Monday 4 May 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 28 - நச்சுப் பாம்பாய் வருவேன்

போட்டிக்கோவில் நின்று எமது வளவுக்கும் பாடசாலைக்கும் இடையில் அமைந்த வீதியைப் பார்த்தேன். மனம் மகிழ்ச்சியால் பூரித்தது. சிவப்புக் கிறவல் வீதி மாயமாய் பறந்து மறைந்து விட்டது. ஆயிலடிக்கு இப்படி ஒரு இரட்டைப் பாதை கறுப்புக் காபட் வீதி வரும் என்று கற்பனையிலும் நான் எண்ணவில்லை.

'வணக்கம் அன்ரி. வீதியை ரசிக்கிறீர்களா?" கோமதி போட்டிக்கோ அருகாமையில் வந்தபடி விசாரித்தாள்.
ஓம். கற்பனைக்கும் எட்டாத அபிவிருத்தி."

சிந்துசா பேசினாள். 'அன்ரி, யுத்தம் வராதிருந்தால் காபட் வீதி இந்தக் காட்டுக்குள் எட்டிப் பார்த்திராது. துவேசம் புற்று வியாதியாய்ப் பிடித்த பெரும்பான்மை சிங்கள மக்கள் அரசு, இன்னும் பத்து நூற்றாண்டுகள் வந்துபோனாலும் காபட் லீதி போடாது. சீனாக்காரனுக்கு நன்றி சொல்ல வேண்டும்."
'சீனாக்காரன் வாழ்க!" பிள்ளைகள் ஏகோபித்த குரலில் வாழ்த்தினார்கள்.

பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் பதிவு வேலைகள் முடிந்ததும் லெப்ரினன் ஐராங்கனி என்னை விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

இருநூறு அடிகள் வரை நீளமான மண்டபம். இருபக்கங்களிலும் சாக்குக் கட்டில்கள். அவற்றில் புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப் போராளிகள்.

'மேஜர் சிவகாமி அக்கா. மேஜர் சிவகாமி அக்கா" என்ற பதங்கள் விட்டுவிட்டுக் கேட்டன.
எனக்குரிய கட்டிலை காட்டி விட்டு, 'மேஜர் சிவகாமி, உங்கள் புலிகள் இங்குள்ள நடைமுறைகள் பற்றிக் கூறுவார்கள்," என்று கூறியபடி லெப். ஐராங்கனி புறப்பட்டார்.

புலிப் போரளிகள் ஓடிவந்தார்கள். வாழ்த்துக்கள் விசாரணைகள். அங்குள்ள நடைமுறைகளை விளக்கினார்கள்.

"நீங்கள் அதிட்டசாலி," யாரோ ஒருவர் கூறியது காதில் விழுந்தது. அந்த வார்த்தைகள் என் மனக்கண் முன் கேணல் செனிவரத்தினவை நிறுத்தியது.

அவர்களில் எவரும் கரும்புலிப் பிரிவையோ, தளபதிகள் தரத்தில் உள்ளவர்களையோ சேர்ந்தவர்கள் அல்ல. அவ்வாறானவர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பூசா முகாமில் இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தின.
புனர்வாழ்வுக்காக வந்திருக்கிற நூற்று இருபத்தெட்டு புலிப்பெண் போராளிகளும் அதே கதைதான். எனது அங்க லட்சணம் பற்றி. அவர்கள் மத்தியில் மேலதிகமாக ஒரு பார்வை. எல்லாருக்கும் என்னை நன்கு தெரியும். என் வாழ்க்கை சுளிவு நெளிவு எல்லாம் தெரியும்.
என்னைக் கல்யாணம் செய்ய போராளிகள் பலர் போராட்டம் செய்தனர். துருபதன் வெற்றி பெற்றார். மட்டக்களப்பு மந்திரம்---சீனி---கொடுத்து வசியம்செய்து என்னைப் பிடித்ததாககதை உலாவியது.
அப்பொழுது நோவேயின் தலைமையில் ஏற்பாடான சமாதானகாலம். கிளிநொச்சியில் புது வீடு கட்டி முடித்திருந்தேன். வீடு குடிபுகல் நிகழ்வு சிறப்பாக முடிந்திருந்தது.

எமது திருமணத்துக்கு இன்னும் இரண்டு கிழமைகள் இருந்தன. கூறைச் சேலை, நகைகள் நாள் நேரத்துக்குக் காத்திருந்தன. சிவதலம்ஆவரங்கால் சிவசக்திகலியாணமண்டபத்தில் விவாகம். அழைப்பிதழ்கள் வழங்கி முடிந்திருந்தது.

