Friday 22 June 2018

மழையில் நனைந்த உறவு


சிசு.நாகேந்திரன்

“அவனுக்கென்ன, போய்விட்டான். போகும் இடம் சொல்லாமலே போய்விட்டான்.  அரைமணித்தியாலம் சொர்க்க சுகத்தையும், ஐந்துநிமிட இன்பத்தையும் தந்துவிட்டுப்  போய்விட்டான்.  அவனைப்பற்றிய தகவலே இல்லை. அன்று எனக்கு இன்பமூட்டி என்னை ஏமாற்றிவிட்டுப் போனவனை நான் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? எங்குதான் சென்று தேடுவது? விலாசமும் இல்லை. பெயர்மட்டும் தெரிந்தால் போதுமா? அவனுடன் தொடர்புகொள்வதுதான் எப்படி? ஒருவேளை பெயரும் உண்மையான பெயராக இருக்குமோ, என்னவோ!”

நந்தினி வேதனையுடன் மனம்புழுங்கிக்கொண்டு இடிந்துபோய், திண்ணைக் கப்புடன் சாய்ந்துகொண்டு, மடித்த முழங்கால்களுக்கிடையில் தலையை முட்டுக் கொடுத்தபடி, அழுது வடிந்துகொண்டிருந்தாள்.   அவளின் உள்ளத்தில் ஏக்கம் நிறைந்த எண்ணங்கள் மேலும் ஓடிக்கொண்டிருந்தன. ……

“இளம் பெண்ணாக, அதுவும் கன்னித்தன்மையைப் பறிகொடுத்த துர்ப்பாக்கிய வதியாக, நான் வெளியே புறப்பட்டு, அவனைத் தேடுவது சாத்தியமாகுமா? அவனைக் கண்டுபிடிக்காவிடில் என் கதி என்ன?  நான் ஒரு மடைச்சி! ஏமாளி! பொறுப்பில்லாதவள்! அன்று அவன் காட்டிய அனுதாபத்தில்  ஏமாந்து என்னைப் பறிகொடுத்தேனே! எவ்வளவு மோட்டு முண்டம்! எனது உடம்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்தானே!…….  சரி, அதை இப்போது நினைத்து அழுவதில் என்ன பயன்?

“அவனைத் தேடிக் கண்டுபிடிக்காவிட்டால் எனது பிற்காலம் என்னவாகப் போகிறது? எனக்குத் திருமணம் வந்து கைகூடுமா? வந்தாலும் அதற்கு நான் எப்படி முகங்கொடுப்பேன்?  அப்படித்தான் கடவுள் என்மேல் இரக்கப்பட்டு எனக்குத் திருமணம் ஒன்றை ஏற்படுத்திவிட்டாரானால், என்னை மணப்பவரின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்?  முதலிரவிலேயே அவர் என் உடல்நிலையைக் கண்டுபிடித்ததும் அடுத்தநாளே என்னை வெளியே துரத்திவிடுவாரே!  கடவுளே!  இதற்கென்ன போகும் புத்தி?  இதிலிருந்து நான் எப்படித் தப்புவது? இனிமேல் எனது வாழ்க்கைதான் எப்படிப் அமையப்போகிறதோ!  இப்படியே எனக்கொரு வாரிசுடன் தனிமரமாகத்தான் நான் காலம்கழிக்க நேருமோ? அது நடைமுறையில் சாத்தியமாகுமா?

“எனக்குத் திருமணப் பேச்சுக்கால் மும்முரமாக நடக்கிறதே!  உண்மையைச் சொல்லி அதை நிற்பாட்டவா? அப்படி உண்மையைச் சொல்லிவிட்டால் எனது அப்பா,  என்னைச் சும்மா விட்டுவைப்பாரா?  எனது அண்ணன்மார் இருவரும் என்மேல்; கோபிப்பார்களா,  அல்லது வேதனைப்படுவார்களா? எனது மானங்கெட்ட நடத்தையால் எங்கள் குடும்பத்தையே இழிவுபடுத்திவிட்டேனே!

“இதெல்லாவற்றிற்கும் வழி – என் மனதைத் தொட்டு என்னை ஏமாற்றிவிட்டுப் போனவனைத் தேடிக்கண்டுபிடித்து அவனைக் கைப்பிடிப்பதுதான் ஒரேவழி.  ஆனால் நான் எப்படி தனியாகப் புறப்பட்டு அவனை எங்கே போய்த் தேடுவது?  யாரிடம் விசாரிப்பது?  என்ன சொல்லி விசாரிப்பது?  நீ ஏன் அவனைத் தேடுகிறாய் என்று கேட்பவர்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? அவன் இருக்கும் விலாசத்தை எப்படி அறிவது? அறிந்துவிட்டாலும் அங்கு நான் பத்திரமாகப் போய்ச்சேருவேனா? போகும் வழியில் காமுகர்கள், முரடர்கள் என்னைத் தொடர்ந்தால் அவர்களிடமிருந்து நான் எப்படித் தப்புவது? கூடவே துணைக்கு நான் யாரைக் கூட்டிப் போவது?  என்ன காரணம் சொல்லி ஒரு துணையைக் கூட்டிப்போவது?  நான் அவனைத் தேடிப்போக, அப்பா அண்ணன்மார் என்னைத்தேடி அலையமாட்டார்களா?  இதென்ன பொல்லாத சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன்?  இறைவா!

“அன்று அவன் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பி நான் ஏமாந்துபோனேனே!  ‘உனக்கு நான்: எனக்கு நீ’ என்று அவன் சொன்ன உறுதிமொழி என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றதே!  அந்த வார்த்தைகளை நம்பி அவனுக்கு இடம்கொடுத்து ஏமாளியாகி விட்டேனே! 

“பெண்களுக்கு ஆசையையும் வைத்து, அதனூடாக ஆபத்தையும் வைத்துவிட்டாரே ஆண்டவன்!  இயற்கையன்னை சும்மா விடுவாளா?  அன்று நடந்த பிழையின் பலாபலன் இன்னும் சில வாரங்களில் தெரியவந்துவிடுமோ? அன்றைய இன்பநிகழ்ச்சியை மற்றவர்களுக்கு மறைக்கலாம்.  ஆனால் அதனால் கிடைத்த பெறுபேற்றை எப்படி மறைப்பது? அதுவும் எத்தனைகாலந்தான் மறைக்கமுடியும்?  பரம்பொருளே! இதற்குப் பரிகாரம் ஒன்றுமே இல்லையா?  வைத்தியரிடம் போகலாம், சோதிக்கலாம்.  ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் கருவை அழிக்கவும் முற்படலாம். ஆம்! இவற்றை எனக்கும் செய்யத் தெரியும். ஆனால் அவற்றை யாருக்கும் தெரியாமல் எப்படிச் செய்து முடிப்பது?  அப்பாவிடமிருந்து தப்பமுடியுமா?  தவணை வரும் நாட்களில் வீட்டாரின் கவனத்தைவிட்டு விலகமுடியுமா? அல்லது, என்மேல் மனமிரங்கி, எனது தவணைகள்  ஒழுங்காகத்தான் வருகின்றன  என்று அவர்களும் சேர்ந்து நடிப்பார்களா? உற்றவர்களுக்கே பொய்யைச்சொல்லி இது மறைக்கக்கூடிய காரியமா?  மாதத்தவணை வரக்கூடிய நாட்களில் எனது உடை மாற்றங்களைக்  கவனிப்பார்களே!  எப்படி அவர்களின் கழுகுப்பார்வையிலிருந்து தப்புவது?  ஆண்டவன் கண் விழிப்பாரா?  அடுத்த தவணை தப்பாமல் வருமா? அதற்கு இறைவன் அருள்செய்வாரா?

