Wednesday, July 25, 2012

இது ஒரு குளிர் காலம்!


உல்லாச பறவைகளாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தோம். மறைக்கப்படாத ஒரே இடமான முகத்தில் குளிர் காற்று அடித்தது. வெளியே பெய்த மழையில் கார் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் கைகளை உரசி சூடேற்றினோம். துருவா வேகமாக ஓடிப்போய் டிரைவர் சீட்டில் இடம் பிடித்து முதல் வேலையாக எஞ்சினை ஸ்டார்ட் செய்து ACயை போட்டான். "கதவை பூட்டுங்கடா.. குளிர் வரப்போகுது" என்றான். அவன் ஒருத்தனுக்குத்தான் கார் ஓட்டத்தெரியும். ஆகவே அவனின் கட்டளையை மதித்தோம். ஜோ எப்போதுமே முன் சீட்டில்தான் இருப்பான். துருவாவின் டிரைவிங்க்கு பின் சீட்டுதான் எனக்கு பாதுகாப்பு. அவன் எப்போவுமே திடீர் என்று வேகமா எடுப்பான், ஸ்பீட்லிமிட் அறிவிப்பினை பார்த்தவுடன் ப்ரேக் போட்டு வேகத்தினை குறைப்பான். அம்பது மீட்டருக்கு ஒருக்கா எது எதற்கோ ப்ரேக் போடுவான். நல்லவேளை சீட் பெல்ட் புண்ணியத்தால் எங்கள் பற்கள் பாதுகாக்கப்பட்டன. இவனுடன் ரெண்டு நாள் காரில் போனாலே மூன்றாம் நாள் காரில் போய் விபத்து ஏற்படுவது போல கனவு வரும். ஆனாலும் இந்த குளிரில் Train ஏறி நீண்ட நேரம் நடுநடுங்கி Apartment போய் சேர்வதை விட கார் அக்சிடென்டில் ஒரு வினாடியில் நரகம் போய் சேரலாம் என்பது நல்ல டீலாகவே இருந்தது. 

"இன்னிக்கு வேலை எப்படிடா மச்சான்" என்று பின்னேரத்துக்குரிய வழமையான கேள்வியை ஜோ தொடங்கினான். அவனுக ரெண்டு பேருக்கும் தமிழ் தெரியாது. ஆகவே வேலை நேரம் மட்டுமில்லாமல் எப்போதுமே இங்கிலிஷ்தான். ஆகவே மச்சான் என்பதை Dude என்றோ Mate என்று நாங்கள் பேசிக்கொண்டதாக நினைத்துகொள்ளுங்கள்:). "சைனாக்காரன் எல்லா வேலையையும் என்ட பக்கம் தள்ளுறாண்டா.. அவன் கதைக்கிற இங்கிலிஷும் புரியல.. அவன் எழுதின codeஉம் புரியல" என்று ஜோ தனது வழமையான பல்லவியை தொடங்கினான். "எனக்கு பரவாயில்லைடா மச்சான்! அந்த வெள்ளைக்காரன் சில்வெஸ்டருடன்தான் நாலு நாளா வேலை.. அவன் தெய்வம்டா.. ஒண்ணுமே கேட்க மாட்டான்.. ஒரு Deadline இல்லை.. முடிச்சிட்டியா என்று ஒரு கேள்வி கேட்க மாட்டான்.. நான் என்ர பாட்டுக்கு ஜாலியா code பண்ணிட்டிருப்பேன்" என்று சத்தமாக சிரித்தான்.