துரபதன் கதை கேளுங்கள். யாழ் பூமிக்கு முதன்முதல் ஆங்கிலக் கல்வியை அறிமுகஞ்செய்த பிரபல தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். விடுதலைப் புலி இயக்கத்தினர் அங்கு பிரசாரத்துக்குப் போயிருந்தனர். அவர்களோடு இயக்கத்துக்குப் போக புலிகளின் வாகனத்தை நோக்கி நடந்தார். மலைவேம்பின் கீழ் நின்ற புலிகளின் வாகனத்தில் துருபதன் ஏறும் சமயம், அதிபர் பாலர் சுண்ணாம்புக் கட்டிடசன்டர்ஸ்மண்டபத்தில் அமைந்த அலுவலக வாசலில் நின்று மௌனமாகப் பார்த்துக்கொண்டு நின்றார். அதிபர்கள் பொம்மைகள் போல் தலையாட்டிய காலம்.
இந்தியாவில் பயிற்சி முடிந்து கிளிநொச்சி திரும்பினார்.

நோர்வே தலைமையில் 2002ஆம் ஆண்டு புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. சமாதானகாலம் சிக்கலின்றிச் சுமுகமாக நட்புறவாக நகர்ந்தது. புலித்தலைவர்கள் புது மனைகள் அமைத்தனர். திருமணம் புரிந்தனர். புதிய ஜீப்களில் பவனி வந்தனர்.

அதேவேளை, விடுதலைப் புலிகளுக்குக் கப்பலில் வரும் பொருட்கள் ஆழ் கடலில் வைத்து இறக்கும் வேலை துரிதமாக இரவுவேளைகளில் நடந்து கொண்டிருந்தது. ஆயுத கொள்வனவுக்குப் பொறுப்பான தையிட்டிக் கிராமத்தவரான கே.பி.என்னும் குமரன் பத்மநாதன் சமாதான சாட்டில் கப்பல் கப்பலாக ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றை ஆழ் கடலில் வைத்து இறக்கிக் கரைக்குக் கொண்டு வரும் பொறுப்பில் துருபதன் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பொறுப்பில். அவரின் கீழ்மூன்றுபிரிவுகள். நூற்றியிருபது போராளிகள்.

இயக்கத்தில் உள்ள பல இளைஞர்கள் ஒருதலைக் காதலாகஎன்னை விரும்பினர். எனினும், நான் துருபதனை விரும்பக் காரணங்கள் இருந்தன.

ராச நாச்சியார் வம்சத்துக்குப் பொருத்தமானவர். துருபதன் அமைதியானவர். எதனையும் ஆழமாய்ச் சிந்திப்பவர். சுத்தமான இருதயம். எவருக்கும் உதவ வேண்டும் என்ற துடிப்பு. எவரையும் குறைகூறமாட்டார். இணுவிலில் அவரது குடும்பத்துக்கு இராசமரியாதை. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பயின்றுஎன்னைப்போல ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பெற்றவர். அதுதான் எனக்குப் பொருத்தமாய்ப்பட்டது.

துருபதன் என்னைப் போல நிறம் இல்லை. கொஞ்சம் கறுப்பு.கிட்டத்தட்ட என்னளவு உயரம். அவரைவிடவும் படித்தவர்கள், உயரமானவர்கள், அழகானவர்கள், நல்ல நிறமானவர்களும் விரும்பினார்கள்.
துருபதனை நான் தெரிந்தெடுத்தமை பலர் பகைமைகளைச் சம்பாதித்தது. குறிப்பாக என்னை அடைய ஒற்றைக் காலில் தவம் செய்த வேலுவும், இந்திரனும் என்னைக் காணும் வேளைகளில் எரிப்பது போலப் பார்த்தனர். முறாய்த்தனர். பல்லை நெருமினர். இருவரும் துருபதனுக்கு உதவியாக கப்பலிலிருந்து யுத்த பொருட்களை இறக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். நாற்பது போராளிகளைக் கொண்ட குழுவின் பொறுப்பாளர்கள். துருபதனுக்கு அடுத்ததரத்தில் உள்ளவர்கள். ஏ.எல் சித்தி பெற்றவர்கள். இருவரும் நல்ல உயரம். நல்ல நிறம். கவர்ச்சியான உடல்வாகு. இருவரும் தங்கள் நண்பர்கள் மத்தியில் சபதஞ் செய்திருந்தனர். அவர்களில் எவராவது ஒருவர் என்னை திருமணஞ் செய்யத் தவறினால், தமது இருசெவிகளையும் வெட்டி எறிவதாக.

