Monday 27 October 2014

வன்னி - நாவல் (அதிகாரம் 1)



மனித உரிமை ஆர்வலர் கதிர் பாலசுந்தரம். பிரபல தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர். தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் நாவல் எழுதும் புலம்பெயர்ந்த கனடாவாழ் எழுத்தாளர்.

பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்து
இருபத்தாறு நீளாண்டுகள் போராடி முடிந்து
தமிழ்ஈழ சுதந்திரப்போர் தோல்வியில் முடிந்து,
ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து,
புனர்வாழ்வு பூர்த்தி செய்து அழுதழுது வெளியே வரும்
மேஜர் சிவகாமி கூறும் குருதி சொட்டும் நவீனம்.

புகலிட இலக்கியத் தளத்தில் இதுவரை இத்தகையதொரு சிறந்த வரலாற்று நவீனம் வெளிவரவில்லை என்பது எனது கணிப்பாகும். -          பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம்


அதிகாரம் 1

அதிர்வலைகள்

தலைமுறைகள் மூன்றின் முன்னரே
ராச பாரம்பரிய வழிவழி வந்த
வன்னி 'ராச நாச்சியார் வம்சத்தை"
வரித்துக்கொண்ட சுதந்திர தாகம்
சிவகாமியை போர்க்களம் அழைக்கிறது.

பன்னிரு வயதில் போர்க்களம் புகுந்து
இருபத்தாறு நீளாண்டுகள் போராடி முடிந்து
தமிழ்ஈழ சுதந்திரப்போர் தோல்வியில் முடிந்து,
ஆண்டுகள் மூன்று இலங்கை அரசின் கைதியாய் வாழ்ந்து,
புனர்வாழ்வு பூர்த்தி செய்து அழுதழுது
வெளியே வருகின்றாள், மேஜர் சிவகாமி.

ஊன்று கோல் இருகை பற்றி
பிறந்து வளர்ந்த வன்னி மண்ணின்
சிவந்த வீதியில் ஒருகால் நின்று
அழிந்து மறைந்துபோன நாச்சியார் வம்ச
மூன்று தலைமுறை நீள் கதையை
ஆரம்பிக்கின்றாள் மேஜர் சிவகாமி.
பாட்டி ராச நாச்சியார், 'நான் ராச வம்ச வழி வழி வந்தவள்" என்று
பெருமிதம் பேசுபவர். 'வன்னி மண்ணும் மக்களும் எங்கள் கனவும்
நினைவும்" என்று பெருமை கொள்பவர். 'ராஜ்ஜிய சேவை ராச
நாச்சியார் வம்சக் குருதியோடு இரண்டற இணைந்தது" என்று புகழ்
பாடுபவர். தமிழ் ஈழச் சுதந்திரச் சூறாவளி ஒன்று எழுந்து வந்து
ஆணிவேருடன் அள்ளிப்போகும் ராச நாச்சியார் வம்சத்தை
என்பதைக் கனவிலும் நினைவிலும் அறியாதவர்.

வன்னி தேச பெரு வனத்தின் மையம், புகழ் கொண்ட வளமிகு
ஆயிலடிக் கிராமம். ராச நாச்சியார் வாரிசுகளின் பூர்வீகம். கிழக்கே
வனத்தின் மேல் எழுகின்ற கதிரவன் காலைக் கதிர்கள் கண்டு
மின்னி ஒளிர்கின்ற கரடியன்குளம், அண்டிய பரந்த விளைநிலம்,
வாழ்நிலம் - ராச சேவை அடையாளம். வன்னிக் குறுநில மன்னர்
ராச நாச்சியார் வாரிசுகளுக்குக் கௌரவித்து வழங்கிய பாரம்பரிய
வளங்கள்.

தமிழ் ஈழ விடுதலைப் போரின் வேளை, பொங்கி எழுந்து வந்த
சிங்கள இராணுவம், வனஞ்சூழ் ஆயிலடியைக் கைப்பற்ற முன்னர்,
சீரும் பேரும் செல்வச் செழிப்புமாய் வாகனங்கள் வசதிகள்
வாய்புகளோடு நாடறிந்த நல்ல ராச குடிகளாய் வாழ்ந்தவர்கள், ராச
நாச்சியார் வம்ச வாரிசுகள்.