என்னுடைய நிலைமை இவனுகளைவிட கொஞ்சம் மோசம். இவ்வளவு நாளா ஜாலியா வீட்டை அம்மா சமைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டு ஒன்பதரை மணிக்கு வேலைக்கு போய் கொண்டிருந்த எனக்கு ஆஸ்திரேலியா விண்டர் குளிரில் ஆறு மணிக்கு எழும்பி எனக்கான உணவை நானே தயாரித்து எட்டு மணிக்கே நடுநடுங்கும் குளிரில் வேலைக்கு போக வேண்டிய தூரதிஷ்டத்தினை நொந்து கொண்டேன். வேலைக்கு போனால் காலை ஒன்பது மணிக்கே தூக்கம் வந்து விடும். இலங்கையில் அப்போது நாலரை மணிதானே. இப்படித்தான் ஒருநாள் அரைத்தூக்கத்தில் இமை கண்ணை மூடும்போது Hi Mate! how do u do! என்று என் தூக்கத்துக்கு இடைஞ்சலாக ஒரு குரல். அது கெவின். பாவிப்பயல் நான் தூங்கி வழிவதை பார்த்திருப்பானோ. இந்த கெவின் புதிதாக வந்த பயல். வயதோ முப்பதுகளின் நடுவிலிருக்கும். அவனது computer wallpaperஇல் கிருஷ்ணர் ராதா படமிருக்கும். கேட்டால் தான் ஒரு இந்து என்பான். அவனது இந்திய மனைவியை மணந்த பின்னர் இந்துவாக மாறியதாக கூறினான். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வட இந்திய snacksஐ கொரித்துக்கொண்டிருப்பான். புது இடத்தில் வேலை செய்ய திணறிக்கொண்டிருந்த எனக்கு உதவிகள் செய்தான். போன வருடம் இந்தியா போனபோது ஆதவற்றோர் இல்லங்ககளுக்கு சென்று உதவி செய்ததாக சொன்னான். என்னையும் ஒரு ஆதவற்றவனாக கருதி நான் install பண்ண தடுமாறிக்கொண்டிருந்த Applicationஐ எனது Laptopஇல் Setup பண்ண உதவினான். இவன் வியாழக்கிழமை காலை ஏழு மணிக்கு அங்கு வேலைக்கு நேரத்தோடு வரும் எல்லோருக்கும் யோகா சொல்லிக்கொடுத்தான்.

எங்களுக்கு ஒரு அபார்ட்மென்ட் தரப்பட்டிருந்தது. நாங்களே சமைக்க வேண்டும். வீட்டில் அம்மா ஒளித்து வைத்த மிக்சர், பிஸ்கட் திருட மட்டுமே சமையலறைக்கு சென்றிருக்கிறேன். எங்களில் "ஜோ"தான் தைரியசாலி. கண் எரிந்தாலும் இரண்டு வெங்காயத்தை இரண்டு நிமிசத்தில் நறுக்கிவிடுவான். ஆகவே ஜோதான் சமையலை தலைமையேற்று நடத்துவான். எனக்கு காரட், தக்காளி வெட்டுற மிக முக்கிய பொறுப்பு. ஜோ ஏதாவது ஒரு கறியை தத்து பித்து என்று வைத்து விட்டு "சாப்பிடுறா மச்சான்! இன்னிக்கு கறி சூப்பர்" என்பான். நானும் நாக்கில் படாமல் குடிகாரப்பயல்கள் சரக்கடிப்பது போல பட்டென்று விழுங்குவேன். நாக்கில் பட்டால் வாழ்க்கை வெறுத்துவிடும். நாங்கள் செய்யும் மத்தியான உணவு நால்லாயிருக்குமோ இல்லையோ வேலை செய்யும் இடத்தில் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும் போது நடக்கும் சம்பாஷணை நன்றாக போகும். இப்படித்தான் ஒருநாள் எல்லோரும் கூடியிருந்த Lunch Roomஇல் எனது உணவின் முதல் கரண்டியை விழுங்கினேன். தொண்டை சும்மா எரிந்தது. ஆனாலும் உணவின் சுவையினால் நிறுத்தாமல் சாப்பிட்டேன். துருவாவுக்கு காரம் பிடிக்கும் ஆகவே கறிக்குள் மிளகாய் தூளை கண்ட மேனிக்கு கொட்டுவான். எனக்கு கண்ணால் கண்ணீரும் வழிந்தது. ஜோ மூக்கை உறிஞ்சிக்கொண்டு சாப்பிட்டான். இதைப்பார்த்து அல்பிரடோ சிரித்தான்.

