இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜொனதன் ட்ரோட்

110
AFP

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜொனதன் ட்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் போல் கோலிங்வுட் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் போட்டிக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, நாளை (05) மான்செஸ்டர் – ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே இங்கிலாந்து அணியே நாளை நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கவுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜொனதன் ட்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்ட இவர், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பயிற்சியாளர்கள் குழாத்தில் ஒரு உறுப்பினராகவும் கடமையாற்றினார்.

பாகிஸ்தானுடன் விளையாடவுள்ள இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

அத்துடன், கவுண்டி கழகங்களில் ஒன்றான கென்ட் கழகத்தின் இடைக்கால துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்ட ஜொனதன் ட்ரோட், கடந்த வருடம் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழாத்தில் இடம்பெற்றிருந்தார்.

இதனிடையே, கடந்த வருடம் இந்திய துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவிக்கு ஜொனதன் ட்ரோட் விண்ணப்பித்திருந்த போதிலும், ட்ரோட்டை பின்தள்ளி விக்ரம் ராத்தோர் அப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி

39 வயதான ஜொனதன் ட்ரோட், இதுவரை 52 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக முதல் தர போட்டிகளில் 18,662 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக விளங்கிய ஜொனதன் ட்ரோட், 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதனிடையே, நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஜீடன் பட்டேல் மற்றும் வோர்விக்‌ஷெயர் வேகப்பந்து வீச்சாளர் கிரேம் வெல்ச் ஆகியோரும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் குழுவில் ஆலோசகர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணியுடனான 2 ஆவது மற்றும் 3 ஆவது டெஸ்ட் போட்டிகளின் போது இங்கிலாந்து அணியுடன் இணைந்து செயற்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகக் கிண்ண சுபர் லீக்கில் இங்கிலாந்துக்கு முதல் தொடர் வெற்றி

முன்னதாக சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

எனவே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நம்பிக்கையுடன் பாகிஸ்தானை இங்கிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<