ஊன்றுகோல் பிடித்து ஒற்றைக் காலில் நான் நிற்கின்ற, இராட்சத
பாலை மரத்தின் கீழ் பளிச்சென்று காட்சி தரும் சிவந்த கிறவல் வீதி,
யுத்த அனர்த்த அடையாளம் அறவே இல்லாமல் புத்தாடை அணிந்த
வாலைக்குமரியாய் காட்சி தருகின்றது. கிராமத்தை வடக்குத்
தெற்காய்ப் பங்கு வைக்கும் வீதியை ராணுவம், தனது பாவனைக்
காகச் சீராக வைத்திருக்கிறது.

மற்றும்படி, கிராமத்தின் வாழ்மனைகள், அரச கட்டிடங்கள் சீரழிந்து
முடமாய் குருடாய் செவிடாய் உருக்குலைந்த சடலங்களாய்
நிற்கின்றன. யுத்தத்தின் கோர எச்சங்கள் தலைநிமிர்ந்து ஆட்சி
பண்ணி நிற்கின்றன. மூன்றாண்டு காலமாய் வானுயர
சுதந்திரமாய் வளர்ந்த செடிகொடிகள் சிதைந்துபோன மனைகளை
மூடி நிற்கின்றன. வளர்த்த மந்தைகள், சீரழிந்த மனைகளுக்கு
உரிமை கொண்டாடுகின்றன. மனித வாடை கண்டு வால் எழுப்பிப்
பாய்ந்து பறக்கின்றன.

யுத்த கொடுமை துரத்த கைப் பையோடு ஓடிய மக்கள், கம்பி வேலி
பட்டிக்குள் மந்தைகள். இரண்டரை லட்சம் மந்தைகளோடு ஆயிலடி
மந்தைகள். 'மெனிக் பாம் அகதி முகாம்" பெயர் சூட்டி, இராணுவ
காவலில் அடைத்து வைத்து, கைதுகள், காணாமல் போதல்,
காட்டிக்கொடுப்புகள் அன்ன அவலங்கள் அனுபவிக்க வைத்து,
மூன்றாண்டுகள் வாட்டி வதக்கி எடுத்து, மாதம் ஒன்றின் முன்னரே
மீள் குடியேற்றம் என்று அழகிய நாமம் ஒளிவீச, சொகுசான
வாகனத்தில் ஏற்றி வந்து பூர்வீகம் ஆயிலடியில் தள்ளிவிட்டுப்
போயிருக்கிறது ஸ்ரீலங்கா அரசு.

சொந்த வீட்டில் குடியிருக்கஆவலுடன் ஓடி வந்தவர்கள். கலிங்கத்துப்
பரணி காட்டும் பேய் பார்த்த மனிதராய் விழி பிதுங்கி நெஞ்சம் வெந்து
ஒடிந்தனர். உருப்படியாய் எவர் வாழ்மனையும் இல்லை. விமானக்
குண்டு வீச்சு, செல் வீச்சில் மனைகள் சிதைந்து உடைந்து
உயிரிழந்த எச்சங்கள். எஞ்சி நிற்கும் இல்லங்களை இராணுவம்
சிதைத்து வைத்துள்ள அக்கிரம ஆட்சியின் கோலங்கள். இடிந்த
சுவர்கள் சுகமேஇருக்கின்றன. புயலுக்கும்அசையா நிலைகதவுகள்
ஓசையில்லாமல் எழுந்து பறந்து விட்டன, சிங்க வாரிசுகளுக்கு
வாழ்மனை பண்ண.

போர்ப் பயம் வெருட்டித் துரத்த ஊர்விட்டு ஓடினவர், பாதிப் பங்கினர்
மீள்குடியேறத் திரும்பி வரவில்லை. ஓடஒட விழுந்த செல்-குண்டில்
சிக்கி சிவலோகம் போய்விட்டனர். உயிர் தப்பி எஞ்சி வந்தவர்கள்
பார்வைக்கு அணி வகுக்கிறார்கள்: கால் இல்லாதவர், கையில்லா
தவர், கண் இல்லாதவர், புருசன் இல்லாதவர், பெண்சாதி
இல்லாதவர். பிள்ளையைத் தேடுபவர், அம்மையைத் தேடுபவர்.
அப்பனைத் தேடுபவர். அம்மா அற்ற அநாதைகள், அப்பா அற்ற
குழந்தைகள், புத்தி பேதலித்த குமர்கள் - அப்படி ஒரு நீண்ட
கண்ணீர்க் காவியம் எஞ்சி மிஞ்சி நின்று சதா வருத்துகிறது ஆயிலடி
மக்களை.

