Friday 23 August 2019

வட இந்தியப் பயணம் (8)


8.

மீண்டும் பயணம் தொடர்ந்தது.

டெல்கியில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களாக இந்திரா காந்தி ஞாபகார்த்த நிலையம், நேரு / மகாத்மா காந்தி அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டோம்.

இந்திராகாந்தியின் அதிகாரபூர்வ இருப்பிடமாக இருந்த இந்த இல்லம் தற்போது அவரது ஞாபகங்களைத் தாங்கி நிற்கும் மியூசியமாக உள்ளது. நேரு, இந்திராகாந்தியின் பல அரிய புகைப்படங்கள், இந்திராகாந்தி பாவித்த பொருட்கள், அவர் பாவித்த நூலகம் எனப் பலவற்றை அங்கே பார்க்கக்கூடியதாக இருந்தது. அத்துடன் அவரது மெய்ப்பாதுகாவலர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. 

 

அந்த இடத்தைப் பார்த்தபோது என்னுடன் படித்த ஒரு நண்பன் ஞாபகத்திற்கு வந்தான். 1984ஆம் ஆண்டில் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அவர் இறந்துபோய்விட்டதால் இனித் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சாத்தியமான தீர்வு கிடைக்கப் போவதில்லை என நண்பன் புலம்பியபடியே அழுது கொண்டிருந்தான். எங்களில் மிகவும் கெட்டிக்காரனான அவன் பின்னாளில் தற்கொலை செய்து கொண்டான். 

ஜமுனா நதி தீரத்திலே ராஜ்காட் (Raj Ghat) இருக்கின்றது. இங்குதான் மகாத்மா காந்தி சமாதி அமைந்துள்ளது. காந்தியின் படுகொலையின் பின்னர், அவரது பூதவுடல் ஜனவரி 31, 1948 அன்று எரியூட்டப்பட்ட இந்த இடத்தில் சமாதி அமைக்கப்பட்டது. வருடம் பூராவும் இங்கே தீபம் எரிந்துகொண்டிருப்பதைக் காணலாம்.

இந்தப் பயணத்தில் குறிப்பிட்டிருந்தபடி - பாராளுமன்றம் (Parliament), குடியரசுத் தலைவர் இல்லம் (Rashtrapati Bhawan) என்பவற்றை வெளிப்புறத்தில் இருந்தே பார்வையிட்டோம்.


ஏற்கனவே பிர்லா மந்திர் ஒன்றினை ஜெய்ப்பூரில் பார்த்திருந்தோம். மற்றும் செங்கோடை, ஆக்ரா கோட்டையை ஒத்திருந்தால் அவை இரண்டையும் அடுத்த தடவை பார்ப்பதற்காக விட்டிருந்தேன்.


பயணத்தின்போது சுவாமி நாராயண் கோவில் (அக்‌ஷர்தாம் கோவில்) பற்றிச் சிலர் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உரையாடல் எமது கவனத்தை ஈர்த்தது. மறுநாள் நாமும் அதைப் பார்வையிடத் தயாரானோம்.



பயணம் தொடரும்…….









1 comment:

  1. தொடர் அருமை
    தொடருங்கள்

    ReplyDelete