“ஒரேயொரு நாள் - அதுவும் சற்றுநேரம் - அனுபவித்த இன்பம் இத்தனை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டதே! அப்படியானால் இனி எனக்கு வாழ்க்கையே இல்லையா? அது எப்படி நியாயமாகும்?  புராணகாலத்து சகுந்தலையும் என் நிலையில்தானே இருந்தாள்! அப்போ, நானும் ஒரு சகுந்தலையாகிவிட்டேனா?  அவளுடன் என்னை ஒப்பிடலாமா? அது எப்படி?  அவளின் கதையை நாடெல்லாம் போற்றுகிறார்கள். நாடகமாக நடிக்கிறார்கள்.  சினிமாவில் காட்டுகிறார்கள்.  என்னைப் போல் எத்தனையெத்தனை அப்பாவிப் பெண்கள், ஏமாறிப் பெண்கள் பல நாடுகளிலும் இருக்கிறார்கள்!  அவர்கள் எல்N;லாரும் சகுந்தலைகள் ஆகிவிடுவார்களா?

“மாதத்தவணையும் ஒழுங்காகி, பேச்சுக்காலும் கைகூடி, எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம்.  இந்தக் காலத்தில் மேலைத்தேயங்களில் மேற்கொள்ளும் வழக்கம்போல, திருமணம் முடிந்ததும் யாருக்கும் சொல்லிக் கொள்ளாத, தூரத்திலுள்ள  ஹோட்டலில்தானே முதலிரவு கழியும்.  அவ்வேளை என்னுடைய கதி என்னவாகிறது?  கைப்பிடித்த கணவனுக்குத் தெரியாமல் விடாதே! என்னுடைய உடல்நிலையை அறிந்ததும் அவர் மனத்தில் என்னென்ன எண்ணங்கள் எல்லாம் தோன்றும்!  அவர் மற்றவர்களுக்கு, உயிருக்குயிரான தனது உறவினருக்குக்கூட, என் நிலைமையைத் துணிந்து சொல்லமாட்டார். சொல்லவும் முடியாது. சொன்னால் அன்றே இருவரும் பிரிந்துவிடவேண்டிவரும். சரி,  அவர் சொல்லாமல்தான் மனதிலேயே வைத்துக்கொண்டால், எங்கள் இருவரின் வாழ்நாள் பூராவும் அது ஒரு ஊமைவேதனைக்குரிய குற்றமாக இருந்துகொண்டேயிருக்குமே!  எனது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தபடியே இருக்குமே!  அவருக்கும் அந்தக் கறள் மனதைவிட்டு நீங்காது.  அதை மறந்து எந்த அலுவலில் ஈடுபட்டிருந்தாலும் அடிமனதிலிருந்து அந்த வடு அடிக்கடி எழத்தான்செய்யும்.  எனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அவரிடம் மன்றாட்டம் கேட்கவேண்டும் என்று மனம் ஏவும்.  ஆனால் என்னிலுள்ள குறைபாடு அவருக்குத் தெரியவந்து, அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், தெரியாதது போலிருக்கிறாரா அல்லது அவர் அதைக் கவனிக்கவே இல்லையா என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது? அதை உறுதியாகத் தெரியாமல் எதுக்காக வீணாக அவரிடம் விடயத்தை நாமே அவிட்டுவிடவேணும்? ‘அப்பா குதிருக்குள் இல்லை’ என்ற கதைபோல் ஆகிவிடாதா?”

நந்தினிக்கு சில நாட்கள் இப்படியே சஞ்சலத்துடன் கழிந்தன.

சில நாட்கள் கழிந்தபின்னர் - ஒரு நாள் சாயந்தரம் -  எங்கே போகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் வீட்டிலிருந்து வெளியே நந்தினி தன்னிச்சையாக நடந்துகொண்டே போனாள்.  கனதூரம் நடந்து விட்டாள்.  களைப்பு, பசி, தாகம், மனச்சோர்வு -  எதிரே தொடரூந்து நிலையம் (சுயடைறயல ளவயவழைn) தென்பட்டது.  மெல்லமெல்ல அங்குபோய் அங்கிருந்த துருப்பிடித்த வாங்கில் உட்கார்ந்து பின்னர் அதன் கைபிடியில் தலையைச் சாய்த்தபடி கிடந்தாள். களைத்திருந்தபடியால் நித்திரை அவளைக் கவ்விக்கொண்டது.  எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியாது, தொடரூந்து வந்து கீறீச்சென்ற சத்தத்துடன் நிலைகொண்டதும் விழித்து விட்டாள்.  தொடரூந்துகள்தான் வருமே, போகுமே! - அதனால் அவளுக்கு என்ன?!

     சரிந்து படுத்தபடியே கண்களைத் தொடரூந்துப் பக்கம் திருப்பி அதன் யன்னல்களைப் பார்வையிட்டாள்.  எல்லா யன்னல்களிலும் தலைகள் தென்பட்டன.  யன்னலோரம் இருந்த தலைகள் வெளியே நிலையத்தை நோக்கி புதினம் பார்த்துக் கொண்டிருந்தன.  பலபேர் இறங்கினார்கள். சிலபேர் ஏறிக்கொண்டார்கள்.  நந்தினியோ
சலனமற்று, சோர்ந்த கண்களைப் பரவவிட்டு, யன்னல்களை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டே வந்தாள்.  ஒரு யன்னலில் பார்வை விழுந்ததும் கண்கள் அதைத்தாண்டிப் போக மறுத்தன.  அதிலேயே நின்றுவிட்டன. உற்றுப் பார்த்தாள்.  அந்த யன்னலில் தோற்றிய முகம் எப்பவோ கனவில் கண்ட முகம்போல அவளுக்குத் தோற்றியது.  எழுந்தாள். இயல்பாகவே கால்கள் அந்த யன்னலைநோக்கி நடந்தன. தொடரூந்து கதவுகளை மூடுவதற்குமுன்னர் இவள்  வேகமாக ஓடி கதவின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஏறி தொடரூந்தினுள் நுழைந்துவிட்டாள். தொடரூந்து ஊரத்தொடங்கியது. உள்ளுக்குப் போய், தான் பார்த்த அந்த யன்னலுக்கு நேரே வந்து அந்தப் பெட்டியின் வாசலில் சிலைபோல நின்றுகொண்டு தான் கண்ட தலையையும் அதற்கு உரிய ஆடவனையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே நின்றாள். ஒருவித நம்பிக்கை உத்வேகம் அவளுடம்பில் பரவியது.
    