'மெனிக் பாம்" அகதி முகாமிலிருந்து மனக் கோட்டைகள் சுமந்து
வந்தவர்கள், தார்ப்பாய் கூடாராங்களுள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
நச்சுப் பாம்பு, பூரான் பூச்சி, சதா ரீங்காரம் இசைக்கும் நுளம்பு,
அவர்களின் வாழ்விடத் தோழர்கள். குரங்குகள், பன்றிகள்,
மான்கள், முயல்கள், நரிகள் தங்கள் இராச்சியத்துள் புகுந்துள்ள புது
மனிதர்களை மறைந்து நின்று முறாய்க்கின்றன.

அடுத்து என்ன செய்வது? புரியாமல் விழிக்கிறார்கள். வயல் பக்கம்
போக முடியாது. மிதி வெடி கால்களைக் காவெடுத்துவிடும். வெளியே
எங்கேயும் செல்ல முடியாது. நைநாமடு. அரைமைல் தூரத்தில்.
புதிதாய் வாடி போட்டுள்ள ஆமிக்காரன் சந்தேகமாய்ப் பார்ப்பான்.
பொறி தட்டினால் போதும் கதை கந்தல்தான். போர் வெற்றிக்குப்
பின்னரும் புலியை நினைத்தாலே சிங்கத்துக்கு வயிற்றைக்
கலக்கிறது. மருண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய்
போல, தமிழன் எல்லாம் புலியாய்த் தெரிகிறான்.

சற்றே தள்ளி மேற்கே பாருங்கள். தார்ப்பாய் கூடாரங்கள். சுற்றி
மனித நடமாட்டம்.வீதியில்இராணுவவாகனங்கள் இரண்டு. ஒன்று
பெரிய ட்றக். மற்றையது ஜீப். கேணல் ரணவீரா வுடையது. எனக்கு -
மேஜர் சிவகாமிக்கு ஈராண்டுகளின் மேல் புனர்வாழ்வு பயிற்சி
வழங்கிய வவுனியா பூந்தோட்டப் புனர்வாழ்வு முகாம் அதிகாரியாக
இருந்தவன்---கொடிய புடையன்.

வாகனங்களைச் சுற்றி சிங்கள இராணுவ சிப்பாய்கள். அங்கும்
இங்கும் அசைகிறார்கள். துப்பாக்கிகள் கண்களுக்குத் தெரிய
வில்லை. பிஸ்ரல்கள் மறைவாக இடுப்பில் இருக்கும். நான்கூட
கிளிநொச்சியில் வெளியே சென்ற சமய மெல்லாம் பிஸ்ரலை
மறைத்து எடுத்துச் சென்றேன்.

இராணுவ வீரர்கள் என்ன செய்கிறார்கள்? ஏதோ மனிதக் கணக்குப்
பார்க்கிறார்கள் போலும். ஊருக்குள் புலி வந்துவிடும் என்ற அச்சம்.
அண்ணை போட்ட அடியின் வலி இப்பொழுதும் வலிக்கிறது
போலும்.

ஏன் கேணல் ரணவீர இங்கே என்னை நோக்கி நிமிர்ந்து
ஒரேசீராகக் கால்களைத் தூக்கிவைத்து நடந்து வந்தபடி தொப்பியை
சரிசெய்து தன்னை அழகுபடுத்துகிறான். பூந்தோட்ட புனர்வாழ்வு
முகாம் பூச்சாண்டி விளையாட்டுநினைவுவந்து விட்டதோ?


'மேஜர் நோநா ஞாபகம் இருக்கா?" என்று கேட்டபடி கண்களை
எனது பொன்வண்ணச் சேலை மீதும், அரைவரை நீண்டு கலைந்து
தொங்கி அசையும் கருங் கூந்தல் மீதும் மேயவிட்டான். பூரண
வெண்ணிலாவாக பிரகாசம் புரியும் பளிங்கு போன்ற நீண்ட
ஒற்றைக் காலைக் கண்கள் தேடின. பட்டுச் சேலைத் திரை
ஏமாற்றமளித்தது.

