ஜிம்பாப்வேயில் சிறப்பாக செயற்படுவோம் : அணித்தலைவர் ஹேரத் உறுதி

1605
Herath

இந்த வாரம் ஜிம்பாப்வேயில் ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து உபாதை காரணமாக இலங்கை அணியின் வழமையான அணித்தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் விலகுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஒக்டோபர் 29ஆம் திகதி ஆரம்பமாகும், முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சியில் இலங்கை அணி ஈடுபடவுள்ளது. பயிற்சிகள் இடம்பெறும் ஹராரே மைதானத்திலேயே இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நவம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்த டெஸ்ட் தொடரை தொடர்ந்து இலங்கை, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்குபெறும் முக்கோண ஒரு நாள் தொடர் ஆரம்பமாகின்றது. இலங்கை அணி இறுதியாக 2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயுடன் புலவேயாவில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் பின்னர் தற்பொழுதே இவ்வாறான ஒரு தொடரில் அவ்வணியுடன் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தனது 38ஆவது அகவையில் இலங்கை அணியை முதற்தடவையாக வழிநடாத்த நியமிக்கப்பட்டுள்ள ரங்கன ஹேரத், கடந்த அவுஸ்திரேலிய தொடரில் இலங்கை அணி காட்டிய அதே திறமையைினை இந்த தொடரிலும் வெளிக்காட்டும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணியினர் ஜிம்பாப்வேயிற்கு செல்வதற்கு முன்னர் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணித் தலைவர் ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,

நான் இலங்கை அணிக்கு எனது 38ஆவது வயதில் தலைவர் ஆகுவேன் என ஒரு போதும் நினைத்ததில்லை. ஆனாலும் என் நாட்டு அணியை வழிநடாத்துவதை கெளரவமாகக் கருதுகின்றேன். எங்கள் அணி அனுபவம் குறைந்த இளம் வீரர்களை கொண்டுள்ள போதிலும், எங்களது சிறப்பான ஆட்டம் மூலம் அண்மைய அவுஸ்திரேலியாவுடனான தொடரில் நாங்கள் 3-0 எனப் பெற்ற வெற்றி எங்களை வலுவூட்டியது. அதன் காரணமாக, எங்கள் அணியின் தன்னம்பிக்கை முன்பை விட மேலும் அதிகரித்துள்ளது. இதனால் நான், எங்கள் அணி சிறப்பாக பிரகாசிக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளேன். “  ன்றார்.

தனக்கு அடுத்ததாக புதிதாக ஒரு தலைவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ்,   

நான் கட்டாயம் ரங்கன ஹேரத்தை பாராட்டியே ஆகவேண்டும். எமது குழாத்தில் அணித்தலைவர் பொறுப்பிற்கு தகுதியான ஒருவர் இருப்பார் என்றால் அது அவர்தான். மிகவும் சிறப்பாக அணியில் செயற்படும் ஒருவர். முழு அணியுமே அவருக்கு பின்னால் தான் இருக்கின்றது.” என்றார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“2016ஆம் ஆண்டில் நான் சில உபாதைகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தேன். இதனால், இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்க முடிந்ததே தவிர அதில் பங்குபற்ற முடியவில்லை. இதனால், நான் ஒரு மனக்கவலைக்கு ஆளாகியிருந்தேன்.

ஏற்கனவே , எனக்கு ஒன்றரை மாதங்கள் ஓய்வு அளிக்கப்பட்டு ஜிம்பாப்வே தொடரிற்கு ஆயத்தமாகி வந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக மீண்டும் அதே நிலைக்கு போக வேண்டி வந்துள்ளது. MRI ஸ்கேன் தரவுகளின் படி, ஏற்கனவே ஏற்பட்ட அதே முழங்காலிற்கு மேலான கால் தசையில் மீண்டும் சில இடங்களில் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனால், தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

