Sunday 7 September 2014

வெற்றிமணி

இலங்கையில் வெளிவந்த முதலாவது சிறுவர் மாத இதழ் "வெற்றிமணி"

அன்று
வெற்றிமணி டாண் டாண் எனவே விண்முட்ட ஒலித்திடுவாய்
நற்றமிழாம் எங்கள் மொழி  நலமுற ஒலித்திடுவாய் - என்ற வாழ்த்து ஒலியுடன் வெளிவந்த, இலங்கையின் முதலாவது சிறுவர் மாத இதழான "வெற்றிமணி"க்கு இன்று 64 வருடங்கள். 

1950 இல் நாவலப்பிட்டியில் ஆசிரியராகப் பணிபுரிந்த அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களால் இந்த வெற்றிமணி ஆரம்பிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டளவில் அமரர் முத்தையா அவர்களால் 'ஆத்மஜோதி' என்ற ஆன்மீக சஞ்சிகை நாவலப்பிட்டியில் இருந்து வந்தது. அமரர் முத்தையா ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அதற்கு அயலூரான குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமரர் மு.க.சுப்பிரமணியம். இவர்களது நட்பினாலும், சிறுவர்களுக்கென ஒரு சஞ்சிகை வரவேண்டும் என்ற ஒரு உந்துசக்தியினாலும் வெற்றிமணி வெளியானது.

1957 ஆம் ஆண்டுவரை நாவலப்பிட்டியிலும், 1958 இல் இருந்து க.வே.மகேந்திரன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பூண்டுலோயாவிலும், பின்னர் 1964 இல் இருந்து திரு. பொ. இராசரத்தினம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு முல்லைத்தீவு தண்ணீருற்றிலும் இருந்து வெளிவந்தது வெற்றிமணி. தொழில் இடமாற்றம், கடதாசி விலை உயர்வு போன்ற பல காரணங்களால் இடையிடையே வெளிவருவதில் தடையேற்பட்டாலும், முல்லைத்தீவில் இருந்து வெளிவரும்போது அது தனக்கென ஒரு சொந்த அச்சகமான 'சக்தி அச்சகத்தை' ஸ்தாபித்திருந்தது.

1968 இல் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் குருப்பசிட்டி பொன்.பரமானந்தர் வித்தியாலத்தில் அதிபராக பதவி உயர்வு பெற்ற பின்னர், சக்தி அச்சகம் யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரான்லி றோட்டிற்கு இடம் மாறி வெற்றிமணி அங்கிருந்து வெளியாகியது.. அதன் பின்னர் 1972 இல் இருந்து 1979 வரை சக்தி அச்சகம் சுண்ணாகத்திலிருந்த பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம் மாறியது. இலங்கையில் ஏறக்குறைய 30 வருடங்கள் வெற்றிமணி வெளிவந்தது.

திரு.வை.சி.சிவஞானம் அவர்களின் 'கணக்கியலுக்கோர் அறிமுகம்' கட்டுரைத் தொகுப்பும்; கவிஞர் வி. கந்தவனம் அவர்களின் 'பரீட்சையில் சித்தியடைவது எப்படி?'; இரசிகமணி. கனக செந்திநாதன் எழுதிய 'கீரிமலையினிலே' - கவிஞர் வி.கந்தவனம் எழுதிய கவிதை நூலுக்கான விமர்சன நூல்; மற்றும் டாக்டர் நந்தி (சிவஞானசுந்தரம்) அவர்கள் எழுதிய 'உங்களைப் பற்றி' கட்டுரைத் தொகுப்பும் வெற்றிமணி வெளியீடுகளாக அன்று வெளிவந்தன.

உன்னதமான இடத்தை வாசிப்பு பெற்றிருந்த அவ்வேளையில், அதனை உரிய முறையில் பாவித்து வெற்றி கண்டவர் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள். அன்னார் 1980 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இவ்வுலகை நீத்தார். அத்துடன் வெற்றிமணியும் அங்கு ஓய்வு கொண்டது.

