15ஆவது ஐரோப்பியக் கிண்ண (யூரோ) கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. “ஏ” பிரிவில் கடைசி ‘லீக்’ஆட்டங்கள் நேற்று நடந்தது. ஒரு ஆட்டத்தில் பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது. இதன்மூலம் சுவிட்சர்லாந்து 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 சமநிலை முடிவுடன் 5 புள்ளிகள் பெற்றது.
பிரான்ஸ் அணி ஏற்கனவே “நாக்அவுட்” சுற்றுக்குத் தகுதி பெற்று இருந்தது. அந்த அணி 2 வெற்றி, 1 சமநிலை முடிவுடன் 7 புள்ளிகள் பெற்று அந்தப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ருமேனியா– அல்பேனியா அணிகள் மோதின. இதில் ருமேனியா 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாகத் தோற்றது. ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் அல்பேனியா வீரர் அர்மண்டோ ஷாடிகு கோல் அடித்தார். இறுதி வரை ருமேனியா அணியால் பதில் கோல் அடித்து சமநிலைப்படுத்த இயலவில்லை.
இந்தத் தோல்வி மூலம் ருமேனியா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. அந்த அணி 3 ஆட்டத்தில் 1 சமநிலை முடிவு, 2 தோல்வி மூலம் 1 புள்ளி பெற்று ‘ஏ’பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்தது.
அல்பேனியா 1 வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று அந்தப் பிரிவில் 3ஆவது இடத்தைப் பிடித்தது. சிறந்த 3ஆவது அணியில் இருந்து 4 நாடுகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். இதனால் அல்பேனியா மற்ற பிரிவுகளில் உள்ள 3ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.
இன்று நடைபெறும் “பி” பிரிவு ஆட்டங்களில் ரஷியா– வேல்ஸ், இங்கிலாந்து– சுலோவாக்கியா அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து 4 புள்ளியுடனும், வேல்ஸ், சுலோவாக்கியா தலா 3 புள்ளிகளுடனும், ரஷியா 1 புள்ளியுடனும் உள்ளன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்