அன்ரி, சினிமா டைரக்டர் ராசகுமாரனும் அப்படித்தான் சபதம் செய்தவர்."
ஏன்னடா சொல்கிறாய் தங்கன்?"
இட்டலி விற்கிற அம்மாவின் மகன் ராசகுமாரன் பிரபல நடிகை தேவயானியைக் காதலிச்சவர். ராசகுமாரன் கட்டை கறுவல். தேவயானி நல்ல உயரம். நண்பர்கள் 'கொட்டாவி விடுறாய்" என்று கிண்டல் செய்தவர்கள். அதற்கு ராசகுமாரன் 'தேவயானியைக் கலியாணம் பண்ணாவிட்டால் காதை வெட்டி எறிவன்"; என்று சபதம் செய்தார். பிறகு ஒருநாள் நள்ளிரவு தேவயானி அம்மாவுக்கும் தெரியாமல் கேற்றால் ஏறிவிழுந்து ராசகுமாரனோடு ஓடிவிட்டார்."

பிள்ளைகளே, சிரிப்பை நிறுத்துங்கள். சினிமா விடுப்பு இந்த வன்னி வனாந்தரத்துள்ளும் ஆட்சி பண்ணுகிறது."

நான் எனது கதையைத் தொடர்கிறேன்.

திருமணத்துக்கு ஒரு கிழமை இருந்தது. கடலில் போன துருபதன் திரும்பவில்லை. தினமும் திரும்புவார், திரும்புவார் என்று ஏழுநாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

பெரிய தளபதிகள் எல்லோரிடமும் முறையிட்டேன். கடற்படைத் தளபதி சூசை அண்ணாவுக்கும் முறையிட்டேன் அண்ணைக்குக் கடிதம் எழுதி அனுப்பினேன். பலன் இல்லை. கலியாண நாள் கண்ணீரோடும் கம்பலையோடும் ஏக்கத்தோடும் கடந்து போனது. மண்டை ஓட்டுள் புயல் வீசியது. உலகம் இருண்டு முழங்கியது. ஒன்றும் புரியாமல் மலைத்துப் போனேன்.
சமாதான காலமெனினும், ஸ்ரீலங்கா கடற்படை கடத்தியிருக்கலாம். வருவார் என்று ஆவலுடன் எதிர் பார்த்தேன். புலிகள் அமைப்பில் காணாமல் போனவர்கள் பின்னர் சௌக்கியமாக வந்திருக்கிறார்கள்.

ஒரு மாதத்துக்கு மேல்ஊண்உறக்கமின்றி உள்ளம் நொருங்கிப் போயிருந்தேன்.

இந்திரன், வேலு இருவரும் என் அழகில் சொக்கி பைத்தியமாய் அலைந்து திரிந்தமை பலருக்கு வெளிச்சம். அவர்கள் கடலில் வைத்துத் துருபதனைக் கொன்றிருக்கலாம் என ஐயப்பட்டனர்.
நான் நிராகரித்தேன். சந்தேகம் எழுந்தால்அண்ணை என்ன செய்வார் என்று அவர்களுக்குத் தெரியும்.
நான் நம்பிக்கை இழக்கவில்லை.
அடிமனதில் மெல்லிதாகத் துருபதன் வருவார் என்ற நம்பிக்கை தலைகாட்டிக் கொண்டிருந்து.

என் அழகே எனக்கு ஜென்மத்துப் பகைவன், பாசக் கயிறு வீசி எருமையில் ஏறி வரும் எமன்.

திருமணம் தவறிய இரண்டாவது மாதம், அந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் தளர்ந்து நொருங்க வைத்த தகவல் கால் முளைத்து உலாவியது. கடலுக்குப் போன இந்திரன்வேலுஇருவரும் கரைக்குத் திரும்பவில்லை என்ற பேச்சுக் காதில் விழுந்தது.

புலிகள் அமைப்பில் எல்லாம் பரம இரகசியம். மூச்சு வெளியே வராது. ஊகித்து அறிந்து கொள்ள வேண்டியதுதான்.

புனர்வாழ்வு முகாம் புலிப் பேராளிகளுக்கும் துருபதன் கதை தெரியும். மேலதிகமாக, எனது அழகு பொறாமையை வாரி வழங்கியது. கிளிநொச்சியில் நான் கொஞ்சம் கர்வம். பதவி. புதிய ஜீப். அதிகாரம். இப்போ எல்லோரும் ஒரே தரத்தில். என்ன பண்ணுவார்களோ என்ற ஐயம் தோன்றி தோன்றி அச்சுறுத்தியது.

அடுத்த நாள் காலை ஐந்து மணி. பிரார்த்தனை மண்டபம் போய் எல்லோருடனும் சேர்ந்து சமய வணக்கத்தில் ஈடுபட்டேன். சிங்களத்தில் பாடினார்கள். அடுத்து தமிழில் தேவார திருவாசகம் பாடினார்கள்.
அது முடிந்ததும் அனைவரும் ஐந்து வரிசைகளாக நின்றனர். நான் இறுதி வரிசையில் நின்றேன்.
தேசியக் கொடி---சிங்கக் கொடி----ஏற்றினார்கள். தொடர்ந்து 'நாங்கள் நாட்டுக்கு எதிராகச் செயற்படமாட்டோம் என்று உறுதிசொல்கிறோம்" எனச் சத்தியம் செய்தார்கள். அவர்கள் வழியில் நானும் செயற்பட்டேன்.