மேலும், திறமையான வைத்தியர் குழாம், எனக்கும் இலங்கை கிரிக்கட் சபைக்கும் என்னை இந்த சுற்றுப்பயணத்திற்கு அனுப்புவது சிறந்ததல்ல என்று பணித்துள்ளது. ஏனெனில், இந்த தொடரில் பங்கேற்றால், அது எதிர்வரும் தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் எனது பங்களிப்பினை இல்லாமல் செய்யும் அபாயம் காணப்படுகின்றது.”  என்று கூறி முடித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் கிரிக்கெட்டிற்காக, அதிக பணிச்சுமைகளை (368 நாட்கள்) சுமந்த வீரர் அஞ்சலோ மத்தியூஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை அணியின் துணைத்தலைவராக செயற்பட்ட, எனினும் இந்த சுற்றுத் தொடரில் இருந்து காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமால் இந்த ஊடகவியலாளர் சநிதிப்பில் கருத்து தெரிவிக்கையில்,

அண்ணன் ரங்கன ஹேரத் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து மிகவும் சந்தோசம் அடைகின்றேன். இவர் அதற்கு மிகவும் தகுதியானராவார். எனது காயம் பூரண குணமடைந்தால், ஜிம்பாப்வே உடனான தொடரில் விரைவில் விளையாடுவேன். நடைபெற இருக்கும் ஒரு நாள் தொடரில், பிரகாசிக்க நம்பிக்கை கொண்டுள்ளேன். “ என்று கூறினார்.

இலங்கை அணியின் இத்தொடரிற்கான நான்கு பேர் கொண்ட பந்து வீச்சாளர் பிரிவில், சுரங்க லக்மால் மாத்திரமே இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர் ஆவார்.

மோசமான வீரர்கள் தெரிவு

ஏன் அண்மைக்காலமாக இலங்கை வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பதை இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால போதிய காரணங்களுடன் கூறினார். முக்கியமாக கடந்த மூன்று வருடங்களாக வீரர்கள் சரிவர முகாமைத்துவம் செய்யப்படாமை குறித்தும் அவர் விமர்சித்திருந்தார்.

நாங்கள் சிறந்த அனுபவம் உள்ள வீரர்களுடன் உள்ளோம். 19, 22, 23 வயதுக்குட்பட்ட குறித்த வீரர்கள் நாட்டுக்காகவும், ஏனைய கழகங்களிற்காகவும் விளையாடி வருகின்றனர். இப்படியாக விளையாடி வரும் இவர்கள் உச்சத்திற்கு சென்றவுடன் அந்த நிலையை எப்படி தக்கவைப்பது என்பதை அறிந்து செயற்படுவதில்லை.

100 ஓவர்கள் வீசும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் 18-20 ஓவர்கள் வீசிய பின்னர் அவதானிக்கப்பட்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு மீண்டும் நன்றாக பந்து வீச தயராகும் வரை அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இதனை நாங்கள் ஒரு போதும் செய்திருக்கவில்லை. சரியான வீரர் முகாமைத்துவம் ஒன்றினை நாங்கள் கொண்டிருக்கவில்லை.

அந்த நாட்களில், வருடத்திற்கு  7 டெஸ்ட் போட்டிகள், 18-20 வரையான ஒரு நாள் போட்டிகளே விளையாடுவோம். ஆனால் இப்போது, வருடத்திற்கு 12 டெஸ்ட் போட்டிகள், 30 ஒரு நாள் போட்டிகள், 10 T20 போட்டிகள் வரை விளையாடுகின்றோம். இதனால், அதிக வீரர்கள் தேவை. அதனைக் கருத்தில் கொண்டு வீரர்களை அதிகரித்துள்ள போதிலும், அவர்களை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்வதில்லை.

இதனைத்தான் நாங்கள் தற்போது செய்துகொண்டு வருகின்றோம். இதன் பெறுபேறுகள் சரியாக கிடைக்க இன்னும் 8-10 மாதங்கள் வரை செல்லும். நாங்கள் கொழும்பில் விரைவாக ஒரு Brain நிலையத்தினை உருவாக்கவிருகின்றோம். அதன் மூலம் இப்பிரச்சினைகள் தீர்க்ப்படும். “ என அவர் கூறினார்.