சர்வதேச போட்டிகளை ஆரம்பிக்க நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அனுமதி

99
New Zeland Cricket

நியூசிலாந்து அணியின் இந்த பருவகாலத்துக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஆண்டின் இறுதியில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதியை நியூசிலாந்து அரசாங்கம் வழங்கியுள்ளது. 

நியூசிலாந்து அரசாங்கம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. குறித்த இந்த தொடர்களுக்கான போட்டி அட்டவணை அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>> இலங்கை வரவிருந்த பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19 தொற்று

இதேநேரம், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு T20I போட்டிக்காக அவுஸ்திரேலியா செல்லவிருந்தது.  எனினும், அங்கு அமுல்படுத்தப்படும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதிமுறை காரணமாக தொடரில் விளையாடுவது சாத்தியம் இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் வைட் தெரிவித்துள்ளார். 

“அவுஸ்திரேலியாவில் கடைப்பிடிக்கப்படும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது இரண்டு அணிகளுக்கும் கடினமானதாகும். நாம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையுடன் கலந்துரையாடி வருகின்றோம். அடுத்த வருட ஆரம்பத்தில் எமது கோரிக்கைகளை முன்வைத்து தொடரை நடத்தவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” 

>> Video – எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்திய RCB | Cricket Galatta Epi 36

இந்தநிலையில், நியூசிலாந்தில் அடுத்துவரும் தொடர்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது என டேவிட் வைட் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ரசிகர்கள் அழைக்கப்படுவார்களா? இல்லையா? என்ற உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எவ்வாறாயினும், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர், நியூசிலாந்துக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் கொண்டுவருவதற்கான மேலதிக நடவடிக்கைகளை நியூசிலாந்து கிரிக்கெட் சபை மேற்கொண்டுவருவதாக டேவிட் வைட் மேலும் சுட்டிக்காட்டினார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<