காலைச் சாப்பாடு முடிந்தது. புலிப் போராளி---கிளிநொச்சியில் எனது அணியில் பணியாற்றியவர்---நீண்ட மரப் பிடிவைத்த விளக்குமாற்றைக் கையில் தந்து, கையை நீட்டி பெரிய விளையாட்டு நிலத்தை சுட்டிக் காட்டி 'அந்தப் பக்கம் முழுவதையும் பெருக்கிச் சுத்தம் செய். ஒரு துண்டுக் கஞ்சலும் கண்ணில் படக்கூடாது. புரியுதா சிவகாமி?" என்றாள், கொஞ்சம் அதட்டும் குரலில்.
மனித மனம் உவ்வளவு கீழ்த்தரத்துக்குக் கீழிறங்கும் எளிய கேடுகெட்ட பண்டமா? என்மனம் வினாவியது. அவளின் குரலில் வெறுப்பு ஏன்? ஆனந்தபுரம் போர்க்களத்தில் என்னருகே மயங்கிக் கிடந்த வெண்ணிலாதான் அவள்.
சுருண்டு சிதைந்த பறட்டைப் பொப் முடி. சின்னோட்டி மூக்கு.வாத்து முட்டைக் கண். என் கமக்கட்டளவு உயரமுமில்லை. கரிக்குருவி போல மினுமினுத்தாள்.

அடுத்த நாள் காலைக் கிரியைகள் முடிந்துவிட்டன. வெண்ணிலா கைகளில் குப்பைக் கூடையைத் திணித்து 'அந்தப் பகுதியில் உள்ள குப்பைகூளங்களைபொறுக்கு" என்று கட்டளை போட்டாள்.
அவளும் வன்னிதான். சின்னஅடம்பன் ஆயிலடியிலிருந்து இரண்டு மைல் தூரம்.

இரண்டாம் நாள். நேரம் மாலை ஐந்து மணி. பூந்தோட்டப் புனர்வாழ்வு முகாம் அதிகாரி கேணல் ரணவீர விடுதியில் தோற்றந் தந்தார். இராணுவ உடையில் அல்ல. கறுப்பு காற்சட்டை. சிவப்பு ரீ சேட். விளையாட்டு நிலம் போன்ற பெரிய நெற்றி. உச்சந் தலைவரை பரந்திருந்தது. புருவத்தை நிறைத்து அடர்த்தியான மயிர்க்கற்றை. ஊதிப்புடைத்த மூக்கு. இராணுவச் சாப்பாடு உடம்பில் தெரிந்தது.

கேணல் ரணவீர எனது சாக்குக் கட்டில் பக்கம் வந்தார். நான் கட்டிலைவிட்டு எழுந்தேன். கட்டிலில் அமர்ந்து என்னை நோக்கிப் புன்னகை ஏவினார். கண்களில் வெறி வழிந்தது.
போராளிகள் கடைக் கண்ணால் என்னை அவதானிப்பது தெரிந்தது. அவர்களுக்கு கேணலின் இயல்பு அத்துப்படி.

மேஜர் சிவகாமி, எல்லாம் சௌகரியமா?"
'ஓம் மாத்தையா."
உன்னைப் பற்றிக் கேணல் செனிவரத்தின நல்ல றெக்கமென்டேசன்எழுதியிருக்கிறார்."
நான் ஒன்றும் பேசவில்லை.
இரண்டு மாதம் ஹொஸ்பிற்றலில் இருந்தது?"
ஓம்."
'கேணல் செனிவரத்தின ஹொஸ்பிற்றலுக்கு எத்தனை தடவை வந்தது?"
'ஒரு தடவை."
'ஒரு தடவை?" நம்பிக்கை இல்லாமல் அவ்வாறு கேட்டார்போலும். அப்படி ஒரு சிபாரிசு எழுத ஏதோ பரம ரகசிய சங்கதி இருக்க வேண்டும் என்று கேணல் ரணவீர எதிர் பார்த்திருக்க வேண்டும். மனிதன் தனது அளவு கோலால் மற்றவர்களையும் அளந்து கணிக்கும் வர்க்கத்தவன்.
'ஒரு தடவைதான்."
'அ! மிச்சம் மிச்சம் நல்லதா எழுதியிருக்கிறார். ங்."
'உதவி தேவை. என்னுடைய ஒபிஸ். வா. உனக்கு எல்லா உதவியும் நான் செய்வன்."

அந்த மனிதன் என்ன நோக்கத்தோடு வந்தார் என்று தெரியாது. கேணல் செனிவரத்தினவை பற்றி ஏன் விசாரித்தார்? அவர் என்னை அழைத்துப் பேசி வாழ்த்திப் போனதையும் கூர்ந்து கவனித்தபடி நின்ற மனிதன். ஏதோ மனதில் வைத்திருக்கிறார். ஒன்றும் புரிய வில்லை.
சற்று நேரம் கழித்துச் சமையல் கட்டுக்குப் போனேன். சமயலுக்குப் பொறுப்பான கெக்கிராவ பூஞ்சிறாளை---வன்னிக்குளுமாடு மாதிரி விளைந்தவன்---கேணல் ரணவீர மாத்தையாபற்றித் தனது புதிய உதவியாளன் பீரிசுக்குச் சொல்வது காதில் விழுந்தது:
'கேணல் ரணவீர மாத்தையா சுட்டி இங்கு வேலை செய்யும் எல்லாருக்கும் அக்குவேறு ஆணிவேறாய்த் தெரியும். மிக நல்லமனிதர். மிக கெட்ட மனிதர். பூந்தோட்ட புனர்வாழ்வு, பெண்கள் விடயத்தில் மிச்சம் மிச்சம் கவனம். லட்சண மாது என்றால். மேலும் மேலும் மிச்சம் மிச்சம் கவனம். முள்ளிவாய்க்காலில் அடித்து வீழ்த்திய கொட்டியா தானே என்று சிங்களவன் எவனும் தொட்டு நுள்ளி கிள்ளிப் பார்க்க முடியாது. தொலைத்துப் போடுவான். சீட்டுக் கிழித்து வீட்டுக்குப் போடா குட்டை நாயேஎன்று துரத்திப் போடுவான். அப்படித்தான் மதவாச்சி அப்புஹாமியை வேலையாலே தூக்கினவன்.
தான் மட்டும் நல்ல சரக்கு வந்தா, வீணி ஊத்து வான். அப்படி எல்லாம் கதை இருக்குது. 'அதெல்லாம் சும்மா கதை" என்று லெப்.ஐராங்கனி நோநா சொல்கிறார். அதுக்கெல்லாம முகாமில் வாய்ப்பில்லையாம்."

அந்தப் புதியவன் பீரிசு திருப்பிக் கேட்டான் 'பூஞ்சிறாளை ஐயா, அண்ணை, முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த கையோடு இராணுவத்துக்குப் பெரிய வேட்டை. கூட்டம் கூட்டமாய் பொம்பிளை பிடிச்சான்கள், நல்ல கொண்டாட்டம் என்று கதை பேசுறாங்கதானே?"
பீரிஸ், அந்தச் சங்கதி வெளியே வராம, அந்த குட்டி எல்லாம் சுட்டுப் போட்டான்கள். மனித உரிமை அமைப்புக்காரன் கிண்டுவான். அதாலே சாட்சியம் இல்லாம சுட்டுப் போட்டாங்க. அப்படிப் பூந்தோட்டத்திலே நடக்க வாய்ப்பில்லே. குட்டி ஓம் சொன்னா, ஒரு நிமிட சங்கதிதானே."

மாலை வேளைகளில் தியானம், சங்கீத முயற்சிகளில்; ஈடுபட்டேன். என்னை மறந்து சங்கீதம் பாடுவேன். பூந்தோட்டம் எனக்கு நரகமாக விருந்தது. சங்கீதம் பாடும் நேரமும், தியானவேளையுந்தான் என் மனம் நிம்மதி கண்டது. கோபம், வெறுப்பு, தோல்வித் தன்மைகளைக் குறைத்தது. அதனைப் போதிப்பதில்தான் லெப். ஐராங்கனி கூடிய அக்கறை காட்டினார்.
ஆணவமில்லாத பெண்மணி. கேணல் ரணவீரவைக் கண்டால் மாத்தையா மாத்தையா என்று கதை சொல்வாள். மாத்தையாவின் லீலைகள் தனக்குத் தெரியாதது போல நடந்துகொள்வாள். வாழத் தெரிந்தவள், லெப். ஐராங்கனி.

தொழில் கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கினார்கள். பெண்கள் அலங்காரம் கற்றுக் கொண்டேன். மேலதிகமாக தையலும் பயின்றேன். தொழில் புரிய கடன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆயிலடியிலும், சூழ உள்ள கிராமங்களிலும் பெண் அலங்காரம்,தையல் மிக அவசியம் தேவையாய் இருந்தது. அதனால் அதனை தேர்ந்தெடுத்தேன்.

பூந்தோட்டம் சென்று நான்கு கிழமைகள் ஆகிவிட்டன. லெப்.ஐராங்கனியை கேணல் தனது அலுவலகத்துக்கு அழைத்து,
ஐராங்கனி. வெண்ணிலாவின் லீடர் பதவியை சிவகாமிக்கு மாற்றிக் கொடு."
வெண்ணிலா யாழ்ப்பாண யூனிவசிட்டியிலே படிச்சவ. அழகான கையெழுத்து. முகாமை பண்பு நிரம்ப இருக்குது. சிறப்பாய்க் கருமமாற்றுகிறாள்."
'சிவகாமி என்ன படித்திருக்கிறா?"
'ஏழாம் வகுப்பு.அதுகூடமுடிக்கவில்ல."
எங்கே படித்தவ?"
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் கல்லூரி."
'அதுவே பிளஸ் போயின்ற்.அவ மேஜர் தரத்தில் உள்ள போராளி. போர்க்களங்களில் போராளிகளை வழி நடத்திய பெரிய அனுபவம் இருக்குது. நான்கு போர்க்களங்களில் களத்திலிருந்து போராளிகளை வழிநடத்தியிருக்கிறாள். ஒரு விசேடம். ஜெயசிக்குரு போர்க்களத்தில் அவளை எதிர்த்துப் போரடியிருக்கிறேன். எங்களுக்கு பெரிய இழப்பு."
'கேணல் மாத்தையாமுடிவாஎன்ன சொல்லுறார்?"
மேஜர் சிவகாமியைலீடராகப் போடு."

கேணல் ரணவீரமீது அதிருப்தி கொண்ட ஐராங்கனியின் மனம், அவரின் நாளாந்தநடைமுறை,மனோநிலை மாற்றங்களை, கற்பனைக் குதிரையில் பாய்ந்து ஏறிநின்று உரத்துப் பேசத் தொடங்கியது.
பூந்தோட்டம் வந்த நாள் தொடக்கம், கேணல் ரணவீர மாத்தையாவின் இதயத்தில் லக்சண சிவகாமி ஏறிக் குந்தியிருக்கிறாள். சிக்காராய்க் குந்தியிருக்கிறாள். அடர்ந்த புருவக்கண்களில் சதா சிவகாமிதான் காட்சி கொடுக்கிறாள். அவளின் கண்கள் புரியும் புன்னகை, கெக்கட்டம் போட்ட சிரிப்பு, துள்ளி விரையும் போது பறக்கும் நீண்ட கூந்தல், கிளுகிளுப்பான சமயங்களில் அவளது நீண்ட பெரிய கண்கள் புரியும் நர்த்தனம் -ரணவீர மாத்தையாவை ஆட்டிப்படைக்கின்றன. ஆரம்பத்தில் அருமை பெருமையாக ஹொஸ்டலுக்கு வந்தவர், தினமும் மாலை வேளைவருகிறார். சிவகாமி யோடுதான் பேச்சு, சிரிப்பு.
சிவகாமி என்னிடம் முறையிடுகிறாள்.
போகப் போக காலையில் சமய பிரார்த்தனை, தேசியக் கொடிஏற்றுதல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். சிவகாமியைப் பார்க்காமல் ஜீவனம் பண்ண முடியாத மனோநிலை. அவள் லக்சணம் ஆட்டிப்படைக்கிறது. முன்பு எல்லாம் பார்க்க ஆசைப்பட்டவர். பேச ஆசைப்பட்டவர், ஒரு நாளைக்காவது பலாச்சுளையைச் சுவைத்துவிடத் துடிக்கிறார். திட்டங்கள் சறுக்கிக் கொண்டிருக்கின்றன. முட்டாள் தனமாக எதையும் எப்பவும் எங்கேயும் செய்யலாம்.


ஐராங்கனி எனது கட்டிலுக்கு வந்தார். 'சிவகாமி நீதான் இனிமேல்லீடர். வெண்ணிலா இல்லை" என்றார்.
எனக்கு அந்தப் பதவி வேண்டாம்."
'கேணல் ரணவீர கட்டளை. பொல்லாத மனிதன். மறுக்காதே."
ஐராங்கனி போய்க்கொண்டிருந்தார்.

புனர்வாழ்வு முகாமில் வாழ்கிறேன். இங்கு விருப்பு வெறுப்புகளைப் பேச முடியாது. சின்ன மகிழ்ச்சி. வெண்ணிலாவின் லீடர்பதவி கிடைத்ததற்காக அல்ல. அவள் திணிக்கும் வேலைப்பளுவும், வெறுப்பான பார்வையும் அற்றுப் போகும் என்பதால். அவளை மிகவும் மரியாதையோடுதான் நடாத்துவேன். பழிக்குப் பழியாக எந்தக் கஷ்டமான வேலையும் கொடுக்கமாட்டேன். ராச நாச்சியார் வம்ச வாரிசுகளுக்கு அந்த வகையான சின்னத்தனங்கள் கனவிலும் வராது.
கடைசிவரை வெண்ணிலா என்னை பகையாளியாகவே பார்த்தாள். இறுதியாக முகாமைவிட்டு வீடு செல்லும் பொழுது எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லிப் புறப்பட்டாள். ஓரக் கண்ணாலும் என்னை பார்க்கவில்லை.


மேற்கே தெளிந்த நீலஅடிவானத்தில்
தகதகவென ஒளிவீசும் தங்கக் கதிரவன்
என்றும் பச்சையான வெப்பவலய வனத்துள்
கால் பதித்து மறைந்து கொண்டிருந்தான்.

நெற் போல்விளையாடிமுடிய
என்றும் செய்வது போல அன்றும்
பந்தை,அலுவலகஓரத்தில் அமைந்த
களஞ்சிய அறைக்கு எடுத்துச் சென்றேன்.

கறுப்பு காற்சட்டை வெள்ளை ரி-சேட் அணிந்த
கொடிய முத்திபை; புடையன் கேணல்ரணவீர
அங்கு அலுமாரியின் மறைவில் பதுங்கி நின்றான்.
அடர்ந்த புருவத்தின் கீழ் அமைந்த
ஆந்தைமுழிகளைபுரட்டிப் புரட்டி
கழுகுபோல கூர்ந்து பார்த்தான்.
நெஞ்சம் ஊதிப்புடைத்துக் கொண்டிருந்தது.
புற்று மூக்குத் துவாரம் வழியாக
வெளியே தள்ளிய அனல் காற்று
விட்டு விட்டு முகத்தில் அடித்தது.
இருகைகளையும்அகலநீட்டி
'பயம் வேண்டாம் லக்சன நோநா.
பார்க்க எவனும் பதுங்கி வரமாட்டான்.
நெஞ்சத்து அமர்ந்த அழகியதேவதையே
கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்," என்று
காமகீதம் பாடியவாறு முன்னே நகர்ந்தான்.

பாய்ந்து வெளியேற விரைந்து முயன்றேன்.
புடையன் எனது செயற்கைக்காலை
காலணிக் காலால் தடுக்கி விட்டான்.
தடுமாறி முகம்குப்புறச் சரிந்தேன்.

'மாத்தையா, உங்களுக்குக் கோடி புண்ணியம்
உங்கள் மனைவி மக்களை எண்ணிப் பாருங்கள்
கருணை காட்டுங்கள். பிழைத்துப் போகவிடுங்கள்."
'நோநா, விரைவில் விடுதலை பெற்று
சுகமேவீடு போக உதவுகிறேன்,"
என்று கூறியபடிஎன்னைபுரட்டினான்.

'தயவு செய்து ஒன்றும் பண்ணாதீர்கள்.
பஞ்சசீலம் போதித்த புத்த பெருமான்
உன் பாவத்தை பொறுக்க மாட்டார்.
அந்தத் தெய்வம் கண்ணீர் கொட்ட வைக்காதே."

கறுப்பு ரவுசரை கழற்றி அப்பால்வீசி எறிந்தான்.
பாய்ந்து வந்து பாவாடை உள்ளாடை பற்றிநின்று
பாவிப் பயல் பலாத்காரமாய்ப் புடுங்கி எடுத்தான்.
அக்கிரமன் விசர்கொண்டு என் மேனி மேல்
..........................................................

நான் கத்திக் குழறி கால்களை உதறினேன்.
நகங்களால் விராண்டி ஓவென்று கத்தினேன்.
மூக்கைக் கடித்துக் குதற முயன்று உந்தினேன்.

பாராளும் நாச்சியார் வழிவழி வந்த பச்சை உடம்பு
சிதறி வெடிக்கப் போகிறதென்று
சித்தங் கலங்கி வெதும்பினேன்.

ஐயோ! ஐயோ! கடவுளே!முருகா!

ஆக்ரோசப் போராட்டம்
வெறிபிடித்த விலங்கிடம்
தோற்றுப் போனது.
இராட்சத புடையன்
கறுப்பு ரவுசர் குழாய்களுள் கால்களைப் புகுத்தி
அரையைச் சுற்றிய பட்டியை இழுத்து இறுக்கியபடி
வில் வித்தைப் பந்தயத்தில்
ஜெயித்தவன் போல் கெம்பீரமாக
வெளியேறிக் கொண்டிருந்தான்.