பண்டிதமணி கணவதிப்பிள்ளை, பண்டிதர் இ.நமசிவாயம், இரசிகமணி கனக செந்திநாதன், கவிஞர் வி.கந்தவனம், சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, கவிஞர் இ.நாகராஜன், காரை சுந்தரம்பிள்ளை, திக்குவல்லை கமால், க.மொழிவரதன்(மகாலிங்கம்)கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை, வேல் அமுதன், வை.சி.சிவஞானம், நந்தி, பாலமுனை பாறுக், சரணாகையூம், செளமினி, மூதூர் கலைமேகம், சொக்கன், அரியாலையூர் ஐயாத்துரை, அருட்கவி சீ.விநாசித்தம்பி, கோப்பாய் சிவம், சு.சிவகுமாரன், பண்டிதர் சோ.இளமுருகனார், நெல்லைதாசன், திமிலைத்துமிலன் (எஸ்.கிருஷ்ணபிள்ளை), கேணிப்பித்தன் (சி.அருளானந்தம்), வ.ந.கிரிதரன் போன்றோரும் தமிழகத்திலிருந்து சாலை இளந்திரையன், மதுரை கா.தமிழ்த்தம்பி போன்றோரும் அன்று வெற்றிமணியில் எழுதிய எழுத்தாளர்களில் ஒரு சிலராவார்.

இன்று

கவிஞர் வி.க.வின் "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்னும் வாசகத்துடனும், "தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே விலகிச் செல்கிறது" என்ற அரவிந்தரின் மணிமொழியுடனும் 1994 இல் இருந்து புலம்பெயர்ந்த தேசத்தில் வெளிவருகின்றது வெற்றிமணி.  அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் புதல்வர் மு.க.சு.சிவகுமாரனை ஆசிரியராகக் கொண்டு ஜேர்மனியில் இருந்து வெளிவருகின்ற வெற்றிமணி, ஐரோப்பாவில் வெளிவந்த முதலாவது இலவச வண்ண மாத இதழாகும். திரு சிவகுமாரன் இலங்கை களனி பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பட்டதாரியாவார். அதனால் பத்திரிகை, வர்ணத்தில் அழகாகவும் சிறந்த வடிவமைப்புடனும் வருகின்றது.

வெற்றிமணியில் வெளிவந்த கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், அறிவியல் விடயங்கள் நூலுருவம் பெறுகின்றன. தாயகத்தில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகின்றன. நூலுருப் பெற்ற புத்தகங்களாக கவிஞர் வி.கந்தவனம் அவ்ர்களின் 'எழுத்தாளன்' (1995); திரு.பொ.கனகசபாபதி(முன்னாள் மகாஜனாக்கல்லூரி அதிபர்) அவர்களின் 'திறவுகோல், மாறன் மணிக்கதைகள்' (2000); மாதவியின் 'இடைவெளி' சிறுகதைத்தொகுப்பு(2000), 'தமிழே காதல்' (2002); சுகந்தினி சுதர்சன் எழுதிய கவிதையும் சித்திரங்களும் கொண்ட 'வெற்றிமணிகள்' நூல் (2003); இந்துமகேஷ் அவர்களின் 'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி' (2006); கதிர் துரைசிங்கம்(கனடா) அவர்களின் நகைச்சுவை அறிவியல் துணுக்குகள் 'காதோடு காதாக' (2005); மு.க.சு.சிவகுமாரன் எழுதிய அறிவியல் கட்டுரைத்தொகுப்பு 'அதிசய உலா' (2007); வலன்ரீனா இளங்கோவன் ( கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியை, யாழ் வெற்றிமணி மாணவர் பத்திரிகையின் இணை ஆசிரியர்) எழுதிய 'யாழ்ப்பாணத்து நாட்டிய மரபுகள்' என்பவற்றைக் குறிப்பிடலாம்.

 2005ஆம் ஆண்டிலிருந்து, வெற்றிமணி மீண்டும் மாணவர் இதழாக காலாண்டிற்கொருமுறை யாழ்ப்பாணத்தில் இலவசமாக வெளிவருகின்றது. இதன் இணை ஆசிரியராக வலன்ரீனா இளங்கோவன் அவர்களும், கொளரவ ஆலோசகராக மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் உள்ளனர். அத்துடன் அறிவியல் ஆன்மீகம் கலந்த சிவத்தமிழ் என்னும் காலாண்டு சஞ்சிகையையும் 2004 இல் இருந்து வெற்றிமணி வெளியிடுகின்றது.

28.08.2010 அன்று ஜேர்மனியில் வெற்றிமணி தனது மணிவிழாவைக் கொண்டாடியது. இதில் பிரதம விருந்தினர்களாக  இலங்கையிலிருந்து பேராசிரியர் அ. சண்முகதாஸ்(வாழ்நாள் பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகம்), கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். பரதநாட்டியம், கோலாட்டம், சிறுவர் உரைகள் மற்றும் இளைஞ்ர்களது இன்னிசை ஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிகளுடன் மணிவிழா கொண்டாடப்பட்டது.




No comments:

Post a Comment