நான் பதில் கூறாது ராணுவ உடையில் நின்ற கருந்தடியன் கேணல்
ரணவீர முகத்தை நிறைத்த ஊதிப் பொருமிய பலூன் மூக்கையும்,
ஆந்தைக் கண்களின் மேல் அமைந்த அடர்ந்து வளர்ந்து சிதம்பிய
புருவத்தையும் பார்த்தேன். அந்த ஞாபகம் மின்னலாய்ப் பளிச்சிட்டு
மறைந்தது. என் இதயம் குமுறிக் கொதித்தது.

மீண்டும் வினாவினான் 'மேஜர் நோநா பூந்தோட்ட ஞாபகம்
இருக்கா?"

'ஓம் மாத்தையா (ஐயா). வாழ்வின் அந்திம மூச் சிலுங்கூட
மீளஉயிர்த்து எழும் கல்லில் பதிந்த நினைவுகள்."
'நல்லஇனிமையானநாட்கள் இல்லையா மேஜர் சிவகாமி?"
'தேன்கூடச் சிலவேளை புளிக்கலாம்."
'அதெப்படி. முடியாதே."
'முடியும். மாத்தையா இப்போ நயினாமடு காம்பிலோ?"

சென்ற கிழமைதான் வந்தேன். நானே மாற்றங் கேட்டு
வந்தேன். நோநாவை விடுதலை பண்ணலாம் சுட்டிச் சிபாரிசு
பண்ணினதுநான்தானே. தெரியுமா?"
'தெரியும் கேணல்ரணவீர மாத்தையா."
'நோநாவுக்கு உதவி தேவை வந்தா முகாமுக்கு வாங்க.
நைநாமடு முகாம் புதிசு. அழகான வீடுகள் வசதிகள் உண்டு. நான்
இன்னொருநாளைக்குவருவான்."
அந்த மிருகம் ஆளும் வர்க்க அகங்காரத்துடன் விறுவிறு
என்று தன் ஜீப்பை நோக்கி நடந்து கொண்டிருந்து. விசர் நாய்.
நாய்க்குச் செருப்பாலே ஆலாத்தி எடுக்கவேண்டும்.

இராணுவ அதிகாரிகள் வாழ்க்கை வன்னியில் இராச போகந்தான்.
'மாத்தையா, மாத்தையா" என்று கைகட்டி நின்று பணிபுரியும்
இராணுவ சேவகர்கள். அறுவகை உணவுகள், குடி வகைகள்,
புகைவகைகள். பெண் ஆசை, மண் ஆசை, பொன்னாசை எல்லா
வற்றையும் வன்னிமண் கைகட்டி நிறைவேற்றுகின்றது. 'மேஜர்
சிவகாமி நோநா, எல்லாம் உங்கள் கொட்டியா கொடுத்தது" என்று
பூந்தோட்டப் புனர்வாழ்வு முகாமில் சமைத்துக் கொண்டிருந்த
மதவாச்சி உக்குபண்டா கூறியது என் நினைவில் எழுகின்றது.
கொட்டியாஎன்றால் கேடுகெட்ட பயங்கரப் புலி;’ என்பது சிங்களவர்
கருத்து. வரலாறு முழுவதும் அந்தப் பெயர் அவர்களை அச்சுறுத்தும்
போலிருக்கிறது.

கேணல்ரணவீர போகும் திக்கைப் பார்த்தபடி நின்றேன். கண்களில்
போர் முடிவில் முள்ளிவாய்க்காலில் நாவல் மரத்தின் கீழ் புதைத்து
வைத்த பிஸ்ரலும் தோட்டாக்களும் சைனைட் குப்பியும் பளிச்சிட்டன.
பொலிதீன் பேப்பர் கொண்டு சிக்காராய்ப் பொதி செய்திருந்தேன். பெரு
வெள்ளம்கூட ஒன்றும்பண்ணமுடியாது.

முதுகுப் புறத்தில், கிறவல் வீதிக்குத் தெற்கே அமைந்த ஓடுகள்
இல்லாத சீரழிந்த கட்டிடந்தான் எங்க@ர்ப் பாடசாலை. யாழ்ப்பாண
இந்து போட் இராசரத்தினம் 1944இல் ஆரம்பித்தது.

பாடசாலைக்கு மேற்குப் புறம் தெரியும் சிறு கட்டிடந்தான் ஆயிலடி
கிராம முன்னேற்றச் சங்கம். 1945களில் அரசாங்கம் இலவசமாக
றேடியோ பெட்டி அறிமுகஞ் செய்த இடம். அரசாங்கமே அதற்கு
ஒவ்வொரு மாதமும் பற்றி மாற்றியது. பற்றி கொண்டு வந்த அந்தச்
சின்ன வானில்தான் முதன் முதலில் கோணப்பர் எங்கள் ஊருக்கு
வந்தார்.