கொதியெண்ணெயில் பொரியும் நரகமாகியது,
என் வாழ்க்கை.
இதயம் சதா புலம்பியழ,
கண்ணீர் தாரை தாரையாய்க் கொட்டியது.
இரத்தம் சதாதுவண்டுகொதித்துக் குமுறியது.
நரம்புகள் சதா துடித்துப் பதைத்துச் சுருண்டு வெந்தன.
மனம் சதா கொடும் வேதனையில் உழன்று புரண்டது.
வாழ்விற்கும் சாவுக்குமிடையில்
வெந்து வெடித்துக் கொண்டிருந்தேன்.

என் அழகின்மீதுஎனக்கு வெறுப்பு.
படைத்த கடவுள்மீதுவெறுப்பு.

கடவுளே,
ஏன் என்னை அழகாய்ப் படைத்துப் பழிவாங்குகிறாய்?

நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்?
உன் சாம்ராச்சியத்திலே காமுகனுக்குப் பால் வார்க்கிறாயா?
நச்சு விருச்சத்துக்கு நீர் ஊற்றுகிறாயா?
அபலையின் வேதனைகளுக்குக் கர்ப்பூர தீபம் காட்டுகிறாயா?

நான் விசர் ஓநாயாக இருந்தால்
கேணல் ரணவீரவின் கருந் தொண்டையைக்
கௌவிக் குதறிக் குருதியைக் குடித்திருப்பேன்.
வெஞ்சம் கொண்ட கரடியாக இருந்தால்
கூரிய நகங்களால் கண்களைத் தோண்டி
சதைசதையாய்க் கிழித்துச் சப்பியிருப்பேன்.
சீறியெழும் இராச நாகமாய் இருந்தால்,
படம் விரித்து நான்கடி மேலே சீறிப்பாய்ந்து
கண்களைக் கொத்திக் கொடும் விசத்தைக் கக்கிச்
சாகடித்திருப்பேன்.
மதம் பிடித்த கொம்பன் யானையாகவிருந்தால்
அயலட்டை அதிர ஆக்கிரோசமாய்ப் பிளிறி எழுந்து
வலிமைகொண்ட தும்பிக்கையால் தூக்கி; எடுத்து
கிலிகொள்ளக் கருங்கற்பாறையில் படாரென அடித்து
மலைபோன்ற காலால் மிதித்து சப்பாணி ஆக்கியிருப்பேன்.

வன்னி ராச நாச்சியார்வீரவம்சமீதுஆணை.
காமுகனைகனவிலும் உயிர்வாழ விடமாட்டேன்.
சாமுனையில் சந்திப்பாள் மேஜர் சிவகாமி.

துரோகியைத் தண்டிக்காமல் வாழ விட்டால்
அண்ணைக்குத் துரோகம் செய்தவள் ஆவேன்.
அண்ணையின் தர்ம சாம்ராச்சியத்திலே
தாய்க் குலத்தை வஞ்சித்தவன் வாழ்ந்ததில்லை.

தமிழர் கலாசார வரலாறு பேசுவதென்ன?
அப்பாவிக் கணவனைக் கொன்றமைக்காக
மன்னனையும் அவன் தலைநகரையும்
எரித்துச் சாம்பலாக்கி அழித்தாள் கண்ணகி.
அண்ணையின் தர்ம தத்துவத்தின் பெயரால்
கண்ணகி வழியில் பயணிக்கப்போகிறேன்.

'அன்ரி, கோமதி உங்களைப் பற்றிக் கவிதை எழுதி வைத்திருக்கிறாள்." சிந்துசா
'வாசியெடி." சரிதா.

'தெய்வத் திருமகளே
தேனிலும் இனிய பேரமுதே
கண்ணே மணியே கற்கண்டே
கனிவான தேனமுதே
அன்பே ஆருயிரே எம்தம்
இனிய அன்ரியே.
வாழ்க! வாழ்கவே!"

'கோமதி, நீமகா கெட்டிக்காரி. நான் மர ணித்தால் என்னைப்
பற்றி கவிதை பாடு. என் ஆவி உன்னை வாழ்த்தும். நான்
உங்களோடு என் றென்றும் வாழ்ந்து வாழ்த்துவேன்."

கோமதி நீண்ட நேரம் என்னை உற்றுப் பார்;த்தாள். அண்மைக் காலத்தில் பல தடவைகள் அன்ரி மாட்டுக் கொட்டிலடியில் நின்று விண்ணைப் பார்த்துத் தனிமையில் பேசுவதைக் கண்டிருக்கிறாள். தலையை பக்கவாட்டில் ஆட்டியபடி தரையைப் பார்த்துக் கொண்டு கேற்றை நோக்கி மெதுவாக நடந்தாள். துள்ளுகின்ற போனி ரெயில் துடிப்பின்றிக் கிடந்தது.

~~~~~~~~~~ இன்னும் சில அதிகாரங்கள்...

No comments:

Post a Comment