     அவனும் தலையைத் திருப்பி இவளைக் கண்கொட்டாமல் ஆச்சரியத்துடனும் திகைப்புடனும் நோக்கினான்.  நேரே ஆளையாள் அடையாளம் கண்டுகொண்டனர்.  நந்தினி தன்னை மறந்தாள்.  மனதில் ஒரு கிளர்ச்சி,.  சொர்க்கத்தையே கண்டதுபோல ஒரு உணர்ச்சி.  கடவுளுக்கு ஒரு நன்றியுணர்வு. முகத்தில் ஒரு மலர்ச்சி.  ஆனால் அது அதிகநேரம் நீடிக்கவில்லை.  இதுவரை இவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் இவளை அடையாளம் கண்டதும் மெல்ல தலையைத்  திருப்பி யன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தான்.. அவனின் செயல் அவளை அதிரவைத்தது. அவள் இடியேறுண்ட நாகம்போல் திகைத்துப் போனாள். தன்னைத் தெரியாதவன்போல் அவன் இப்படி அசட்டைபண்ணுவான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.  எழும்பிவந்து தன்னைக் கட்டியணைப்பான் என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்திருந்தவள் அவனது முகம் திரும்பியதைக்; கண்டதும் ஏமாற்றம் அவளை உச்சியில் அடித்தது.  என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள். ஒரு கணம் யோசித்துவிட்டு விறுக்கென்று நேரேபோய் அவனுக்கு முன்னால் மண்டியிட்டபடி அவனது முழங்கால்களில் தனது தலையைப் பதித்துக் கொண்டு விம்மிவிம்மி அழுதாள்.  வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளிவரவில்லை.  கண்ணீர் ஆறாக ஒடி அவனது உடையை நினைத்தது.  சில நிமிடங்கள் அப்படியே கழிந்தன. அவனுக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை.  அவளின் தலையில் கையை வைத்தபடி மௌனியாக இருந்தான்.

     அடுத்த பெட்டியில் டிக்கெற் பரிசோதகர் கதவில் தட்டித்தட்டி வுiஉமநவ pடநயளந என்று பிரயாணிகளிடம் டிக்கெற்றுகளைக் காட்டும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.  அந்தச் சத்தத்தில் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்த அவளும் அவனும் தங்களைச் சுதாகரித்துக்கொண்டு இருவரும் பேச முயற்சித்தார்கள். முடியவில்லை. முகத்தை முகம் பார்த்தாலும், பேச நா எழவில்லை.  அவ்வாறு சில விநாடிகள் கழிந்தன.  அவன் அவளை முதுகில் தட்டிக்கொடுத்து அவளின் இரு தோள்களையும் பிடித்துத் தூக்கி தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டான்.  இது இயல்பாகச் செய்யும் மனிதாபிமானச் செயலா, அல்லது தங்கள் நிலைiமையை உணர்ந்துதான் அவன் இப்படிச்செய்தானா?  அது அவனுக்குத்தான் தெரியும். 
அவள் தனது சேலைத்தலைப்பால் கண்களை ஒற்றிக்கொண்டாள்.

     இதெல்லாவற்றையும் அந்த அறையிலுள்ள சகபிரயாணிகள் கவனித்துக் கொண்டேயிருந்தார்கள். டிக்கெற் பரிசோதகர் உள்ளுக்கு வந்ததும் எல்லோரும் தங்கள் தங்கள் டிக்கெற்றுகளைக் காட்டினார்கள்.  அவனும் காட்டினான்.  ஆனால் நந்தினியிடம்தான் டிக்கெற் இல்லையே!  யன்னலில் தெரிந்த முகத்தைக் கண்டதும் கால்கள் தன்னார்வமாக நடந்துவந்து தொடரூந்தின் வாசலால் உட்புகுந்தனவேதவிர இவள் பிரயாணஞ்செய்ய உத்தேசித்திருக்கவில்லையே!  பரிசோதகர் கேட்டதும் அவள் திருதிருவென்று விழித்தாள்.  கையில் பணமுமில்லை.  கண்ணீர்மட்டும் தாராளமாக ஓடியது.  என்ன நடக்குமோ என்று ஏங்கிக்கொண்டிருந்தாள்.  முன்பு அவளுக்கு அன்பைக்கொடுத்து அவளை ஆட்கொண்டவன் இப்போது அவளுக்குக் கைகொடுக்க முன்வந்தான்.  அவள் தனது சொந்தக்காரி என்றும், எதிர்பாராதவிதமாக தன்னைக்காண்பதற்கு தொடரூந்தில் ஏறிக்கொண்டாள் என்றும் காரணம் சொன்னான்.  அவளின் டிக்கெற் தொகையையும் தெண்டத்தையும் தானே காட்டுவதாகச் சொல்லி பரிசோதகரிடம் பணத்தைக் கொடுத்து ரசீற்றையும் தானே வாங்கிக்கொண்டான்.

----------------------------------------------------------------------------

     நந்தினி சிறுபெண்ணாக இருக்கையிலேயே தாயை இழந்துவிட்டாள்.  பெற்றோருக்கு இவளும் அண்ணன்மார் இருவரும்தான் பிள்ளைகள்.  தகப்பன் ஒரு வியாபாரி. அவரது இடைவயதுப் பருவம் அவரை வேறொரு பெண்ணை சமையலுக்கென்று அழைத்து வீட்டில் வைத்திருக்க வைத்துவிட்டது. சமையலுக்கென வந்தவள் படுக்கையிலும் இடம்பிடித்துவிட்டாள்.  தாயின் மறைவுக்குப்பின்னர் அண்ணன்மாரில் மூத்தவன் வர்த்தகத் துறையில் பட்டம்பெற்று தகப்பனின் வியாபார நிறுவனத்தைப் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்தான். இளையவன் படிப்பை முடித்துக்கொண்டு ஏதோ வேலைகிடைத்து வேரொரு மாவட்டத்துக்குப் போய்விட்டான். நந்தினிக்கு தாயன்பு இல்லாத கவலை அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவளிடம் அன்பு காட்ட வீட்டில்  யாருமில்லை. ஆயினும் அவள் படிப்பில் ஊக்கமுள்ளவள்.  வீட்டு வேலைகளப் பொறுப்புடன் செய்வதுடன்  படிப்பிலும் நல்ல தரத்தை எட்டியிருந்தாள்.  பல்கலைகழகப் புகுமுகப் பரீட்சையில் அவள் விரும்பிய துறையைத் தொடருவதற்குப் போதிய புள்ளிகள் கிடைக்கவில்லை. அதனால் உத்தியோகம் தேடி ஒரு சிறு வேலையில் அமர்ந்துகொண்டாள்.  தானுண்டு, தன் வேலையுண்டு, வீடுண்டு என்று தனது காலத்தைக் கழித்துவந்தாள்.  அவர்களின் குடும்பம் பந்தபாசமின்றி தனித்தனி ஆட்களாகச் சிதறியிருந்தது.  நந்தினிக்குத் தாய்ப்பாசம் கிடைக்காத குறை அவளது மனதை சதா அழுத்திக்கொண்டே இருந்தது. அவள் சுமாரான அழகி.  மூக்கும்முழியுமாக, பார்ப்பவரை மீண்டும் ஒருதரம் பார்க்கவைக்கக் கூடிய ஒரு பருவமங்கை.   எனினும், கூத்தும் குதூகலமுமில்லாத ஒரு அடக்கமான பெண்ணாக வாழ்ந்துவந்தாள்.

     நந்தினி நகர எல்லையிலுள்ள ஒரு இறக்குமதிக் கொம்பனியில் உள்ளகக் கணக்குப் பரிசோதகராகப் பணிபுரிந்தாள்.  நிம்மதியான வேலை.  தன் கடமையைச் செவ்வனே செய்துவந்தாள். வீடு அண்மையிலிருந்தபடியால் தினமும் அலுவலகத்துக்கு நடந்தே போய்வருவாள்.  மதியபோசனம் வீட்டிலிருந்து கொண்டுபோகாத நாட்களில் அலுவலகத்துக் கன்டீனில்; (ஊயவெநநn)  ஏதாவது சாப்பிடுவாள்.
    
அன்றொரு நாள்.  நந்தினியின் அலுவலகத்தில் அவளுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அவளுக்கு சம்பள உயர்வு கிடைத்திருப்பதாக அறிவிக்கும்  பத்திரத்தை அலுவக முதல்வரே அவளைக் கூப்பிட்டு நேரில் அவளிடம் கையளித்தார்.  அன்று பின்னேரம் வீடு திரும்பும்பொழுது மனம் குதூகலித்துக்கொண்டிருந்தது.

அப்போது மாரிகாலமாயினும், அன்று காலை வானம் ஓரளவு வெளிப்பாகவும் காற்று வெப்பமாகவும் இருந்த காரணத்தினால் அவள் மெல்லிய பருத்தி உடைகள் அணிந்துகொண்டே அலுவலகத்திற்குப் போயிருந்தாள்.  ஆனால் மாலையில் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும் வானத்தைப் பார்த்தாள். கருமுகில்கள்கூடி எங்கும் இருண்டுபோயிருந்தது. மழை வருமுன்னர் வீடுபோய்ச் சேர்ந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு தனது சின்னக்குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு விரைவாக நடந்தாள். சிறிது தூரம் போனதும் மழை தூற்றலாகத் தொடங்கி, பின்னர் இடிமின்னலுடன் சோனாவாரியாகப் பெய்யத் தொடங்கிவிட்டது.  அத்துடன் கடும் காற்றும் பக்கவாட்டாக அடித்தது. காற்று வேகத்திற்கு குடை மறுவளம் புரண்டு முறிந்தேவிட்டது. அதை வீசிவிட்டாள். அணிந்திருந்த உடுப்பும் நன்றாக நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டது.  இனியென்ன செய்வது? வீடுவரையும் இப்படியே போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டு நடந்தாள்.  பெருமழை மின்னலுடன்கூடிய காற்றின் கடுமைக்கு பெரிய மரக்கிளைகள் முறிந்து பாதையில் விழுந்திருந்தன. 

அவளால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை.  ஒதுக்கிடம் இருக்குமோ என்று அங்குமிங்கும் பார்த்தபடியே, ஈரச்சேலையையும் கையில் சேர்த்துப் பிடித்தபடி, வேகமாக நடந்தாள்.  அக்கம்பக்கத்தில் வீடுகளும் வசதியாக இல்லை.  சற்று தூரத்தில், தெருவோரத்தில், பாவனையற்ற இடிந்த ஒரு வீட்டின் பக்கச் சுவரும் அதை மூடி பாதிக்கூரையும் தென்பட்டது.  அங்குபோய் நின்று, உடுப்பைச் சரிபண்ணி விட்டு, மழை ஓய்ந்தபின்னர் நடையைத் தொடரலாம் என்ற எண்ணத்துடன் அந்த உடைந்த வீட்டை அணுகினாள்.  வழியில் தெருவோரமாக ஒரு ஈருருளி (டீiஉலஉடந) பாட்டில் விழுந்து கிடந்ததையும் அவதானித்துக்கொண்டு, சுவரிலிருந்து தொங்கும்  பாதிக்கூரையின் கீழ் மழைவிழாத இடமாகப்பார்த்து ஒதுங்கினாள்.  குளிர் ஒருபக்கம், உடம்பை நடுங்கவைத்தது. தனிய நிற்பதில் பயம் ஒருபக்கம், அத்துடன் பின்னேர மழை இருட்டு வேறு.  குளிர் நடுக்கத்துடன் மழை எப்போது விடுமென்று ஏங்கிக்கொண்டு நின்றாள்.