அல்பிறேடோ மெக்ஸிகோக்காரன். வயது சுமார் அம்பது இருக்கும். எல்லோரும் அவனை ஆல்பி என்றுதான் கூப்பிடுவார்களாம். எங்களையும் மனுசனுகள் மதித்து நட்பாக கதைப்பவர்களில் அவனும் ஒருவன். அவன் சொல்லும் ஜோக்கை விட அவன்  கொண்டு வரும் உணவுகள் பார்க்க அழகாக இருக்கும். எங்களுக்கும் தரமாட்டானா என்றிருக்கும். "அவ்வளவு உறைப்பாகவா இருக்கு" என்று எங்கள் கறியில் கொஞ்சம் சுவைத்தான். "இதெல்லாம் ஒரு காரமா? நாங்கள் மெக்ஸிகோவில் இதைமாதிரி பத்து மடங்கு காரம் சாப்பிடுவோம்" என்றான். உலகிலேயே நாங்கள்தான் அதிக காரம் சாப்பிடுவோம் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். "பத்து வருசத்துக்கு முன்னாலே மெக்ஸிகோவிலிருந்து என்னை பார்க்க வந்த எனது மாமா நாலு பக்கெட் மெக்ஸிகன் மிளகாய் கொண்டு வந்தார் ஆஸ்திரேலிய Customs பயல்கள் அதை பறித்து விட்டான்கள். ஆனாலும் கோட் pocketஇல் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மிளகாய் பாக்கெட்டை எனக்கு தந்து ஆச்சர்யப்படுத்தினார்" என்று மிளகாய்க்கும் அவனுக்குமான உறவுக்கு சுர்ரென்ன்று ஒரு உதாரணம் சொன்னான். ஜெய் சிங் சீக்கிய இனத்தவன். அவனுக்கு இந்த கதை கேட்டே நாக்கில் உறைப்பது போன்று உஷ்.. உஷ்.. என்று சப்புகொட்டினான். அவனுக்கு மிளகாய் என்றாலே அலர்ஜியாம். சிறுவயதில் இருந்தே ஆஸ்திரேலியாவில் வாழ்ந்ததால் எப்போதும் உப்புசப்பில்லாத பேர்கர் பன்தான் அவனது தேசிய உணவு.

காலையில் எழுந்து பற்கள் கட.. கட,, என்று அடித்துக்கொண்டிருக்க வேலைக்கு போவது கடினமாக இருந்தாலும் அந்த குளிர் எனக்கு பிடித்திருந்தது. இதுவரை காலமும் சிகரெட் பிடித்திராத எனது வாயிலிருந்தும் புகை வந்தது. என்னதான் குளிராக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் சிவனே என்று எட்டரை மணிக்கே வேலைக்கு ஆஜராகி விடுவோம். ஆனால் எனக்கு பக்கத்தில் இருக்கும் சைனாக்காரன் பத்து மணிக்கு ஜாலியா வந்திறங்குவான். குட் மோர்னிங் சொன்னாலும் பதிலுக்கு ஏதாவது வாய்க்குள்ளே சொல்லுவான். இதுவரை காலமும் தமிழை அப்படி இங்க்லிஷில் வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றி கதைக்கும் சீவன் நான் ஒருவன்தான் என்று எண்ணியிருந்தேன். ஆனால் இந்த சைனாக்காரன் எழுத்துக்கு எழுத்து சைனிஸ் மொழியை இங்கிலீஷ் வார்த்தைகளாக மாற்றி கதைத்தான். அவன் சொன்ன ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்க அஞ்சாறு நாட்கள் எடுத்தது. அவனோடு ஒரு Projectஇல் வேலை செய்த போது ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமாக இருந்தது. அவன் மனதுக்குள் ஒரு Designஐ போடுவான். அதற்கேற்றவாறு எனக்கு Taskக்குகளை எனக்கு வழங்கினான். ஆனால் ஏன் இவ்வாறு செய்கிறோம் என்றோ Design பற்றியோ சொல்ல மாட்டான். அதை பற்றி அவனிடம் கேட்டால் சம்பந்தமில்லாமல் ஏதாவது சொல்லுவான். இதைதான் Software சொல்வளத்தில் Collyer brothers Syndrom என்பார்கள். Collyer brothers பற்றிய கதை பரிதாபமான சுவாரசியமான சகோதரர்களின் வாழ்க்கை. அவர்களை போலவே மனக்கதவை இறுக்கமூடி சரியாக communicate பண்ண மறுக்கும் Developerஐ இந்த பெயரின் மூலம்தான் அழைப்பார்கள்.