யாழ்ப்பாணம் சிவதலம் ஆவரங்கால் கிராமத்திலிருந்து ஆங்கிலதமிழ்
ஆசிரியராக 1950இல் வந்த கோணப்பர்தான் எங்கள் ஊருக்கு
யாழ்ப்பாண அரசியலைச் சுமந்து வந்தவர். ஒரு தடவை கோப்பாய்
எம்.பி. வன்னியசிங்கத்தையும் அழைத்து வந்தவர்.

அரச இரத்தம் ஓடும் எங்கள் குடும்பம் லபக்கென தமிழரசு அரசியல்
சித்தாந்தத்தைப் பற்றிக் கொண்டது. தமிழரசுக் கட்சிக் கிளை
திறக்கப்பட்டது. தாத்தா துரோணர் தொடர்ந்து தலைவராய்ச்
செயற்பட்டார். சுதந்திர வேட்கை அரசியலில் மூழ்கிப் போனார்.
தாத்தாவுக்குப் பிறகுஅப்பா ராசா ராம் தலைவராகஇருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, விடுதலை வேட்கையில் நாங்கள் ஆறு
சகோதரங்கள்---வீரக்கோன், யோகன், சங்கிலி, சிவகாமி, முல்லை,
பாவலன் எல்லோரும் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களில்
இணைந்து ஐவர் அழிந்துபோக, ‘ராச நாச்சியார் வம்சத்தின்எஞ்சிய
ஒரே எச்சந்தான் நான், மேஜர் சிவகாமி.


போர் முடிவில் கைதாகி புனர்வாழ்வு முகாமில் அடைத்து
வைத்தார்கள். நேற்றைக்கு விடுதலையாகி ஆயிலடிக்குப் பெரும்
ஆனந்தத்தோடு காலையில் வந்து சேர்ந்தேன். மூன்று வருடக்
கனவு நிறைவேறிய மகிழ்ச்சி. காலைக் கதிரவன் கிழக்கே கரடியன்
குளத்தின் மேலே தகதகவென எழுந்து கொண்டிருந்தான்.

உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கு---இரு கையேந்தி
வரவேற்பார்கள் என்ற அசையாத நம்பிக்கையோடு---புன்னகை
சொரியும் வதனம் பொலிந்து நிற்க, கமக்கட்டுள் அமைந்த மரஊன்று
கோலை இறுக பற்றி வலித்த நிலத்தில் அடித்து 'டொக் டொக்' என்று
தாளத்துக்கு ஓசை எழுப்பி நடந்து சென்றேன். எனது நடைக்கு ஏற்ப
முதுகில் தொங்கிய கறுப்பு பையும் அசைந்தாடியது.

முதலாவது தார்ப்பாய்க் கூடாரம் எதிரே தெரிந்தது. குண்டாய்
கறுப்பாய் நீண்ட நீலக் கவுண் அணிந்த தேவி தம்பன் தெரிந்தாள்.
ஆயிலடி பாடசாலையில் கீழ் வகுப்பில் என்னோடு ஒரே வகுப்பில்
படித்தவள். என்னைக் கண்டதும் இரண்டு பிள்ளைகளையும்
உள்ளே எட்டி இழுத்து கூடார வாசல் கன்வசை மூடினாள்.

வாசலில் நின்று, 'தேவி மயக்கமாயிருக்கிறது. ஒரு கோப்பை தேநீர்
தா," என்றேன். பதில் இல்லை. 'பரவாயில்லை. தேவி, கொஞ்சம்
தண்ணீராவது தா." பதிலுக்கு காத்திருந்ததே மகா தப்பு. படிக்கும்
போதே அடிக்கடி தலைமை ஆசிரியருக்கு கோள் மூட்டியவள். எனது
அழகும் கல்வி விளையாட்டு வித்துவமும் அவளின் வயிற்றெரிச்சல்
பொறாமைக்கு எரியெண்ணெய் வார்த்தன. பொறாமைப்
பிண்டத்தை விடுங்கள். மற்றவர்கள் ஆதரித்து உதவுவார்கள் என்ற
பாரிய நம்பிக்கையைச் சுமந்தபடி அடுத்த கூடார வாசலில் நின்று
குரல் கொடுத்தேன்.

