இலங்கை அணி பாரிய நெருக்கடியில்

1082
Moeen Ali

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட இன்வெஸ்டெக் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று டர்ஹம் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் எலஸ்டயர் குக் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 310 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பின் இன்று 2ஆவது நாளில் தமது ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி வீரர்கள் இலங்கை அணியின் கவனயீனமற்ற களத்தடுப்பு மற்றும் 2 பிடியெடுப்புகளைத் தவறவிட்டதன் காரணாமாக முதல் இனிங்ஸில் பெரியதோர் ஓட்டங்களைப் பெற்றனர்.

புதிய மைல்கல்லை எட்டினார் ஹேரத்

இதற்கிணங்க இங்கிலாந்து அணி 132 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 498 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் 7ஆம் இலக்க வீரராக களமிறங்கிய மொயின் அலி மிக அற்புதமாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 155 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தவிர அலெக்ஸ் ஹேல்ஸ் 83 ஓட்டங்களையும், ஜோ ரூட் 80 ஓட்டங்களையும்,ஜொனி பெயார்ஸ்டோ 48 ஓட்டங்களையும் பெற்றனர்.  இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவான் பிரதீப் 4 விக்கட்டுகளையும், மிலிந்த சிறிவர்தன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

அத்தோடு முன்னாள் இலங்கை அணியின்  சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்ற பின் இலங்கை அணி பெற்ற சுழற்பந்து ஜாம்பவான் ரங்கன ஹேரத் புதியதோர் மைல்கல்லை எட்டியுள்ளார். இன்றைய ஆட்டத்தின் போது ரங்கன ஹேரத் இங்கிலாந்து அணியின் ஸ்டீவன் பின்னின் விக்கட்டைக் கைப்பற்றியதன் மூலம் தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்வில் 300ஆவது விக்கட்டைக் கைப்பற்றியதோடு இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 300 விக்கட்டுகளைக் கைப்பற்றிய 3ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதன் பின் தனது முதல் இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஆரம்பம் முதல் பெரும் தடுமாற்றத்திற்குள்ளாகி 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கொஹ்லியின் விக்கட்டே எமது இலக்கு – புவனேஸ்வர் குமார்

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 35 ஓட்டங்களையும், கவ்ஷால் சில்வா 13 ஓட்டங்களையும், ரங்கன ஹேரத் 12 ஓட்டங்களையும், லஹிறு திரிமான்ன ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் 10 ஓட்டங்களுக்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.

கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய தசுன் ஷானகவிற்குப் பதிலாக அணியில் இணைக்கப்பட்ட மிலிந்த சிறிவர்தன ஓட்டங்கள் எதையும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.  

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும் ஜெமி என்டர்சன் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இந்நிலையில் இலங்கை அணி முதல் இனிங்ஸில் 407 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. அத்தோடு இலங்கை அணி “Follow on” முறையைத் தவிர்க்க 299 ஓட்டங்களை அதாவது 2 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க இன்னும் 208 ஓட்டங்களைப் பெற வேண்டிய பாரிய நெருக்கடியான நிலையில் உள்ளது.