தோல்வியையும் தழுவி, தண்டனைக்கும் உள்ளான கோஹ்லி

305
Virat Kohli
Image Courtesy - IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரின் விதிமுறையை மீறி மந்த கதியில் பந்துவீசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு 12 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில் தற்சமயம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரசிகர்கள் இன்றிய மூடிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தொடர் ஆரம்பமாகி 6 லீக் போட்டிகள் மாத்திரம் முடிவடைந்துள்ள நிலையில் இரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

>> மற்றுமொரு போட்டியைத் தவறவிடும் அம்பத்தி ராயுடு

இந்நிலையில், தொடரின் ஆறாவது லீக் போட்டி விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் நேற்று (24) டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 97 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்று 2020 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் தங்களது 2ஆவது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் தற்போது புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி முதலில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இவ்வாறு அதிரடியாக ஆடியதன் மூலம் பந்துவீச்சில் ஈடுபட்ட பெங்களூர் அணி அழுத்தத்திற்கு உள்ளானது. களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த விராட் கோஹ்லி கூட இரண்டு பிடியெடுப்பு வாய்ப்புகளை நழுவ விட்டார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களையும் நிறைவுசெய்ய ஒரு மணித்தியாலம் 51 நிமிடங்கள் தேவைப்பட்டன. 

>> இலங்கை தொடருக்காக புதிய கோரிக்கைகளை விடுக்கும் பங்களாதேஷ்

சாதாரணமாக T20 போட்டியொன்றில் 20 ஓவர்களையும் நிறைவு செய்வதற்கு 1 மணித்தியாலம் 30 நிமிடங்கள் வழங்கப்படும். ஆனால் குறித்த போட்டியில் கோலியின் அணி இவ்வாறு மேலதிகமாக 21 நிமிடங்கள் எடுத்திருந்தது. 

இதன் காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில்  குறைந்த பந்துவீச்சு பிரதியை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் விராட் கோஹ்லிக்கு 12 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விதிக்கப்பட்ட அபராதமானது ஐ.பி.எல் தொடரின் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினுடைய முதல் குறைந்த பந்துவீச்சு பிரதிகுற்றமாகவும் பதிவானது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<