நேரம் அதிகம் செல்லவில்லை. என் இதயத்தில் கேள்விகள் எழுந்து
வரிசையில் நின்றன. இதயம் பெருங் கூச்சல் எழுப்பி உடைந்து
நொருங்கிக் கதறியது. எவரும் முகங்கூடத் தரவில்லை. 'ஏன் நாயே'
என்றுகூடக் கேட்க வில்லை. தூரக் கண்டதுமே துள்ளிப் பாய்ந்து
சென்று தார்ப்பாய் கூடாரங்களுள் மறைந்தனர்.

சிறு பிள்ளைகள் கூடாரத்துள் இருந்தபடி எட்டி எட்டிப் பார்த்தனர். ஒரு
மூடிய கூடாரத்தின் வாசலில் இருந்த இரு கால்களும் அற்ற பாலகன்
என்னைப் பரிதாபமாய்ப் பார்த்தான்.

தாகம் கொடுமைப் படுத்தியது. பசி வயிற்றைப் பிச்சுப் பிடுங்கியது.
யாராவது ஒரு கோப்பை தேநீர் தரமாட்டார்களா? பச்சைத்
தண்ணீராவது தரமாட்டார்களா என்று ஏங்கியபடி நடந்தேன்.

'இங்கே ஏன்டி வந்தாய்? இன்னும் என்ன மிச்ச சொச்சம் இருக்குது?
நாசமாய்ப் போவாய். நரகத்துக்குப் போவாய். வயிற்றில் தீ அள்ளிக்
கொட்டினாயே!" திட்டிய சுடுசொற்கள் காதுகளில் கணீரென
விழுந்தன. சோதி மாமியின் குரல்.

அவ கொஞ்சம் தூரத்துச் சொந்தம். மகள் சுலோசனா. அவளை
ஓமந்தை மகா வித்தியாலயத்திற்குப் பிரசாரத்துக்குச் சென்ற வேளை,
போர்க்களத்துக்கு சாய்த்துக் கொண்டு போனேன். அன்று மட்டும்
வேறும் ஒன்பது இளம் மங்கையரை புலிகளோடு சேர்த்துக் கொள்ள
முடிந்தது. சிலவேளை ஒருவரைக் கூட அகப்படுத்த முடிவதில்லை.
;பெண்களைப் புலிகள் இயக்கத்திற்குப் பிடிப்பதில் சூரி| என்ற
அபிப்பிராயம் இயக்கத்தில் நிலவியது. 'சிவகாமி, அதெப்படி
உன்னால் மட்டும் முடிகிறது?" என்று அண்ணை ஒரு முறை
அக்கறையோடு விசாரித்தவர்.

விளையாட்டில் திறமையான சுலோசனா ஓ.எல். படித்துக்கொண்டி
ருந்தவள். படிப்பிலும் சூரி. நீண்ட வாழைக் குருத்துப் போன்ற
கால்களும் சினிமா நட்சத்திரம் போன்ற கவர்ச்சியும் கொண்ட அவள்.
இந்தியாவில் தஞ்சாவூர் மேற்குப்புலிகள்முகாமில் பயிற்சி பெற்றவள்.
கிளிநொச்சி திரும்பி விரைவாக முன்னேறி பத்துப் பேர் கொண்ட
அணிக்குத் தலைவியானாள்.

1996 - ‘ஓயாத அலைகளபோரை முன்னெடுத்து, முல்லைத்தீவு
இராணுவ முகாமை தாக்கினோம். 2900மீ நீளம். 1900மீ அகலம்.
215 பிறிகேட் தலைமையகம். 1200 இராணுவ வீரர்களைக்
கொன்று முகாமைக் கைப்பற்றி அங்கிருந்த அத்தனை யுத்த வெடி
பொருட்கள், வாகனங்களையும் அள்ளிச் சென்றோம்.

ஓயாத அலைகள் போர்க்களத்தில் முன் வரிசையில் தவழ்ந்து
தவழ்ந்து வேலி முள்ளுக் கம்பியை வெட்டிய கணமே சுலோசனா
தியாகி ஆகிவிட்டாள். தான் திரும்ப மாட்டேன் என்பது அவளுக்கும்
தெரியும். முதல் வரிசையினரின் சடலங்களின் மேலால்தான்,
இரண்டாம்அலைவரிசை நகர்வு நிகழ்ந்தது. இரண்டாம்அலைவரி
சையினரின் சடலங்கள் மேலால் நகர்ந்தே மூன்றாவது அணியினர்
உட்புகுந்தனர்.அதுவேபுலிகளின் நிரந்தர உத்தி.