இலங்கையில் எனது அலுவலகம் காமா சோமாவேன்று அமைதியாக இருக்கும். யாராவது சத்தமாக கதைத்தாலும் எல்லோர் கண்ணும் அவர்களை கடுமையாக நோக்கும். ஆனால் இந்த அலுவலகத்தில் சத்தத்துக்கு பஞ்சமிருக்காது. வந்த முதல் நாள் எனது இருக்கையில் முன்னால் டக்.. டக்.. என்று ஆணி அடிப்பது போலான சத்தம் கேட்டது. அலுவலக நேரத்தில் யாராது ஆணி அடிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தால் எனக்கு முன்னால் இருந்த "கமேரன் வைட்" சத்தமாக காலை தட்டியவாறே Headphoneஇல் அதிரடியான பாடலை ரசித்துக்கொண்டு வேலையிலாழ்ந்திருந்தான். பாடலின் Beat அதிகமாக அவனது கால்களினால் ஏற்படுத்தும் ஓசையும் அதிகமானது. திடீரென்று Oh! Come on.. You can't do this to me.. என்று computer screenஐ பார்த்துக்கெஞ்சினான்.
அடப்பாவி இவன் ஆபீஸ் இவன் லவ்வருடன் Skype call கதைக்கிறான் போல என்று அவன்மேல் காண்டானேன். சிலவேளைகளில் S#!T, F^*& போன்ற இன்சொற்களால் அர்ச்சனை செய்தான். இவன் யாருடன்தான் ஒவ்வொரு நாளும் இப்படி கதைக்கிறான் என்று எனக்கு ஆர்வம் மேலிட மெதுவாக அவன் பின்னால் எதேச்சையாக செல்வது போல சென்று பார்த்தேன்.. பாவிப்பயல் Eclipse IDEஇல் PHP Codeஐ பார்த்துக்கொண்டு கதைத்துக்கொண்டிருந்தான். ஒரு Codeஐ எழுதிவிட்டு Test செய்யும்போது பிழைத்தால் Come on Dear என்றான். மீண்டும் ஒருமுறை பிழைத்தால் S#!T அடுத்த முறை பிழைத்தால் F^*& என்று வார்த்தைகளில் காராசாரத்தை கூட்டினான்.

ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும் மனக்காலன்டரில் இன்னும் எத்தனை நாட்கள் இந்த உப்புசப்பில்லாத் (சிலநேரங்களில் உப்பு அதிகம்) உணவை சாப்பிட வேண்டுமோ என்று கணக்குப்பார்ப்பேன். எனக்கு அவங்கள் தந்திருக்கிறது மூன்று மாச விசா. இதுவரை முப்பது நாட்கள் முடிந்துவிட்டன என்று காலையில் சந்தோசப்பட்டேன். ஆனால் இரவு உணவை விழுங்கும்போது இன்னும் அறுபது நாட்கள் இருப்பதை எண்ணி வருந்தினேன். வேலை நாட்கள் அநியாயத்துக்கு போரடித்தாலும் வார இறுதி நாட்களில் சிட்னியில் ஏதாவது ஒரு தமிழ் நிகழ்வுக்காகவாது போய் வரக்கிடைக்கிறது. JK அண்ணா இரண்டு மாசத்துக்கு முதலே கம்பன் விழாவுக்காக சிட்னி வருவதாக சொல்லி விட்டார். இம்முறை அண்ணரும் சுழலும் சொற்போரில் பங்கேடுப்பதால் இம்முறை சிட்னி கம்பன் விழாவை காண ஆவலாக இருந்தேன். கொழும்பில் கம்பன் விழா நடந்தாலும் ஒரு நாளும் சென்றதில்லை, ஆகவே முதன்முறையாக நான் ஆஜர்.