 “நன்றாக நனைந்து விட்டீர்களோ?” என்று ஒரு ஆண்குரல் உள்ளிருந்து கேட்டதும் ஏங்கித் துடித்துப்போனாள். வாய்விட்டு குழறியேவிட்டாள். ஓடிவிடலாமோ என்று ஒரு கணம் யோசித்தாள். “ஏன் பயப்படுகிறீர்கள்?  நானும் மழைக்காகத்தான் ஒதுங்கி நிற்கிறேன்.  நல்ல மழையில் அகப்பட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது.  நல்ல குளிர். இப்படியே இன்னும் கொஞ்சநேரம் நின்றால் தடுமல் காய்ச்சல் வந்துவிடும்” என்று சொன்ன அந்தக் குரல் வந்த திசையில் திரும்பி சுற்றுமுற்றும் பார்த்தாள். பாதி இருட்டில் ஒரு இளைஞனின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. அப்போது ஏற்பட்ட மின்னல் கீற்று வெளிச்சத்தில் அவனுடைய முகத்தையும் காணக்கூடியதாக இருந்தது. அவனுக்கும் இவளின் முகத்தையும் கோலத்தையும் பார்க்கமுடிந்தது. “இந்தாருங்கள் இந்தக் கோட்டைப் போர்த்திக்கொள்ளுங்கள்”; என்று தனது கோட்டைக் கழற்றி அவளிடம் நீட்டினான் அந்த ஆண்மகன்.  அவளுக்கு வெட்கம், கூச்சம், பயம் எல்லாம் ஒருங்கே சேர்ந்து அவளைப் வாய்பேசவிடாது அடைத்துவிட்டன.  ஒரு ஆணுடன் தனித்து, அந்த நேரத்தில், ஆளரவம் இல்லாத இடத்தில் நிற்கிறேனே என்று மனத்தில் ஒரு கிலி பிடித்ததுபோலிருந்தது.  என்றாலும், அந்தக் கடுங்குளிர் தாங்கமுடியாமல் இருந்ததனால் அவன் அன்புடன் நீட்டிய கோட்டை கைநீட்டி வாங்க அவளுக்கு மறுக்கமுடியவில்லை. ஆனால் பயமும் வெட்கமும் அவளைத் தடுத்தன. ஓடிவிடலாமா என்று ஒருகணம் தெருவை எட்டிப்பார்த்தாள். மழையும் குளிர்காற்றும் அவளின் மூஞ்சையில் அடித்தன. மறு யோசனையில்லாமல் உடனே கையைநீட்டி அதை வாங்கி தன்னைமூடிப் போர்த்துக் கொண்டாள்.  ஆனால் அவள் போர்த்துக்கொண்ட விதம் கோணலாக இருந்தது. உடனே அவன் கிட்டவந்து கோட்டைக் கழற்றி, முதலில் ஒரு கையையும் பின்னர் மறு கையையும் போடப்பண்ணி, பின்னர் தோள்ப்பக்கத்தை இழுத்து மூடி, கழுத்துப்பக்கத்தைச் சரிபண்ணிவிட்டான். நன்றி சொல்ல முயன்றாள், முடியவில்லை. பயமும் வெட்கமும் அவளைப் பேசவிடவில்லை. கண்கள் குளமாகி கன்னத்தால் வழிந்தது.  குளிர் நடுக்கம் வேறு.  வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது.

அருகில் வந்து கோட்டை அவன் சரிசெய்யும்பொழுது அவனுடனிருந்த நெருக்கம் அவளுக்குப் புதிய அனுபவம்.  ஏதோ ஒரு உணர்ச்சி உடம்பில் ஓடுவதாக உணர்ந்தாள். அவளின் வாழ்க்கையில் இதுவரை ஆண்ஸ்பரிசத்தை அறியாதவள். இந்தப் புதிய அனுபவத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே கோட்டைக் கழற்றி அவனிடம் கொடுத்துவிட்டு வெளியே ஓட நாலடி எடுத்துவைத்தாள். குளில்காற்றின் வேகம் அவளைத் தடுத்தது.  திரும்பிவந்து அதே இடத்தில் நின்றுகொண்டு அழுதாள்.  ஆயினும் உடம்பிலிருந்த குளிர் இன்னும் குறையவில்லை. மழையும் ஓய்ந்தபாடில்லை. நன்றாக மழையில் நினைந்துவிட்டபடியால் உடை முழுவதும் நீர் வடியுமளவிற்கு ஊறிவிட்டது.  அவனும் அதைக் கவனித்தான்.  உடனே தான் வைத்திருந்த பையைத் திறந்து அதிலிருந்து ஒரு துவாயையும் சாரத்தையும்  எடுத்து அவளிடம் நீட்டி, அங்கு இருட்டாக இருந்த ஒரு மூலையைக் காட்டி, அங்கு போய் உடம்பையும் துவட்டி, சேலையைக் களைந்துவிட்டு சாரத்தைக் கட்டிக்கொள்ளச் சொன்னான்.  அவளின் பயத்தைக் குளிர் கலைத்துவிட்டது. வேறு வழியில்லை.  இருட்டு அவளுக்கு உதவியது. அவன் சொன்னபிரகாரம் ஒதுக்கத்தில் போய் தன் உடுப்பை களைந்து விட்டு சாரத்தை அக்குளிலிருந்து முழங்கால்வரை உடுத்தி, கோட்டையும் அணிந்துகொண்டு இருட்டிலேயே நின்றுகொண்டாள்.  வெட்கமும் பயமும் அவள் மனதை உறுத்திக்கொண்டிருந்தன. அவள் நின்ற இடம் ஒதுக்கிடமாக இருந்தாலும், மின்னல்கீற்றின் ஒளி அவளை அவளை வெளிச்சம்போட்டுக் காட்டியது..  அந்த இடத்தில் குளிர் என்றும் அங்கு நிற்கவேண்டாம் என்றும் அவன் கூப்பிட்டான். அவள் பதில் சொல்லவில்லை. உடல் நடுங்கிற்று. வெட்கம் அவளை அங்கிருந்து அசையவிடவில்லை.  கூப்பிட்ட குரலுக்கு வராதவளை என்ன செய்வது என்று அவன் சற்றுநேரம் யோசித்தான்.

 வெளியிலிருந்து அவள் மழையில் நனைந்து நடுங்கிக்கொண்டு வந்தபொழுது அவள்மேல் அவனுக்குப் பச்சாதாபமாக இருந்ததுதான். ஆனால்,  மங்கிய இருளிலும் மின்னலின் உதவியுடன் அவளது மேனியைச் சாடையாகக்  கண்டபின்னர் அந்தப் பச்சாதாபம் இப்போது இல்லை. அது மறைந்து  இயற்கை உணர்ச்சி மேலோங்கியது. பகுத்தறிவை மிருக உணர்ச்சி ஆட்கொண்டுவிட்டது. அவன் தன் கட்டுப்பாட்டை இழந்தான்.  சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவனுக்குச் சாதகமாக வாய்த்தன.  காய்ந்த இடத்திற்குக் கூப்பிட்டாலும் வராமல் தொடர்ந்தும் குளிரில் நிற்கிறாளே என்ற இரக்கமேலீட்டினால் அவளுக்கு அருகேபோய் கையை மெல்லப் பிடித்து காய்ந்த இடத்துக்கு வருமாறு இழுத்தான்.  அவள் கையைக் கொடுத்தாள், ஆனால் தான் போகவில்லை. தயங்கினாள்.  மேலும் அவன் பரிதாபப்பட்டு பக்கத்தில் சென்று அவளை இடையோடு அணைத்து குளிர் குறைந்த இடத்திற்குக் கூட்டிவந்தான்.  இல்லை! ஆசையால் உந்தித்தான் அவளை இடுப்போடு அணைத்து இழுத்துவந்தான்.  அதை யாரும் மறுக்கமுடியாது.  ஆனாலும் குளிரின் கோரப்பிடியிலிருந்து விடுபடுவதற்காக அவள் அந்தக் காய்ந்த இடத்திற்கு மெதுவாக வந்துவிட்டாள். அவளது வாழ்க்கையில் ஒரு ஆண்மகன் தன்னைத் தொட்டதும் அது மின்சாரம் பாய்ந்ததுபோல இருந்தது. தன்னை மறந்தாள். இயற்கையின் சீற்றம் அவளை ஏய்த்துவிட்டது. அவன் அணைத்தபோது அருகே நின்ற அவனுடைய தோளின்மேல் தலையைவைத்து சாய்ந்துவிட்டாள். பின்னர் இருவரும் தங்களை மறந்தார்கள்.  சொர்க்கத்தில் மிதந்தார்கள். குளிரைத் தேகச்சூடு வென்றுவிட்டது. 

சிறிது நேரம் கழிந்ததும் மீண்டும் பூமிக்குத் திரும்பினார்கள். மழையும் ஓய்ந்து தூறிக்கொண்டிருந்தது. இனியும் தாமதிக்காமல் அவள் வீடு போய்ச்சேரவேணும்.  அவதியவதியாக அவனது கோட்டைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். களைந்து விட்டிருந்த ஈரச்சேலையை நன்றாகப் பிழிந்து உதறிவிட்டு அதை ஒருவாறு உடுத்திக்கொண்டாள். அவனது சாரத்தையும் துவாயையும் நன்றி சொல்லித் திருப்பிக்கொடுத்தாள். பார்வையால் நன்றியறிவித்துவிட்டு, திரும்பிவிட்டாள். பிரிவது க~;டமாகத்தானிருந்தது. பாரமான மனத்துடனும், குற்ற உணர்வுடனும், பிரிய மனமில்லாமல், பின்நோக்கி நடந்துகொண்டே கையை அசைத்து பிரியாவிடை பெற்றாள். பின்னர் தெருவை அடைந்து, வீடு நோக்கி நடந்தாள். கால்கள் வேகமாக நடந்தன, ஆனால் மூளை மந்தமாகவே வேலைசெய்தது.  குற்றமுள்ள மனம் குறுகுறுத்தபடியே நடந்தாள்.  எப்படித் தன்னைப் பறிகொடுத்தாள் என்று அவளால் நம்பவே முடியவில்லை.  வீடு சேர்ந்ததும்;  நேரே படுக்கையறைக்குப் போய் கட்டிலில் தொப்பென்று விழுந்தாள். தூக்கம் வரவில்லை.  துக்கம்தான் மேலிட்டது.  நடந்தவற்றை மனம் அசைபோட்டது. களையினால் சற்றுநேரத்தில் தன்னைமறந்து உறங்கிவிட்டாள்.  எவ்வளவு நேரம் கிடந்தாளோ தெரியாது.

அவன் அவளையடைய உதவிய கோட்டையும், சாரம், துவாயையும் ஒன்றுதிரட்டி அந்தப் பொதியை கைபிடியில் வைத்துப் பிடித்தபடி ஈருருளியிலேறி மிதித்தான்.  அவனின் மனம் அவனிடமில்லை.  என்ன நடந்தது, எப்படி நடந்தது என்ற கேள்விகள் மனதில் எழுந்தவண்ணமே, ஒரு சிறு வெற்றிக் களிப்புடன் வீடுபோய்ச் சேர்ந்தான்.   

இரண்டு கனத்த உள்ளங்கள் தங்கள் செயலை மனத்தில் மீளாய்வுசெய்து கொண்டிருந்தன. பிழை யார் பக்கம்? யாரைக் குறைசொல்வது? அவன்மேல் குற்றம் சுமத்தலாமா? மழையைக் குற்றம் கூறலாமா? இதில் தாக்கம் அடைந்தது யார்? அவள்தானே! தனது ஆசையைக் கட்டுப்படுத்தியிருக்கலாமே!  ஆமாம்!   இனி மழையையோ அவனையோ குறைசொல்லிப் பிரயோசனமில்லை. இப்படியாக அவளது மனம் அவளைப் பிடுங்கிக்கொண்டே இருந்தது.

அவனைப் பொறுத்தமட்டில், முதலில் அவளின் நிலைகண்டு அவள்மேல் இரக்கப்பட்டது உண்மைதான். அது மனிதாபிமானச்செயல். யாருமே அதைத்தான் செய்வார்கள், செய்யவேண்டியதும்கூட. சரி! இரங்கிய மனம் இரக்கத்துடனேயே நின்றிருக்கலாமே! உணர்ச்சிக்கு இடங்கொடுத்து அவளை அணைத்தது குற்றமா?  அவளைக் கூப்பிட்டபொழுது அவள் திமிறிக் கொண்டு, மழையையும் பாராமல் விலகி வீட்டுக்குப் போயிருக்கலாமே! அவளும் ஏதோ ஒரு உணர்ச்சியால் ஈர்க்கப்பட்டுத்தானே அவனின் தோளில் தலையைச் சாய்த்தாள். அதற்குமேலும் ஒரு ஆணுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமா?  என்றாலும் அவள் பாவம். அவளின் வாழ்க்கை இனி என்னவாய் ஆகுமோ! அந்தச் சிறு பிழையின் பலாபலனை அவளல்லவா அனுபவிக்கப்போகிறாள்!  அவளின் மனம் என்ன பாடுபடும்? இப்படிப் பலவாறாக யோசித்தபடியே அவன் ஈருருளியில் வீடுபோய்ச் சேர்ந்தான்.  இதற்குமுன்னர் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்ததில்லை.  அந்த இன்ப அனுபவத்தின்போதோ, அல்லது அதன்பின்னராவதோ, ஒருவரையொருவர் யாரென்று அறிந்துகொள்ள நினைக்கவில்லை. ஊரும் விலாசமும்கூடத் தெரியாது.   விதி அதற்கு இடந்தரவில்லைப் போலும்! 

  தகப்பன் கூப்பிட்ட குரலுக்கு படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தாள்.  ஒன்றும் நடக்காததுபோல, வழமைபோல, முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொள்ள முயற்சிபண்ணினாள். நல்ல மழையில் நனைந்துவிட்டதாக மட்டும் சொன்னாள்.  “நல்லாய் மழையிலை நனைந்திருக்கிறாய், பிள்ளை! போய் தலையிலை முழுகிப் போட்டுவந்து சாப்பிட்டுப்போட்டுப் படு.  நன்றாகப் போர்த்திக்கொண்டு படு, இல்லாட்டில் குளிர்பிடித்து காய்ச்சலாக்கிப்போடும்” என்று அன்பாக உத்தரவிட்டார். அவள் போய் குளித்துவிட்டு வந்து, அப்பாவுடன் மேசையிலிருந்து இராப்போசனம் அவசரமாக அருந்திவிட்டு தனதறைக்குப் போய்விட்டாள்.  அவளின் முகமாற்றத்தைக் கவனிக்க அவர் தவறிவிட்டார்.  
---------------------------------------------------------------------------------------

     தொடரூந்தில் நடந்தது என்ன? இருவருமே பேசவில்லை.  ஆனால் கண்களும் கைகளும் பேசிக்கொண்டன.  வருடுதல், தலைதடவுதல், தோளிற் தலைசாய்தல், கண்ணீரைத் துடைத்துவிடுதல், எல்லாம் ஒழுங்காக நடைபெற்றன.  சகபிரயாணிகள் தங்களுக்குள் ஏதேதோ குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தார்கள்.  அதை அவனும் அவளும் சட்டைபண்ணவில்லை. அது ஏன்?  தங்களுக்குள் கிளம்பியிருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழி தேடுகிறார்களா?  ஒருவேளை அவள் மறுபடியும் ஏமாந்துபோவாளோ?

