எண்ணம். வசந்தம். மாற்றம்.

நிறத்திற்கு வயது பத்து!

நான் எனதிந்த “நிறம்” வலைப்பதிவில் முதற் பதிவிட்டு, இன்றோடு பத்து வருடங்கள் பூர்த்தியாகின்றன.

வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் தொடங்கிய காலமது. எனது எண்ணங்களுக்கு முகவரி கொடுக்க வேண்டும். முகவரியை உலகறியச் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளுக்கு வெகுவாகப் பொருந்திய ஊடகமாக வலைப்பதிவு தெரிந்தது.

எழுத்துக்களை எழிலாகச் சேர்த்து செய்கின்ற வசனங்கள், எனது எண்ணத்தின் முகவரியாகியது. எண்ணங்களையும் அனுபவங்களையும் சுமந்து வருகின்ற வசனங்கள், எனது வாசிப்புப் பசிக்கு விருந்தாகியது.

அதனை நான் தெரிவு செய்தேன்.

தொடர்ச்சியாக பத்து வருடங்கள் நிறத்தின் மூலமாக உங்களைச் சந்தித்தேன். பல்வேறு தேசங்களிலிருந்தும் குறிப்பாக மின்னஞ்சல் வாயிலாக நிறம் பற்றி நீங்கள் சொல்லியனுப்பும் செய்திகள், மட்டிலா மகிழ்ச்சியை தரும்.

இன்னும் பல நேரங்களில் “நீங்களா அந்த நிறம்?” என நேரில் கண்டு அறிமுகமாபவர்கள், நிறம் பற்றிச் சொல்லும் அழகிய நிலைகள் ஆனந்தம் தரும்.

நிறத்தின் தொடக்கம் தொட்டு, பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் நான் உங்களோடு பேசியிருக்கிறேன். எண்ணங்களை எழுத்துக்களால் செதுக்கும் போது ஈற்றில் எழும் உணர்வு பற்றி சொல்லிவிட முடியாது. அனுபவிக்க வேண்டும். இந்த வசனத்தை நான் எழுதியதும் கூட அந்த அழகிய அனுபவம் அரும்பிய நிலையில் தான்.

கோடுகள், வளைவுகள் கோர்த்துச் செய்யப்படும் எழுத்துக்களின் கோலங்கள் பற்றிய எனது வேட்கை, மனத்திற்கு இதமாகியது. எழுத்துக்களை எழிலாகச் சேர்த்து செய்கின்ற வசனங்கள், எனது எண்ணத்தின் முகவரியாகியது. எண்ணங்களையும் அனுபவங்களையும் சுமந்து வருகின்ற வசனங்கள், எனது வாசிப்புப் பசிக்கு விருந்தாகியது.

எல்லாமே எழுத்தினால்தான் ஆளுகை செய்யப்படுகின்றது என்பதை சற்று ஆழமாக எமது சூழலை அவதானித்தால் அறிந்து கொள்ள முடியும். எழுதுவதை ஒரு தியானமாகவே நான் பார்க்கின்றேன்.

நிறம் எழுத்தினால், அழகிய எண்ணங்களுக்கு வண்ணம் சேர்க்கும். அது எல்லாமும் ஒன்றாகி வாழ்க்கைக்கு வசந்தம் சேர்க்கும்.

நான் இங்கு வாசிக்க விரும்புவதை எழுதுகின்றேன். நான் விரும்பி வாசிக்கின்றவை பற்றியும் எழுதுகின்றேன். இப்படியும் எழுதலாம் என்றும் நான் பரீட்சித்துப் பார்க்கின்றேன். நிறம் என்பது அது தோன்றுகின்ற நிலையில் வெவ்வேறு பெயர்களை எடுத்துக் கொள்கிறது. இந்த நிறமும் அப்படித்தான்; வாழ்வின் அழகிய நிலைகளின் அற்புதங்கள் பற்றிய விடயங்களை ஒவ்வொரு நிறமாக இது சொல்லிக் கொண்டேயிருக்கும்.

எழுத்துக்கள் எப்போதும் இலகுவானதல்ல; வாழ்க்கை போல. கடினமாக உணர்ந்து வியர்வை சிந்தி வாழ்க்கையை வசப்படுத்தும் போது வருகின்ற அந்த அழகிய ஆறுதலையும் ஆனந்தத்தையும், எழுத்துக்கள் வசனங்களாகக் கோர்க்கப்பட்டு வாசனை தரும் போது உணர முடிகிறது.

இங்கு எல்லாமுமே சாத்தியம் தான். கொஞ்சம் முயற்சிக்க வேண்டியிருக்கிறது. முயற்சியை நமக்கு யாராலும் தர முடியாது போலவே, நாமும் அதனை எங்கும் வாங்கவும் முடியாது.

எமக்காக யாரும் முயற்சிக்க வேண்டுமாயினும் கூட அதற்கும் நாம் தான் முயற்சிக்க வேண்டும்.

பயணங்கள் முடிவதில்லை. பயணம் தொடரும். நிறத்தோடு தொடர்ந்து பயணிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி.

தாரிக் அஸீஸ் / உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்