நிகழ்வு நடந்த இடம் சிட்னி முருகன் கோயில். ஆகவே ஒன்பது மணிக்கு அங்கு சென்று எனது காலணியை கழற்றி கொண்டிருந்தபோது ஒரு பரிச்சயமான குரல்.. வேற யாரு JK அண்ணாதான். குர்தா போட்டு வேட்டி கட்டிக்கொண்டு வந்தார். காலில் இருந்த Sport Shoeதான் பொருத்தமில்லாமல் கொளுவப்பட்டிருப்பது போலிருந்தது. வழமையான புன்னகையுடன் "எப்படியிருக்கே" என்றார். நேரமாகி விட்டதால் அவசர அவசரமாக மண்டபத்துக்கு சென்றோம். போகும்போது வேட்டியை கொஞ்சம் தூக்கியவாறு நடந்தார். நான் விநோதமாக பார்க்க "தம்பி! நான் போட்டிருக்கிறது Nike Shoeடா. Jeans என்றா பரவாயில்லை. இந்த வேட்டி மறைக்குது" என்றார். அண்ணா Nike/Armani Brandகளுக்கு "அழையா" Brand Ambassadorஆக இன்னமும் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது. விழாவின் தொடக்கத்தில் பேசிய தமிழகத்தை சேர்ந்த பேச்சாளர்களின் பேச்சுகள் நகைச்சுவை + இலக்கியம் கலந்து செவிக்கு இனிமை சேர்த்தன. அதன்பிறகு நான் மிகவும் எதிர்பார்த்திருந்த சுழலும் சொற்போர் ஆரம்பித்தது. "டேய்! நான் என்ன கதைச்சாலும் நல்லா கையை தட்டுடா" என்று சொல்லிக்கொண்டே மேடையேறினார் அண்ணா. அதில் JK உட்பட மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றனர். முதலில் பேசிய சர்மா "தொண்டு" பற்றிய விளக்கத்தினை வலிமையான கம்பராமாயண பாடல்கள் சகிதம்  விளக்கினான். பின்பு பேசிய JK ஒருவித மென்மையான குரலில் ஆரம்பித்தாலும் பின்பு இயல்பாக பேச்சினால் தனது வாதத்தினை வைத்தார். அவரது தலைப்பு "தியாகம்". சமகால நிகழ்வுகளை கம்பரமயணத்துடன் வரிக்கு வரி இணைத்து வலிமையான விவாதங்களை முன்வைத்தார்.
இதுபோதாதென்று மற்றவர்களின் தலைப்புகளுக்கு எதிரான வாதத்தினை ஆணி அடித்ததை போல சொல்லி அமர்ந்தார்.

இவரின் இந்த தாக்குதலால் கோபமடைந்த மற்ற பேச்சாளர்களும் இவரை தாக்க தயங்கவில்லை. இவருக்கு பின்னால் பேசிய பெண் பேச்சாளர் இவருடைய பெயர் குமரன் என்பதால் இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கலாம் என்ற விவாதத்துடன் தொடங்க சபையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அண்ணா ஒரு கல்யாணத்துக்கு கூட Invitation கூட அனுப்பாமல் இரண்டு ரகசிய கல்யாணம் முடித்துவிட்டாரா என்று நானும் சந்தேகப்பட்டேன். எல்லாம் முடிந்த பின்னர் "அண்ணே உங்களுக்கு ரெண்டு மனைவிகளா" என்று அவரை கேட்க "எனக்கே அவங்க ரெண்டு பேரும் யாருன்னு சத்தியமா தெரியலடா" என்றார்.

7 comments:

  1. அட்டகாசமான நடை, இடையில் ஆங்காங்கே உங்களின் ஸ்டைலில் ஒரு புன்னகை வரவழிக்கும் விடயங்கள் என்று பதிவு செம ஸ்பீடில் சென்றது.

    ஆனால் ஒன்று, உங்களது பதிக்களின் நீளம் பதிவுனை படிக்க ஆரம்பிக்கும் முன் பயமுறுத்துகிறது. அதை மட்டும் சிறிய பதிக்களில் மாற்றுங்களேன்?

    தொடர்ந்து (வாரம் ஒருமுறையாவது) பயண அனுபவங்களை எழுதுங்களேன்?

    ReplyDelete
  2. ஹாய் விஸ்வா!
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.. இம்முறை நீளம் நிறையவே அதிகம்தான்.. இனி குறைத்து பதிவிடுகிறேன் :).

    ReplyDelete
  3. பதிவின் நீளம் ஒரு பிரச்சினையே அல்ல (கரும்பு தின்ன கூலியா?), ஆனால் பத்திகளின் நீளம் அதிகமாக இருப்பது தான் என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு ஆயாசமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. This is very interesting. You could better swap your career for writing novels instead of writing boring codes.

    Naren

    ReplyDelete
  5. Hi Naren Aththan,
    Thank you for your appreciation. I get ideas once in a while, so I cannot write consistently to make money. So I need to earn money by writing the boring code :)

    vimal

    ReplyDelete
  6. நீளம் பற்றி கவலை வேண்டாம் .. சிறந்த நடை இது .. நீங்க எவ்வளவு எழுதினாலும் வாசிக்கலாம் ..

    சொற்போர் பற்றி எழுதியதுக்கு நன்றி ... மற்றும்படி .. no comments :)

    ReplyDelete
  7. ஹாய் ஜேகே அண்ணா,
    உங்கள் பாராட்டுக்கும், மன்னிப்புக்கும் நன்றி :)..

    ReplyDelete