புளூம்பீல்ட் கழகத்தை 9 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்ட NCC அணி

1339
Sandun and Kaushal

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான போட்டியொன்றில் புளூம்பீல்ட் கிரிக்கெட்  கழகத்தை வீழ்த்திய NCC அணி 9 விக்கெட்டுகளினால் வெற்றியை சுவீகரித்தது.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்று முன்தினம் (3) கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புளூம்பீல்ட் அணி முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய NCC  அணியின் தொடக்க வீரர் நிரோஷன் திக்வெல்ல 155 பந்துகளில் 23 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக 188 ஓட்டங்களை விளாசினார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய பர்வீஸ் மஹ்ரூப், சந்துன் வீரக்கொடி மற்றும் உபுல் தரங்க ஆகியோர் அறுபது ஓட்டங்களைக் கடந்தனர்.

இதன்படி வெறும் 84 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்றிருந்த NCC அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் சார்பாக பந்து வீச்சில் அசத்திய ஒரே வீரரான மலித் டி சில்வா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் முன்னிலை பெற பாரிய இலக்கொன்றை நோக்கி புளூம்பீல்ட் அணி களமிறங்கியது. எனினும் அபாரமாக பந்து வீசிய NCC அணியின் பந்து வீச்சாளர்கள், புளூம்பீல்ட் அணியை 200 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியதுடன், அதில் தரிந்து கௌஷால் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புளூம்பீல்ட் அணி சார்பாக தனியொருவராகப் போராடிய ஆலோக அமரசிறி 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களைக் குவித்தார். அதன்படி 243 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட NCC அணி, எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

தோல்வியை தவிர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய புளூம்பீல்ட் கிரிக்கெட்  கழகம், இம்முறை முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க 6 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 124 ஓட்டங்களையும், லஹிரு ஜயகொடி 89 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு நம்பிக்கையளித்தனர்.

எனினும் இறுதி விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்திய NCC அணி, புளூம்பீல்ட் கிரிக்கெட்  கழகத்தை 346 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது. பந்து வீச்சில் பிரகாசித்த தரிந்து கௌஷால் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். போட்டி நிறைவடைய 15 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், NCC அணிக்கு 104 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் தொடக்க வீரர் சந்துன் வீரக்கொடியின் அதிரடியினால் வெறும் 9.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து NCC அணி வெற்றி இலக்கைக் கடந்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சந்துன் 28 பந்துகளில் 3 பௌண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களை விளாசினார்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்): 443/9 (84) – நிரோஷன் திக்வெல்ல 188, பர்வீஸ் மஹ்ரூப் 67, சந்துன் வீரக்கொடி 64, உபுல் தரங்க 61, மலித் டி சில்வா 5/83

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்  (முதல் இன்னிங்ஸ்): 200 (64.4) – ஆலோக அமரசிறி 87*, தரிந்து கௌஷால் 3/73

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்  (இரண்டாவது இன்னிங்ஸ்): 346 (99.1) – லஹிரு ஜயகொடி 89, நிபுன் கருணாநாயக்க 124, தரிந்து கௌஷால் 5/132

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்): 104/1 (9.3) – சந்துன் வீரக்கொடி 64*

முடிவு: NCC 9 விக்கெட்டுகளினால் வெற்றி

போட்டியில் அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

NCC – 16.52

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 3.73