     தொடரூந்து ஓடிக்கொண்டேயிருந்தது.  இடையில் இரண்டு தரிப்பு நிலையங் களில்மட்டும் நின்றது.  பிரயாணிகள் ஏறினார்கள், இறங்கினார்கள், பயணம் தொடர்ந்தது.  ஒவ்வொரு தரிப்பும் நெருங்கியபோதும் நந்தினிக்கு இனம்தெரியாத ஒரு மனக்குழப்பம் ஏற்பட்டது. அடுத்தது என்னவாயிருக்கும் என்பதை யூகித்துப்பார்க்கவே அவளது மனம் மறுத்தது.  மறுபடியும் பிரிவு ஏற்படுமோ?  அப்படி நேர்ந்தால் தனது நிலை என்ன?  உள்ளத்தில் கலவரம்.

     வீட்டைப்பற்றிய எண்ணம், அப்பா தேடுவாரே என்ற கவலை கிஞ்சித்தும் அவளுக்கு இருக்கவில்;லை.  யோசிப்பதும், அவனது முகத்தைப் பார்ப்பதுமாக நேரம் போய்க்கொண்டிருந்தது.  அவர்கள் இருவரும் பேசத்தொடங்கியிருந்தால் ஒருவேளை ஒருவரையொருவர் குற்றம் சாட்டியிருப்பார்களோ தெரியாது.  குற்றஞ்சாட்டவும் முடியாதுதானே!  நடந்த நிகழ்வு இயற்கை உந்துதலின் விளைவல்லவா! பின்விளைவு களை அந்த நேரம் யோசிப்பார்களா?  அவன்தான் போகட்டும்;, அவளல்லவா முன் விழிப்பாக இருந்திருக்கவேண்டும்!   இப்போது அதன் பலன் எப்படியாகுமோ!  
      
     இந்த நேரத்தில் அவளின் மனது பலதையும் அசைபோட்டது.  தான் என்ன காரணத்திற்காக தொடரூந்துப் பாதையைஃநிலையத்தை நோக்கி எதேச்சையாக நடந்துவந்தாள் என்பதைப் பின்நோக்கி நினைத்துப்பார்க்கிறாள். ஏன் வந்தாள் என்பது அவளுக்கே ஒரு புதிராக இருந்தது. இலக்கு ஏதுமில்லாமல் நடந்தாளா?  அல்லது தொடரூந்துப்பாதையில் தற்கொலை செய்துகொள்வதற்காக நடந்தாளா? அவளுக்கே புரியவில்லை. பின்னர், எதிர்பாராதவண்ணம் அவனைச் சந்தித்தது இறைவனுடைய கருணையல்லவா என்பதை நன்றியுணர்வுடன் நினைக்கிறாள். அடுத்தது என்ன? அதுதான் அவளுடைய உடனடிப் பிரச்சினை.

     முதற் சந்திப்பில் தன் பெயர் சேகர் என்று சொல்லியிருந்தான்.  ஆனால் உண்மையில் அவனுடைய பெயர் சேகரல்ல. பாதுகாப்பு நிமித்தம் தனது உண்மைப் பெயரை அவன் சொல்லவில்லை.  இன்றுகூட இதுவரைக்கும் அவளுக்கு அவன் சேகர் என்றுதான் தெரியுமேதவிர அவனைப்பற்றி வேறு ஒரு தகவலும் தெரியாது.

     அவர்கள் இருவரும் இன்னும் உரையாடலில் ஈடுபடவில்லை.  முகத்தை முகம் பார்ப்பதும் வெட்கப்படுவதும் புன்னகைப்பதுமாக பேசாமடந்தைகளாக உட்கார்ந்தபடி இருந்தனர்.  சிறிது நேரம் கழிந்ததும் தொடரூந்தின் வேகம் குறைந்து அடுத்த தரிப்பு வருகின்றது என்பதை அவர்களுக்கு உணர்த்தியது. அவன் எழும்பி மேல் றாக்கையிலிருந்த பிரயாணப்பையை இறக்கினான்.  “அடுத்த தரிப்பில் இறங்கவேணும், நீரும் தயார்பண்ணும்” என்று சொன்னான்.  அவளுக்கு அந்த வசனம் தேனாகக் காதில் விழுந்தது. கடைசியாக இனி நல்லதை எதிர்பார்க்கலாம் என்று அவள் மனம் சொல்லிற்று.  தானும் அவனுடன் இறங்கத் தயாரானாள்.  இருவரும் இறங்கி கடவையால் வெளியே வந்ததும் வாசலில் வாடகைக்கார்கள் பல காத்திருந்தன.  அவற்றுள் ஒன்றை அவன் அழைக்க அதனுள் இருவரும் ஏறிக்கொண்டனர்.
     காருக்குள் இருக்கும்பொழுதுதான் அவன் தனது உண்மையான பெயர் சேகரல்ல, வரதன் என்று உள்ளதைச் சொன்னான். அதுமட்டுமல்ல தன் பூர்வீகத்தையும் விபரமாகச் சொன்னான்.   “எனக்கு அப்பா, அம்மா இருக்கிறார்கள். அவர்களுக்கு நானும் எனது அண்ணனும்தான் பிள்ளைகள்.  பெண்பிள்ளைகள் இல்லை.  அண்ணன் திருமணமாகி வேறொரு கிராமத்தில் இருக்கிறார். அவர் பரந்த நோக்குடையவர்.  தம்பி விடயத்தில் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை படைத்தவர். நாங்கள் இப்போ எங்கள் வீட்டுக்குத்தான் போகிறோம்.  எனது பெற்றோர் பழைய சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள். புதுமுறைகளையும் நவீன முன்னேற்றங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு வளர்ச்சி அடையாதவர்கள்.  நீர் எதுக்கும் யோசிக்கவேண்டாம். எல்லாம் வெற்றியாக முடியும்” என்று தெம்பு சொல்லிக் கூட்டிப்போனான்.

