பிரீமியர் லீக் சம்பியனாக முடி சூடியது SSC

988
SSC crowned league champions

இலங்கையின் முதல்தர கிரிக்கெட் சுற்றுப் போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான இறுதி வார போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. அதன்படி சுப்பர் 8 புள்ளி அட்டவணையில் நான்கு வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள SSC அணி இப்பருவகாலத்தின் சம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதி வாரத்திற்கான நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்திருந்த நிலையில், ஏனைய இரண்டு போட்டிகளும் இன்று நிறைவடைந்தன.

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

போட்டியில் வெற்றி பெற 188 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ராகம கிரிக்கெட் கழகம் மூன்றாம் நாள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களை பெற்றிருந்தது. எதிரணிக்கு மேலும் 75 ஓட்டங்களே பெற வேண்டியிருந்த நிலையில், சம்பியன் பட்டத்தை சுவீகரிக்க இப்போட்டியை கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் சிலாபம் மேரியன்ஸ் அணி களமிறங்கியது.

எவ்வாறாயினும் இன்று நிதானமாக துடுப்பெடுத்தாடிய ராகம அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலகுவாக வெற்றி இலக்கைக் கடந்தது. தொடக்க வீரர் லஹிரு மிலந்த அதிகபட்சமாக 62 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழியமைத்திருந்தார்.

இத்தோல்வி காரணமாக சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புள்ளி அட்டவணையில் இரண்டாம் இடத்தையே பெற முடிந்ததுடன், ராகம கிரிக்கெட் கழகம் மூன்றாம் இடத்தைப் பிடித்த நிலையில் தொடரை நிறைவு செய்தது.

முன்னர், முதல் இன்னிங்சில் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் மஹேல உடவத்த 41 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், பந்து வீச்சில் அசத்திய நிலங்க பிரேமரத்ன 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த ராகம கிரிக்கெட் கழகம், சமிந்த பெர்னாண்டோ பெற்றுக் கொடுத்த 93 ஓட்டங்களின் உதவியுடன் 276 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. மேலும் கோஷான் தனுஷ்க அரைச் சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட அரோஷ் ஜனோத 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

108 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணியானது, இம்முறை சற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 295 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. அவ்வணி சார்பில் மஹேல உடவத்த, சச்சித்ர சேரசிங்க மற்றும் மதுக லியனபதிரனகே ஆகியோர் அரைச் சதங்கள் குவித்தனர். பந்து வீச்சில் அபாரமான திறமையை வெளிப்படுத்திய சஹன் நாணயக்கார 7 விக்கெட்டுகளை பதம் பார்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (41.4) – மஹேல உடவத்த 41, நிலங்க பிரேமரத்ன 5/41

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 276 (85) – சமிந்த பெர்னாண்டோ 93, கோஷான் தனுஷ்க 50, அரோஷ் ஜனோத 5/45, ஷெஹான் ஜயசூரிய 3/50

சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 295 (96.5) – சச்சித்ர சேரசிங்க 56, மதுக லியனபதிரனகே 54*, மஹேல உடவத்த 52, ருக்ஷான் ஷெஹான் 46, சஹன் நாணயக்கார 7/92

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 191/3 (52.5) – லஹிரு மிலந்த 62, சமிந்த பெர்னாண்டோ 44

போட்டி முடிவு: ராகம கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • ராகம கிரிக்கெட் கழகம் – 17.335
  • சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டுக் கழகம் – 4.265

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

புள்ளி அட்டவணையில் இறுதி இடத்தை பெறும் அணியை தீர்மானிக்கும் இப்போட்டியில் 462 என்ற பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தமிழ் யூனியன் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும் இன்றைய தினம் சிறப்பாக பந்து வீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கோல்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் எதிரணியை 279 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். இதன்படி கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 182 ஓட்டங்களினால் வெற்றியை பெற்று தமிழ் யூனியன் அணியை இறுதி நிலைக்கு தள்ளியது.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் அணி சார்பாக சதீர சமரவிக்ரம மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் அரைச் சதங்களை கடந்ததுடன், பிரியமல் பெரேரா 47 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். எனினும் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஓய்வறை திரும்ப, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய துலாஞ்சன மெண்டிஸ் மற்றும் ரமித் ரம்புக்வெல்ல முறையே 5 மற்றும் 4 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து களமிறங்கிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் மோசமான துடுப்பாட்டம் காரணமாக 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சித்தர கிம்ஹான் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் அசத்திய இஷான் ஜயரத்ன 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

50 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பில் மீண்டும் சதீர சமரவிக்ரம அசத்தினார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 93 ஓட்டங்கள் பெற்றுக் கொடுக்க, கோல்ட்ஸ் அணி 411 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. மேலும், அஞ்சலோ ஜயசிங்க, விஷாத் ரந்திக மற்றும் பிரியமல் பெரேரா ஆகியோர் 80 ஓட்டங்களை கடந்தனர். பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (52.2) – சதீர சமரவிக்ரம 52, அகில தனஞ்சய 52, பிரியமல் பெரேரா 47, துலாஞ்சன மெண்டிஸ் 5/71, ரமித் ரம்புக்வெல்ல 4/75

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (45.2) – சித்தர கிம்ஹான் 43, இஷான் ஜயரத்ன 5/40

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 411 (117.3) – சதீர சமரவிக்ரம 93, பிரியமல் பெரேரா 88, விஷாத் ரந்திக 84, அஞ்சலோ ஜயசிங்க 81, பிரமோத் மதுஷான் 5/112, துலாஞ்சன மெண்டிஸ் 3/108

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 279 (62) –  சித்தர கிம்ஹான் 85, மனோஜ் சரத்சந்திர 59, அகில தனஞ்சய 5/103, இஷான் ஜயரத்ன 2/76

போட்டி முடிவு: கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 182 ஓட்டங்களினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

  • கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 18.09
  • தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 5.235

இறுதி புள்ளி அட்டவணை

PT