Friday, June 7, 2013

ஆல்பியின் கல்யாணம்

அல்பிரடோவை எனக்கு இருபது நாளாகத்தான் தெரியும். நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த கம்பனியில் அவன் System admin. அதாவது எங்களுக்கு வரும் network சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான் அவனது தலையாய கடமை. அவனை மெக்ஸிகோக்காரன் என்றுதான் எங்களுக்கு தெரியும். ஐம்பது வயதானாலும் முப்பத்தைந்து வயது ஆண்மகன் போன்ற ஒரு மிடுக்கான தோற்றம் இருக்கும். Officeக்கு smartஆக வருபவர்களில் இவனும் ஒருவன். அவனை "ஆல்பி" என்று செல்லப்பெயர் வைத்து
கூப்பிட்டால் சந்தோசப்படுவான். ஆகவே நாங்களும் அப்படியே கூப்பிடுவோம். எவ்வளவு கஷ்டமான பிரச்சனை என்றாலும் நிதானமாக செயல்படுவான். ஒவ்வொரு நாளும், அவன் வேலை முடிந்தது வெளியேறும்போது நேரத்தை பார்த்தால் சரியாக மணி ஆறு என்று
காட்டும். ஆனாலும் ஆறு மணிக்கு.பத்து நிமிடங்களுக்கு முன்னதாக யார் என்ன வேலை கொடுத்தாலும் ஒன்றும் சொல்லாமல் பொறுப்பேற்பான். ஆனால் மாலை ஆறு மணியானால் வைத்ததை வைத்துவிட்டு டாண் என்று வெளியேறி விடுவான். இப்படித்தான் ஒரு முறை IT manager ஏதோ
ஒரு முக்கியமான விஷயத்தை கொடுத்துவிட்டு Washroom போய் வருகிற gapஇல் ஆல்பிரடோ ஆறு மணிக்கு escape ஆகி விட்டான். IT Manager தாம் தூம் என்று குதிக்க அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் அந்நிகழ்வை பற்றி chat செய்து விவாதித்தோம். மதிய உணவு இடைவேளையின்போது தாராம் சிங் IT Manager முதல் நாள் கோபத்தில் கத்தியது போன்று நடித்துகாட்டினான். அல்பிரடோ அதை கண்டு கொள்ளவில்லை. தாராம் சிங் அல்பிரடோவுடன் எப்போதும் எதாவது ஒரு விசயத்துக்காக கொளுவிக்கொண்டிருப்பான். இவர்கள் இரண்டு பேர்களிடையே எப்போதும் எதாவது ஒரு சப்பை விசயத்துக்காக விவாதம் நடக்கும். "இந்த மெக்ஸிகோக்காரர்கள் எல்லாம் இப்படித்தான்.. இங்கிதம் தெரியாத பயல்கள்" என்று தாராம் சிங் ஸ்டைலான ஆங்கிலத்தில் முடிவுரை வழங்குவான். இதனை தமிழில் சொல்லும்போது ஒரு மாதிரியா இருந்தாலும் தாராம் சிங்கின் ஆங்கில உச்சரிப்பு அதன் அர்த்தத்தின் காரத்தை குறைத்து விடும்.

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் பின்னர் கொஞ்ச நேரம் Table tennis விளையாடுவோம். IT Manager ஏதாவது ஒரு மீட்டிங்க்கு போய் விட்டால் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக விளையாடுவோம். தாராம் சிங் எப்போதும் அல்பிரடோவுடன் மோதுவான். தாராம் சிங்க்கு எனது வயதுதான் இருக்கும். சும்மா வளைந்து வளைந்து விளையாடுவான். ஆல்பி மூச்சிரைக்க கஷ்டப்பட்டு ஓடியாடி விளையாடுவான். தாராம் சிங் வென்று விட்டால் வெற்றியில் ஐந்து நிமிடமாவது கொக்கரிப்பான். அதனை தடுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அல்பிரடோ உயிரை கொடுத்து விளையாடுவான். ஆனாலும் அவன் ஒரு முறையும் வென்றதாக சரித்திரம் இல்லை. இரண்டு மூன்று மேட்ச் தோற்ற பின்னர்தான் அப்பிராணியான என்னுடன் விளையாட வருவான் அல்பிரடோ. என்னுடன் விளையாடி வெற்றி பெற்று மனதை தேற்றிக்கொள்வான்.
வேலை நேரத்துக்கு முடியும் நாட்களில் என்னை காரில் ஏற்றி சென்று ரயில் நிலையத்தில் விட்டு விடுவான். அவனால் எனது கட்டாய அரை மணி நேர நடைபயிற்சியிலிருந்து தப்பித்துக்கொள்வேன். அவ்வாறான நாட்களில் அவனுடன் உரையாட வாய்ப்பு கிடைக்கும். "நீங்க எப்ப மெக்ஸிகோவிலிருந்து வந்தீங்க" என்று ஆரம்பித்தேன். "என்னுடைய சொந்த நாடு பொலிவியா.. இந்த அவுஸ்திரேலியர்களுக்கு பொலிவியா என்றோதொரு நாடு உலக Mapஇல் இருப்பதே தெரியவில்லை.. ஆகவே பக்கத்தில் இருந்த மெக்ஸிகோவை எனது நாடு என்றேன். எல்லோருக்கும் விளங்குது" என்றான். இப்படி கதைத்துக்கொண்டே காரில் போகும்போது பின்னால் வந்த கறுப்பு கார் எங்கள் காருக்கு அண்மையாக overtake செய்து கொண்டு போனது. பத்து சென்டிமீட்டர் தூரம்தான் இருந்திருக்கும். "இப்படியே போ உனக்கு நரகம்தான் கிடைக்கும்" என்று கூவினான் ஆல்பி. அதோடு சேர்த்து, இரண்டு மூன்று ஸ்பானிஷ் கெட்ட வார்த்தை சொன்னான். நல்லவேளை எனக்கு ஸ்பானிஷ் தெரியாது. இங்கு மொழிபெயர்க்க வேண்டியதில்லை. அவனது முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

