாட்களில் கொழும்பு கிங்ஸ் அணி மாற்று வீரரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<