ஊன்று கோல்களை கைகள் இரண்டாலும் இறுகப் பற்றி முன்னே
நகர்த்தி, எஞ்சிய ஒற்றைக் காலை எடுத்து வைப்பதே பெரும்பாடாக
இருக்கிறது. கண்கள் அடிக்கடி இருள்கின்றன. எங்கே நிலத்தில்
சாய்ந்து விடுவனோ என்ற அச்சமாய் இருக்கிறது.

உறவினர், ஊரவர், தெரிந்தவர், அயலவர் எவரும் அண்டுவதாய்
இல்லை. எல்லோரும் ஒதுக்கி வைக்கிறார்கள். போர் முடிய முன்னர்
கிளிநொச்சியிலிருந்து ஒரு தடவை ஆயிலடிக்கு எனது ஜீப்பில்
வந்திருந்தேன். முல்லைத்தீவு இராணுவ முகாம் கைப்பற்றிய போது
வீரமரணமடைந்த சுலோசனாவின் பூதவுடலோடும், அதற்கு அரச
மரியாதை செய்ய எனது பெண்கள் அணி பான்ட் வாத்தியத்துடனும்
வந்திருந்தேன். முழு ஊருமே கூடியிருந்து எனக்கு ராச மரியாதை
செய்தது. அவ்வேளை சோதி மாமி, 'பிள்ளை சிவகாமி. என்டை
மகள் சுலோ தமிழ் ஈழ விடுதலைக்கு உயிரைப் பணயம்
வைத்தவள். அவள் வீரத்தை எண்ணிப் பெருமிதப்படுகிறேன்.
அவளுக்கு நீ பான்ட் வாத்தியத்தோடு வந்து செய்த ராசமரியாதைக்கு
எனது நன்றிகள். நீ நல்லாயிருப்பாய் சிவகாமி" என்று பாராட்டியவர்
சோதி மாமி. அந்த நிகழ்வின் முன்னரே சோதி மாமியின் கணவர்
சுந்தரேசன், விற்பதற்காக பத்து தேன் போத்தல் கொண்டு வவுனியா
சென்றவேளைகாணாமல் போனார்.

'பிள்ளை சிவகாமி, நீ மேஜராக இருப்பது, இந்தச் சின்ன
ஆயிலடிக்கே பெருஞ் சிறப்புச் சேர்க்கிறது" என்று புகழ் பாடியவர்
மணியண்ணை.

இந்த மனிதர்களை நினைத்தால் எனக்கு ஐயமாக அச்சமாக
இருக்கிறது. காலத்துக்கு ஏற்ப வேசம் போடுகிறார்கள். புலியைப் பற்றி
ஓகோ என்று புகழ்ந்து தள்ளியவர்கள். முருகன் அனுப்பிய புலி என்று
திருப்புகழ் பாடியவர்கள். புலி அரசியல் பேசி அசத்தியவர்கள். புலியின்
பகையாளிகள் மண்டையைப் போட்ட வேளை வெடி கொளுத்திய
மனிதர்கள். பாட்டிவைத்து நன்றாய்க் குடித்துக் கும்மாளம் அடித்த
மனிதர்கள். இன்று புலிகளைப் பற்றி மூச்சுப் பேச்சு இல்லை.
புலியைப் பற்றி எதுவுமே தெரியாத புரியாத வேற்றுக் கிரக மாந்தர்
போல நாடகமாடுகிறார்கள்.

உள்@ர் அரசியலாவது பேசுகிறார்களா? இல்லை. அறவே இல்லை.
அரசியல் துறவறம் பூண்ட சந்நியாசிகளாகக் காட்சி தருகிறார்கள்.
நான் காண்பது என்ன கனவா?

ஆயிலடியில் மட்டுந்தான் இந்த ஆத்திரம், வெறுப்பு, மௌனமா?
அன்றேல், வன்னிமுழுவதும்இதே கதைதானா?