"இந்த பயல்களுக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடப்போவதில்லை" என்றான். அந்த கறுப்பு காரின் பின்னால் விரட்டி கொண்டு போனான். வேகம் என்றால் பயங்கர வேகம். எனக்கு குடல் தொண்டையில் தட்டுபடுவது போல உணர்ந்தேன். நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் தாண்டி கார் சீறிக்கொண்டு போவதை பார்த்து முழித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இடம் வந்து விட்டது. என்பதை சொல்லுவமோ என்று யோசித்து அவனது சிவப்பேறிய முகத்தை பார்த்ததுமே ஒரு வார்த்தை வரவில்லை. பத்து நிமிஷ வெறி பிடித்த ஓட்டத்தின் பின்னர் அந்த கறுப்பு காரை நெருங்கினோம். கண்ணாடியை திறந்து நடுவிரலை உயர்த்தியவாறு அந்த காரை overtake செய்தான். அதன்பின்னர்தான் அவனது தலைக்கேறிய இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பாகங்களுக்கு சென்றடைய முகத்தில் கடுமை தன்மை
குறைந்தது. "எப்படி துரத்தி பிடிச்சேன்.. பார்த்தாயா" என்றான். நான் திரு திருவென்று முழிப்பதை அப்போதுதான் கவனித்திருந்தான்.

"அடடா.. ரயில் station தாண்டிடுச்சே" என்றான். அப்போதுதான் அவனது கோபத்தினால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை அவதானித்திருந்தான். திடீரென்று சிரித்துக்கொண்டே "நான் எப்பவுமே இப்படித்தான், என்னை ஒருவரும் கார் ஓடுவதில் மிஞ்சி விட முடியாது." என்றான். "இல்லை பரவாயில்லை என்னை அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டால் பரவாயில்லை" என்றேன் எச்சிலை விழுங்கிக்கொண்டே. "எனக்கு கொஞ்சம் கூட கோபம் வரும். அவுஸ்திரேலியாவுக்கு வரும்முன்னர் பொலிவியா இராணுவத்தில் இரண்டு வருஷம் இருந்திருக்கேன். அப்போதெல்லாம் எடுத்ததேற்கெல்லாம் கோபம் வரும். இப்ப எவ்வளவோ better" என்றான். ஒருவாறாக அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கி விட்டபின்னர்தான் எனக்கு நிம்மதி வந்தது. அவனுக்கு நன்றி சொல்லியபோது எனக்கே நான் சொன்னது காதில் எதுவும் விழவில்லை.

இப்படியே சில நாட்கள் கடந்தது. ஒரு நாள் மத்தியானம் சாப்பிட சூரிய வெளிச்சத்தில் அமர்ந்திருந்தோம். வசந்த காலம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. இவ்வளவு காலம் இருந்த கடுமையான குளிரினால் வெளியே செல்வதை தவிர்த்தோம். வசந்த காலத்தொடக்கத்தில் இதமான சூரிய ஒளியில் உணவருந்தினோம். தாராம் சிங் அன்று  காலைதான் IT Managerஉடன் கடுமையாக ஒரு deadline சம்பந்தமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அதனால் Lunch Timeஇல் கூட சிரத்தையாக வேலை செய்வது போல பாவனை செய்து கொண்டிருந்தான். ஆகவே அவன் எங்களுடன் உணவருந்த வரவில்லை. சைனாக்காரன் "சான் லீ" அன்று லீவு. ஆகவே அன்று நானும் ஆல்பியும் மாத்திரமே அன்றைய Lunch இல் ஆஜர். தாராம் சிங்கின் அறுவை காரணமாக வாயை திறக்காத ஆல்பி அன்று மட்டும் கொஞ்சம் சகஜமாக கதைத்தான்.

"இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் பொலிவியாவுக்கு திரும்பி போயிருக்கிறீங்களா"

"ம்ம்.. அதுக்கு பன்னிரெண்டு வருசமாச்சு.. ட்ரெயினில் போய் இறங்கினப்போ ஊரே என்னை பார்க்க வந்திச்சு"

"அண்ணை ஊருக்குள்ள செல்வாக்கான ஆசாமி போலும்" என்று சிரித்தேன்.

"இல்லை. எனக்கே ஆச்சர்யமாத்தான் இருந்திச்சு.. அண்ணாதான் சொன்னான்.. எனக்கு அம்மா கல்யாண ஏற்பாடு செஞ்சிருந்தா என்று"

"மகிழ்ச்சியான விசயம்தானே.. உனக்கு அதிர்ஷ்டம்தான் போ" என்றேன். அவனின் முகத்தில் சலனமில்லை. எனது முகத்தை உற்று நோக்கினான்.

"பன்னிரெண்டு வருஷம் கழிச்சு எல்லோரையும் பார்க்க போறேன். யாரோ ஒரு பொண்ணை காட்டுறாங்க. இதுவரை பார்க்காத ஒரு புதுபெண்ணு. அடுத்த நாள் என்னோட மனைவி. என்னால் எச்சிலை கூட விழுங்கமுடியவில்லை"

"கொஞ்சம் அதிர்ச்சியான விசயம்தான். பிறகு என்ன நடந்திச்சு" என்றேன் ஆர்வமாக.

"அப்பா இல்லாத எங்களை அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தா.. அப்போது அது ஞாபகத்துக்கு வரலை.. அன்றைக்கு அவளை கடுஞ்சொற்களால் திட்டினேன். அண்ணா பிடித்திராவிட்டால் அவளை அடிச்சிருப்பேன். அம்மா எனக்கு செஞ்ச காரியத்துக்கு இன்னும் அவளை

மன்னிக்கவில்லை" என்றான். அவன் கண்களில் முட்டிய கண்ணீரால் கண்கள் வசந்த கால சூரிய ஒளியில் ஒளிர்ந்தது. "எல்லோரும் என்னிடம் கதைத்தார்கள். அண்ணா என்னை சமாதானப்படுத்தினான்.. என்னோட நிலைமையை வனேஸ்ஸாவுக்கு தனியாக சந்தித்து விளக்க முயற்சித்தேன். இந்த கல்யாணத்தை மிகவும் எதிர்பார்த்திருந்ததாக வனேஸ்ஸா சொன்னா. மற்றவங்க மனசை புண்படுத்த என்னால முடியலை"

"வனேஸ்ஸா சொன்னவுடனே ஹீரோ ஒத்துக்கொண்டிருக்காரு போல" என்றேன் சிரித்தவாறு.

"இல்லை. இது இப்ப சாதாரண விசயமா இருந்தாலும் அப்போது என்னை வாட்டியேடுத்தது. அதை பற்றி நினைத்தாலே இப்போது கூட நெஞ்சில் இடது பக்கத்துக்கு கீழே ஒரு வலி வரும்" நெஞ்சை மெதுவாக அழுத்தினான். இப்போதுகூட வலி வந்திருக்க வேண்டும்.

நான் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு மௌனமாக அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.

"ஏய் நண்பா! என்ர சோகக்கதையை கேட்டு அழுதிறாத! தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தாலும் இப்ப உலகத்திலே மகிழ்ச்சியான couple நாங்கதான். விஸ்கி அடிச்சது மாதிரி மூஞ்சியை வச்சிருக்காத. வா ஒரு Drive போய் வருவோம். Dessert வாங்கித்தாறேன். செலவு என்னோடது" என்றான்.

7 comments:

  1. அந்த கடைசி பத்தி இந்த பதிவில் நடுவில் ஆரம்பித்த Toneஐயே மாற்றி விட்டது.

    உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இது போன்ற சுவாரஸ்யமான மனிதர்கள் கிடைக்கிறார்களோ?

    தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஸ்வா.. நீண்ட நாள் முடிவு எழுதாமலே Text fileஇல் தூங்கிக்கொண்டிருந்த பதிவு.. அவ்வளவு நன்றாக இல்லாததால் publish பண்ணவில்லை.. முடிவு எழுதியபின்னர் பரவாயில்லை போலிருந்தது, ஆகவே publish பண்ணிவிட்டேன்

      Delete
  2. நல்ல வேலை அடுத்த ஸ்டேஷனிலாவது சென்று ரெயிலை பிடித்தீர்களே?

    ReplyDelete
  3. Really interesting

    ReplyDelete
  4. Really interesting

    ReplyDelete
  5. பொறுமையாய் பின்னூட்டம் இடக்கூட நேரம் வாய்க்காமல் தவிக்கும் காலத்தில் அருமையாக, பொறுமையாக எழுதி பதிpட்டிருக்கிறீர்கள். உங்களது அனுபவப் பதிவுகள், அந்த இடத்தில் நாங்களும் இருந்தது போன்ற உணர்வைத் தருகின்றன. தொடர்ந்தும் எழுதுங்கள். ரசிக்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete