Sunday 3 August 2014

அந்தப் படம்?



பிறின்ஷி பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டாம் வருட மாணவிகளில் துடுக்கானவள். துள்ளலும் ஓயாத பேச்சும் 'அழகி' என்ற கர்வமும் கொண்ட அவளை அடக்க வேண்டும் என சிலர் விரும்பினார்கள். காலை விரிவுரைகள் ஆரம்பமாகி ஒருசில நிமிடங்களில் அவளின் பின்புற சட்டையில் 'அந்த'ப் படத்தை ஒட்டிவிட்டார்கள். ஒட்டும்போது அவளின் நெருங்கிய தோழிகள் கண்டுகொள்ளவே, கண்ஜாடை செய்து சொல்ல வேண்டாம் என தடுத்துவிட்டார்கள்.

அன்று முழுவதும் அதைச் சுமந்து கொண்டு திரிந்தாள் பிறின்ஷி. அவளின் தொங்கல் நடைக்கு ஏற்ப அதுவும் நடந்தது. அவளைக் கடந்து செல்பவர்கள், அவளைப் பார்த்து விநோதமாக சிரிப்பது போல இருந்தது பிறின்ஷிக்கு. ஆனாலும் அதன் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை. மதியம் கடந்து வந்த முதலாவது விரிவுரையின் போதுதான் தனது சட்டையில் ஒட்டியிருந்ததை அறிந்தாள் அவள். அப்போது நில அளவையியல் விரிவுரை ஆரம்பமாக இருந்தது. அந்த விரிவுரையை எடுப்பவர் எழுபது வயதைத் தாண்டிய முதியவர். தனிக்கட்டை. திருமணமே செய்து கொள்ளாதவர். அவரை நாங்கள் 'ஷேர்வேயின் தாத்தா' என்று அழைப்போம்.

 அந்தப் பேப்பரில் ஒரு ஆண்குறியின் படம் வரையப்பட்டிருந்தது. அவமானத்தில் பிறின்ஷியின் கண்கள் குளமாகின. கவலையில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அந்தப் படத்தைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வெளியே விரிவுரையாளருக்காகக் காத்திருந்தாள். தூரத்தே விழுந்து விடுமாப் போல தள்ளாடி சோர்வடைந்தவர் போல வருகின்றார் 'ஷேர்வேயின் தாத்தா'. அவரைக் கண்டதும், படத்தைக் கீறி ஒட்டியவர்கள் விரிவுரை நடக்கும் மண்டபத்தின் மறுவாசலால் விரைந்து வெளியேறினார்கள்.

"சேர்! சேர்!!" என்று நா தழுதழுத்தாள் பிறின்ஷி. "பதட்டப்படாதீர்கள்...  சொல்லுங்கள்" அவளைத் தோளில் அணைத்த படியே வகுப்பறைக்குள் கூட்டிச் சென்றார் விரிவுரையாளர்.

"சேர்! இதைத் தூக்கிக் கொண்டு நாலைஞ்சு மணித்தியாலமாக நான் அலைந்து கொண்டு திரிந்திருக்கிறேன். இதை ஒட்டியவர்களைக் கண்டு பிடித்து கடுமையான தண்டனை கொடுங்கள்" அழுதாள் பிறின்ஷி.

விரிவுரையாளர் அந்தப் படத்தை உற்றுப் பார்த்தார். பின்னர் புன்முறுவலுடன் அதை எல்லோருக்கும் தூக்கிக் காட்டினார். வகுப்பில் அமைதி நிலவியது.

"பை அவேர்ஸா காவிக்கொண்டு திரிஞ்சிருக்கிறேன் சேர்! பை அவேர்ஸ்!!" குரல் ஒடுங்கிக் கீச்சிட்டாள் பிறின்ஷி.

"பிறின்ஷி... நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். நான் இதை எழுபது வருஷமாக சுமந்து கொண்டு திரிகின்றேன். எப்போதாவது இதைச் சுமையெண்டு நினைச்சுக் கவலைப்பட்டிருக்கிறேனா? என்னையும் கொஞ்சம் நீர் ஜோசித்துப் பாரும். இதற்கெல்லாமா கவலைப்படுவது? சும்மா விட்டுத் தள்ளும்" விரிவுரையாளர் ஒரு தடவை செருமிவிட்டு சொன்னார்.

மாணவர்கள் அவரது அந்த விரிவுரையில் பூரித்துப் போனார்கள். பிறின்ஷியும் தான்.

1 comment:

  1. Hello,

    This comment is from B.Balasooriyan who was your 1982 batch mate. I have just read your short story which won the prize.
    I am looking for your contact. My Email address is balasooriyan@yahoo.com.
    Regards,
    B.Balasooriyan
    03.08.2014

    ReplyDelete