வீதியில் இறங்கி நடந்தேன். தலை சுற்றுவது போல இருந்தது.
காலை நீட்டி வீதியோரம் அமர்ந்தேன். பத்து வயது மதிக்கத்தக்க
மஞ்சள் சட்டையும் சிவப்பு பாவாடையும் அணிந்த பெண், நீண்ட
போனி ரெயில் துள்ளிவிளையாட, ஓடி ஓடி வந்தாள். இவளின் வலது
கையில் அலுமினியச் செம்பு. அதனை நீட்டி, 'மேஜர் அன்ரி
குடியுங்கள்" என்றாள். அவள் இடது கையைத் தேடினேன்.
முழங்கைக்கு அப்பால் கண்ணில் படவில்லை. 'எடியே கோமதி!
வாடி இங்கே" என்று உரத்து அதட்டும் பெண்ணின் குரல் உறுமியது.
அழகு பொங்கும் வட்ட வதனத்திலிருந்து புன்னகை சிந்த நீண்ட
கால்களை எட்டி வைத்து ஓடி மறைந்தாள் கோமதி.

பொழுதுசாய் வேளை கண்ணயர இடந் தேடி ஓடி அலைந்தேன்.
கிடைக்கவில்லை. இடிந்து சிதைந்து போன எம் வீட்டின் எதிரே,
கிறவல் வீதியின் மறுபக்கம் அரசினர் பாடசாலை. எங்கும் போர்
முடிவின் பின்னர் புதிதாய் வளர்ந்த காட்டுச் செடிகொடிகள்.
சீமெந்தாலான நடை பாதையில் வழி தெரிந்தது. அதன் வழி போய்,
நாலு சுவர்கள் எஞ்சிய அறைக்குள் சென்றேன். முதுகில் தொங்கிய
கறுப்பு பொலித்தீன் பையை இறக்கி வைத்து, அதனுள் இருந்து
மண்வண்ண படுக்கை விரிப்பை எடுத்து, சீமெந்து நிலத்தில்
விரித்துகாலைநீட்டிச் சயனித்தேன்.

மேலே ஓடில்லாத கூரையூடாக வானத்தின் மின்மினிகள் காட்சி
தந்தன. பார்த்து மகிழ மனமில்லை.

போர்வை பெரும் ஆதரவாகவிருந்தது. நுளம்பு ஓயாது காதுள் நீண்ட
ராகம் இழுத்து விட்டு விட்டுக் கடிக்கும்போது போர்வையை
சிக்காராய்ப் போர்த்திக் கொண்டேன்.

சாமவேளை பசி வயிற்றைப் பிராண்டியது. கறுப்புப் பையிலிருந்து
மூன்று பி;ஸ்கட் எடுத்துக் கடித்தேன். அப்பொழுது பூந்தோட்ட
புனர்வாழ்வு முகாம் பெண் அதிகாரியான லெப். ஐராங்கனி வழி
அனுப்பும்பொழுது கூறிய வார்த்தைகள் காதில் எதிரொலித்தன.
'மேஜர் சிவகாமி. இந்த பையைக் கொண்டு போ. இதனுள் பெட்சீற்,
இரண்டு கவுண், துவாய், மூன்று பிஸ்கட் பெட்டிகள் உள்ளன.
வன்னிச் சனம் புலிமீது கோபமாய் இருக்கிறான். புலிதான் வன்னிப்
பேரழிவுக்குக் காரணம் என்கிறான். கவனம்."

'சரி. கொண்டு போகிறேன் லெப். ஐராங்கனி. உங்களது
அக்கறைக்கு நன்றி. வீணாகக் கவலைப் படாதீர்கள். வன்னிச் சனம்
நிறை குடம் வைத்துப் பூமாலை போட்டு இந்த ராச நாச்சியார் வம்ச
மேஜர் சிவகாமியை வரவேற்கும்."

ஜீப் வரும்ஓசைகாதில் விழுந்தது. குந்தியிருந்து அவதானித்தேன்.

இரவு முழுவதும் அடிக்கடி எதிரே உள்ள புதுப்பித்த கிறவல் வீதியில்
அந்த ஜீப் ஓடிக் கொண்டிருந்தது. என்னை இராணுவம்---டானியல்-
--மிக அவதானமாய் நோட்டம் பண்ணுவது புரிந்தது. சின்னச்
சந்தேகம் வந்தால் போதும். அள்ளிக்கொண்டுபோய் கூட்டுள் தள்ளி
இரண்டாம் ஆட்டம் ஆரம்பிக்க.    *** தொடரும் ***




No comments:

Post a Comment