Friday 1 May 2015

தொண்ணூற்றி மூன்று வயது இளைஞனின் சுறுசுறுப்பான இலக்கியப் பயணம்

சிசு.நாகேந்திரன்

ஆடி, ஆவணி மாதங்களில் மெல்பேர்ண்ணில் கடும் குளிராக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பிருக்கும். மாலை நேரம் 6 மணி. வெளியே கடும்குளிர், காற்று. படுக்கையில் 'சும்மா' சரிந்தவாறே குளிர் போர்வையைப் போர்த்திவிட்டு கைத்தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன். இணைப்புக் கிடைத்தது. அவரது குரலில் சற்றே களைப்புத் தென்பட்டது.

"என்ன கதைப்பதற்கு கஸ்டப்படுகின்றீர்கள் போல கிடக்கு? ஏதாவது சுகம் இல்லையா" என்று கேட்டேன்.

"இல்லைத் தம்பி... உதிலை நடை ஒண்டு போட்டு வாறன். கிட்டத்திலைதான். தெரிஞ்ச ஆக்கள் வீடு. அதுதான் களைக்குது. ஒரு மரத்துக்குக் கீழை நிக்கிறன்."

"அப்ப நான் ரெலிபோனைக் 'கட்' பண்ணிப் போட்டு பிறகு கொஞ்சத்தாலை எடுக்கிறன்"

"இல்லை... இல்லை. கதைக்கலாம்"

அதன் பிறகு என்னுடன் கதைத்து முடித்து விட்டுத்தான் அவர் தனது வீட்டிற்குச் சென்றார். அதுவே அவரது இளமையின் இரகசியம்.

அவர்தான் கலைவளன் திரு. சிசு நாகேந்திரன். இந்த 'சிசு'வில் ஒரு விஷேசம் இருக்கின்றது. தாய் பெயர் சின்னம்மாள்; தந்தை பெயர் சுந்தரம்பிள்ளை. இருவரினதும் முதலெழுத்துக்கள்தான் சிசு. இவர் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கலை, இலக்கிய 'முதுசொம்'. தற்போதைய அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர். ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா? உடல் நலத்தை ஒரு மூட்டையில் கட்டி வைத்து விட்டு சோர்வின்றி எல்லா நிகழ்ச்சிகளிலும் தற்போதும் பங்கு கொள்ளுகின்றார்.

இவர் ஆரம்பத்தில் ஒரு நாடகக் கலைஞர். கொழும்பில் 'ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்' நடத்திய பல நாடகங்களில் பங்கேற்றவர். யாழ்ப்பாணத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் ராஜரத்தினத்துடன் இணைந்து பிரபலமான 'சக்கடத்தார்' நாடகத்தில் (ஆயிரம் தடவை மேடையேறியது) ஒரு பாத்திரமானார். தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம் போன்றோருடன் நாடக அரங்கக் கல்லூரி தயாரித்த பல நாடகங்களில் இணைந்து பணியாற்றியிருக்கின்றார்.

ஆச்சிக்குச் சொல்லாதே, வா கோட்டடிக்கு, கவலைப்படாதே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல, அவமானம், ஊர் சிரிக்குது, அது அப்ப - இது இப்ப போன்றவை இவர் நடித்த நகைச்சுவை நாடகங்களில் சில. தவிர திருநாவுக்கரசுவின் 'இனி என்ன கலியாணம்', கவிஞர் அம்பியின் 'வேதாளம் சொன்ன கதை' கவிதை நாடகம், பிரபலமான வானொலி நாடகங்களான 'சிறாப்பர் குடும்பம்', 'லண்டன் கந்தையா' போன்றவற்றிலும் நடித்துள்ளார்.

ரகுநாதன் தயாரித்த 'நிர்மலா', பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ.எஸ்.துரைராஜாவினால் தயாரிக்கப்பட்ட 'குத்துவிளக்கு' போன்ற படங்களில் நடித்துள்ளார். குத்துவிளக்கு 1972 இல் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் 'ஈழத் திருநாடே' என்ற பாடல் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் தடை செய்யப்பட்டிருந்தது.

இவர் லண்டனில் தங்கியிருந்த காலங்களில், மீண்டும் தாசீசியஸின் 'களரி' நாடக மன்றத்தில் இணைந்து 'புதியதொரு வீடு', 'அபசுரம்', 'எந்தையும் தாயும்' என்ற நாடகங்களில் நடித்திருந்தார். பின்பு அங்கிருந்து பிரியாவிடை பெறும்போது 'கலைவளன்' என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்ந்த பின்னர் எழுத்தாளரானார். அவுஸ்திரேலியாவில் வெளிவரும் 'கலப்பை' என்னும் சஞ்சிகையில் தொடராக வெளிவந்து பின்னர் நூலுருவானது 'அந்தக்காலத்து யாழ்ப்பாணம்' (2005). யாழ்ப்பாணத்தின் ஒரு காலகட்ட சமூக வரலாற்றினைப் பதிவு செய்யும் இந்நூல் புலம் பெயர்ந்த நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்பு 'பிறந்த மண்ணும் புகலிடமும்" (2008) என்னும் நூலை எழுதினார்.

அண்மையில் மெல்பேர்ணில் நடந்த தென்மோடி நாட்டுக்கூத்திலும் இவர் பங்கு பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் போன்ற அமைப்புகளிலும் பங்கேற்று வருகின்றார். நவீன தொழில் நுட்பத்தின் பல கூறுகளைத் தெரிந்து வைத்திருக்கும் அவர் தானே கணனியில் எழுத்துக்களைப் பதிவு செய்து சுறுசுறுப்பான இளைஞனாக இலக்கியப் பயணம் செய்கின்றார்.



No comments:

Post a Comment