வீட்டை அடைந்ததும் இருவரும் இறங்கினார்கள். கார் வாடகையைக் கொடுத்துவிட்டு வாசற்படியில் ஏறிப்போய் மணியை அமுக்கினான். அவனது அப்பா வந்து கதவைத் திறந்தார்.  “என்ன இன்றைக்கு தொடரூந்து நேரத்துக்கு வந்துவிட்டுது.  நல்லது, உள்ளே வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டு மகனைக் கட்டியணைத்தார். நந்தினியைப் பார்த்து கும்பிட்டு வரவேற்றார். வரதனின் தாயாரும் வந்து அவர்களை வரவேற்றார். ஆசனங்களில் உட்கார்ந்ததும், அப்பா அம்மாவின் முகங்களிலுள்ள கேள்விக்குறிகளை அறிந்துகொண்ட வரதன் நந்தினியை அறிமுகம் செய்துவைத்தான். “இவள் எனக்கு அறிமுகமானவள்.  நான்தான் இவளை இங்கு கூட்டிவந்தேன். பெயர் நந்தினி.  மற்ற விபரங்களை நான் பின்னர் கூறுகிறேன்” என்றான். திரும்பி நந்தினியைப் பார்த்து “இது என்னுடைய அம்மா, அப்பா.  இவர்களுக்கு நமஸ்காரம் செய்யும்” என்று மொட்டையாகச் சொல்லிவிட்டு அறைக்குப் போய் பயணப்பொதிகளை வைத்துவிட்டு வந்து, நந்தினியைக் கூட்டிப்போய் குளியலறை, கழிவறை, சமையலறை, படுக்கையறை முதலியவற்றைக் காட்டினான்.

பெற்றோர் அவர்களின் அறைக்குள்ளே போன தருணம்பார்த்து வரதன் தனிய அவர்களைத் தொடர்ந்து உள்ளே போய் அவர்களிடம் உள்ளதைச் சொன்னான். “நந்தினி நல்ல இடத்தைச் சேர்ந்தவள்.  நல்ல பண்பான பெண். உத்தியோகம் பார்க்கிறாள். எனக்கு மிகவும் பிடித்த பெண். அவளை நான் திருமணம் செய்ய உத்தேசித்திருக்கிறேன். உங்களுக்கு அறிமுகம் செய்துவைத்து உங்கள் ஆசியையும் பெறுவதற்காகத்தான் இங்கு கூட்டிவந்தேன்.  நீங்களே அவளுடன் சம்பா~pத்துப் பாருங்கள்.  தங்கமான குணம் படைத்தவள்” என்று முடித்தவன்,  நந்தினியைக் கூப்பிட்டு  “முகத்தைக் கழுவிவிட்டு வந்து இவர்களுடன் பேசிக்கொண்டிரும். எனக்குக் கொஞ்சம் அலுவலிருக்கிறது” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குப் போய்விட்டான். தாயார் அவர்களுக்கு தேநீர் கொண்டுவந்து தந்தாள். தேநீர் பருகிவிட்டு மூவரும் கதிரைகளில் ஆறியமர்ந்தார்கள்.

வரதன் சொன்னவற்றையெல்லாம் அப்பா தன்மனதில் ஆராய்ந்தபடி, தனது கோபத்தை வெளிக்காட்டாமல் வரதனைப் பின்தொடர்ந்து அவனது அறைக்குப் போனார். தாயாரும் பின்தொடர்ந்தாள்.  “உனக்குப் பெண்பேசி ஒழுங்குபண்ணி, மணப்பெண்ணை பார்ப்பதற்காகத்தானே உன்னை இன்றைக்கு வரச்சொன்னோம்.  நீ வந்தாய், ஆனால் கையோடு ஒரு இனம்தெரியாத பெண்ணையும் அழைத்துக்கொண்டு வந்து நிற்கிறாய். அவளைத்தான் மனைவியாக்குவேன் என்கிறாய். இது எந்த விதிக்குள்ளே அடங்கும் செயலென்று நீ நினைக்கிறாய்? இது என்ன ஒரு புரட்சிகரமான மனைவித் தேர்வு?  இதை ஒப்புக்கொள்ளச் சங்கடமாயிருக்கிறதே.  இவள் யாரோ, எந்தக் குலமோ, என்ன சாதியோ, அவளின் பெற்றோர் இதற்கு உடன்பட்டார்களா? - ஹ_ம்! ஏன் உடன்படமாட்டார்கள் - இப்படி ஒரு வரன் அவர்களுக்குத் தவம்செய்தாலும் கிடைக்குமா?” என்று தாறுமாறாகக் கேள்விகளைக் கேட்டு வரதனைச் சிப்பிலி ஆட்டிவிட்டார்.  தாயாரும் தனது ஒப்பாமையை இடைக்கிடை தெரிவித்தார். முன்பின் தெரியாத பெண்ணை மகன் விரும்புகிறானே என்ற ஏமாற்றத்தை அவளால் சீரணிக்க முடியவில்லை.

வரதன் உட்கார்ந்துகொண்டு எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான். பொறுமையை இழக்கவில்லை. எதிர்வார்த்தைகள் கூறவுமில்லை. இதுவரை தூரத்தில் இருந்துகொண்டு இவற்றையெல்லாம் ஏக்கத்துடன் கேட்டுக்கொண்டிருந்த நந்தினியைக் கூப்பிட்டு தனதருகில் உட்காரவைத்து, அவளை முதுகில் தடவிக்கொடுத்துக்கொண்டு தன் உரையைப் பேசலானான். “அப்பா! அம்மா! ஒரு ஆணுக்கு வயது வந்ததும்,  குடும்பம் நடத்துவதற்காக அவனுக்கு ஒரு பெண் அவசியம்.  அவள் எப்படிப்பட்டவள் என்பதை பெரியோர்கள் நிச்சயிக்கலாம் அல்லது அவள் அவனது காதலியாக இருக்கலாம், அல்லது விதிவசமாக அவனுடன் இணைக்கப்பட்டவளாக இருக்கலாம். நந்தினி இந்த மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவள்.  இவளையும் என்னையும் சந்தர்ப்பம் சூழ்நிலை ஒன்றாக இணைத்துவிட்டது.  இது பிரிக்கமுடியாத இணைப்பு.  குலம், கோத்திரம், சாதி, பணம், பட்டம், பதவி, சீதனம் இவையெல்லாம் ஒரு ஆண் பெண் திருமணத்துக்கு அத்தியாவசியமானவையல்ல” என்று தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினான்.

ஆக, வரதனின் பெற்றோர் இருவரும் வேறு வழியின்றி விட்டுக்கொடுக்க வேண்டியதுதான் நியதி.  அதுதான் தர்மமும்கூட. நல்லதுதான் நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.  அவர்கள் சம்மதமளித்து, தம்பதிகளை வாழ்த்தமுன்னர் --

நந்தினிக்கும் வரதனுக்கும் நாமே வாழ்த்துக் கூறுவோம்!

--- முற்றும் ---


No comments:

Post a Comment